மாத்திரை எனும் அளவு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலும், அமெரிக்காவில் பாராளுமன்ற தேர்தலும் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்திருக்கிறது. வேட்பாளர்கள் போட்டி கடுமை. ஒரு வேட்பாளர் இன்னொருவரை பார்த்து, " அவர் எனக்கு எம்மாத்திரம் ? " என்று சவால் விடுவதை மேடைகளில் பார்க்கிறோம்.
மாத்திரம்/மாத்திரை என்ற சொல் 'அளவு' என்பதை குறிக்கிறது. 'கண் இமை நொடியென அவ்வெ மாத்திரை' என்று தொல்காப்பியம்(எழுத்து அதிகாரம்- 7) கூறுவதை பார்க்கிறோம்.
எழுத்தின் அளவுகளை மாத்திரையால் அளந்த தமிழர்கள், இசையை அளக்கும் குறியீடாக பயன் படுத்தி இருப்பார்களோ? metre(English)- metron(Greek) - metrum(Latin) ஆகிய இசையை அளக்கும் சொற்கள்
http://cnx.org/content/m12405/latest/
மாத்திரை என்பதில் இருந்து வந்ததோ?
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர் அனையர் கல்லாதவர். [ கல்லாமை 41 : 6 ]
கல்லாதவர், இந்த உலகத்தில் உள்ளார் என்பது மாத்திரம் அல்லால், வேறு பயன் என்ன? அவர் களர்(பயிரிட முடியாத) நிலத்திற்கு ஒப்பாவர்.
கற்றவரை எப்படி அளவிடலாம்? சமுதாய பயன் - எழுதிய நூல்கள் - வழங்கிய உரைகள் - கண்டுபிடிப்புகள் - ஆக்கம் - என்று பல்வேறு அளவீடுகளை வைக்க முடியும். கல்லாதவரை எப்படி அளவிட முடியும்? 'அவர் இருக்கிறார்' என்னும் மாத்திரையால் மட்டும் அளவிட முடியும் அல்லவா?
உடம்பு சரியில்லை. மருத்துவரிடம் செல்கிறோம். அவர் 2 வகையான மாத்திரையை தருகிறார். ஒன்றை அடுத்த ஒரு வாரத்திற்கு காலை சாப்பிட்டபின் சாப்பிட வேண்டும். இன்னொன்றை இரவு சாப்பிட்டபின் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சாப்பிட வேண்டும். இத்தகைய சரியான அளவுகளை(சாப்பிடும் அளவு, நேரம், காலம்) கொண்டதால் தான் 'மாத்திரை' என்ற சொல் மருந்திற்கு பொருந்துகிறது அன்றோ?
ஆப்பிரிக்காவில் மேலைநாட்டு மருத்துவர் ஒருவர் பல்வேறு நோயாளிகளை சோதித்து மருந்துகள் கொடுத்துக் கொண்டே வந்தார். அப்படி ஒருவர் மருந்தை வாங்கி சென்றார். 3 வாரம் ஆனது. அந்த நோயாளிக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. மருத்துவரிடம் திரும்பி சென்றார். " நீங்கள் கொடுத்த மாத்திரையை தவறாமல் 3 வாரமாக சாப்பிட்டேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. புதிதாக வயிறும் சரியில்லாமல் போகிவிட்டது" என்றார் கவலையுடன். அந்த மருத்துவர் தான் கொடுத்த மருந்து சீட்டை வாங்கிப் பார்த்தார். மருந்து சீட்டில் எழுதியிருப்பதோ .... முதுகிலும் தொடையிலும் தடவிக் கொள்ளும் களிம்பு !!!!
கடந்த ஓராண்டுக்கு மேல் நான் ஆதரித்து வரும் தொண்டு நிறுவனம் - doctors without borders. சிறப்பாக தொண்டு ஆற்றிவரும் நிறுவனம். 1999 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற நிறுவனம்.
புத்தாண்டில் இந்தத் தொண்டு நிறுவனத்தை பற்றி பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
www.doctorswithoutborders.org
அனைவருக்கும் 2007 புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்
Sunday, December 31, 2006
Subscribe to:
Posts (Atom)