Friday, March 10, 2006

நிலையாமை - 1

பல மாதங்களுக்கு பிறகு ஒரு நண்பரை சந்தித்தேன். என்னை பார்த்தவுடன், “ஹி..ஹி.. நேற்று ஒரு ஆடை-குறைப்பு அரங்கத்திற்கு (அதாங்க ஸ்டிரிப் கிளப்.. இனி ஆ.கு.அ என்றே அழைப்போம்) சென்றிருந்தேன். அங்கே $1000 பணம் கண்ணு மண்ணு தெரியாத செலவு செய்து விட்டேங்க. இதைப் பற்றி திருவள்ளுவர் ஏதாவது சொல்லியிருக்காரா ? ” என்றார் நொந்து. எப்படி அங்கே கண், மண் போன்றவை அங்கே தெரியும் என்று நொந்து கொண்டு அவரிடம் “ஆமாம். உங்கள் செயலுக்கு மிகவும் பொருத்தமான குறள் ஒன்று உள்ளது” என்றேன்.

கூத்தாட்டு அவைக் குழாத்தற்றே – பெருஞ்செல்வம்
போக்கும் அது விளிந்தற்று.   [ நிலையாமை 34 : 2 ]

“கூத்தாடுகின்ற அவைக்கு வருகின்றவர்கள் கூடுவதும், பிறகு குறைவது போல , பெருஞ்செல்வம் வரும் போகும். அது நிலையானது அல்ல” என்று திருக்குறள் உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.  பெருஞ்செல்வத்தின் நிலையாமையை குறிப்பிடும் போது கூத்தாடுகின்ற அவையை ஏன் கூற வேண்டும்? கோவலனும் நம் நண்பர் போல் , மாதவி கூத்தாடுகின்ற அவைக்கு சென்று நாட்டியத்தில் மயங்கி மாலை ஒன்றை பரிசலிப்பதாக சிலப்பதிகாரத்தில் படிக்கின்றோன். அந்த மயக்கமே அவன் விதியை நிர்ணயிப்பதாக அமைகிறது.  இன்றும் அது பொருந்தும் தானே?  

நண்பரிடம் தொடர்ந்து கூறினேன். “ இக்குறளை சொல்லும் முன் இன்னொன்றையும் உங்கள் சூழலுக்குப் பொருத்தமாக கூறுகிறார் வள்ளுவர்”

நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவு ஆண்மை கடை.  [ நிலையாமை 34:1 ]

நில்லாதவற்றை நிலையானது என்னும் அறிவு கடையானது !.  ஆ.கு.அ வில் ஆடும் பெண்களின் அழகும் வனப்பும் நிலையானதா? அப்படி நிலையானது என்று உணர்ந்தால் அது உண்மையான அறிவா?

இப்படி நிலையில்லாத புறப்பண்புகள் கொண்ட செயல்களில் செல்வத்தை செலவழிக்காமல் வேறு என்ன செய்ய வேண்டும்?

அற்கா இயல்பிற்று செல்வம் – அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல்.  [ நிலையாமை 34 : 3 ]

செல்வம் நிலையற்ற வழிகளில் செலவழித்தால் அழிந்து போகும் தன்மை உள்ளது. ஆதலால் செல்வத்தை பெற்றோம் என்றால் , நல்ல செயல்களில் செலவழிக்க வேண்டும்.

நண்பரும் ஏதோ புரிந்ததுபோல் தலையாட்டினார்.

பேசிக்கொண்டே தேநீர் அருந்த அருகில் உள்ள கடைக்கு சென்றோம்….நிலையில்லாத இன்னொன்றை பற்றிப் பேச.
                         [ தொடரும்]

No comments: