Saturday, November 04, 2006

அறிவு என்னும் தெய்வம்

யாராவது தவறு செய்துவிட்டால் 'அறிவு இருக்கா?' என்று கேட்கிறோம். எதிரே உள்ளவர் "அறிவு இல்லாததால் தான் உங்களை மாதிரி மனிதர்களுடன் பழகிக் கொண்டிருக்கிறேன்" என்று சொன்னால் நம் வாய் அமைதியாகிறது.

வகுப்பில் உள்ள மாணவர்களை பார்த்து ஆசிரியர் கண்களை மூடி இறைவனிடம் வேண்ட சொல்கிறார். ஆசிரியரும் மாணவர்களும் இரண்டு நிமிடம் அமைதியாக இறைவணக்கம் செய்கின்றனர். முடிந்தவுடன் ஆசிரியர் மாணவர்களை பார்த்து,
" நீங்கள் கடவுளிடம் என்னென்ன கேட்டீர்கள்" என்றார்.
' உயர்ந்த வேலை' , 'மகிழ்ச்சி' , 'செல்வம்' , 'வசதியான பெரிய வீடு', 'அழகான மனைவி' .. என்று ஒவ்வொருவராக பதில் சொல்ல ஆரம்பித்தனர். இதையெல்லாம் கேட்ட ஆசிரியர்,
" என்னப்பா, உங்களில் ஒருத்தர் கூட 'அறிவைக் கொடு' என்று வேண்டவில்லையே? நான் எவ்வளவு படித்திருந்தாலும் ' இறைவா, எனக்கு மேலும் நல்ல அறிவைக் கொடு' என்று வேண்டினேன்" என்றார்.

கடைசி வரிசையில் இருந்து ஒரு மாணவன்,
" அய்யா, நாங்கள் எல்லாம் எங்களிடம் இல்லாததை கேட்டோம். நீங்கள் உங்களிடம் இல்லாததை கேட்டீர்கள்" என்றானே பார்க்கலாம் !


நாங்கள் அட்லாண்டாவில் இருந்தபோது பக்கத்து ஊருக்கு சென்று வண்டியில் திரும்பி வந்துகொண்டிருக்கிறோம். அதிக போக்குவரத்து இல்லாத சாலை. சாலையில் இருந்த குப்பை பை ஒன்றில் வண்டி ஏறி கிரீச் என்ற சத்தம் கேட்டது. குப்பைத்தானே என்ற அலட்சியத்தில் தொடர்ந்து செல்கிறோம். 2-3 நிமிடங்கள் கழித்து எங்கள் வண்டியை கடப்பது போல வந்த வண்டியில் இருந்து இளைஞர் ஒருவர் 'வண்டியை ஓரங்கட்டவும்' என்று சைகை செய்கிறார். ஓரங்கட்டியதும், அவரும் வண்டியை நிறுத்தி ஓடிவந்து,

" அடிப்பாகத்தில் தீ, உடனே வெளியேறுங்கள்(Your cartank is on fire! Get out immediately) " என்று சொன்னவுடன் குப்பென்றது எனக்கும் என் மனைவிக்கும். பின்னால் 2 வருட குழந்தை. 3-4 மணித்துளிகளில் நாங்கள் அனைவரும் வெளியேறி தூர வந்து காரின் கீழே பார்க்கிறேன். தீச்சுவாலைகளுடன் டேங்க்கு முழுவது பற்றி எரிகிறது. ஆ! இன்னும் சில நிமிடங்கள் தாமதித்திருந்தால்?? இன்னும் எங்களை காப்பாற்றிய அந்த இளைஞரின் முகம் நினைவில் உள்ளது. அன்றாட வாழ்க்கையில் பார்த்திராத சாந்தமான தோற்றம். கிருத்துவ கலாச்சாரங்களில் ஏஞ்சல் என்றும் இந்து சமய மரபினில் புண்ணியம் என்றும் சீன வழக்கங்களில் முன்னோர் என்றும் இருந்து வரும் நம்பிக்கை. இது எப்படி செயல்படுகிறது?

உலகிலுள்ள உயிர்கள் அனைத்திலும் நுண்பொருளாக இருப்பது ' தூய இடைவெளி என்னும் இறைவெளி' . இந்த இறைவெளி தூய்மையானது; வால் அறிவானது ; ஒழுங்கான இயக்கம் உடையது; உவமை இல்லாதது . இப்பண்புகளையே 'கடவுள் வாழ்த்து' அதிகாரத்தில் வள்ளுவர் சொல்வதை பார்க்கிறோம்.
http://valluvam.blogspot.com/2005_07_10_valluvam_archive.html


இவற்றில் 'வால் அறிவு'(குறள் 1: 2) என்பதின் பொருள் வால் ஆட்டும் அறிவு அல்ல! வால் போல் நீ...ள....மா.....ன அறிவு. Infinite Intelligence என்று பெயர்க்கலாம். நம்மில் இருக்கும் இத்தகைய வால் அறிவே நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது. நிறைய ஆராய்ச்சிகள் செய்து முயன்றும் முடியாத விஞ்ஞானிக்கு 'சம்பந்தமே' இல்லாத ஒரு தீர்வை அளிக்கின்றது; பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் தன் குழந்தை இருந்தாலும், அக்குழந்தைக்கு ஒரு துன்பம் நிகழும்போது, தாயின் மூளை அலைகளை(brain wave) அதிர வைப்பதும் இந்த வால் அறிவு செய்யும் அற்புதங்கள். இந்த வால் அறிவையே,

அறிவு அற்றம் காக்கும் கருவி; செருவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண். [ அறிவு 43 :1]
அறிவு பெரும் துயரங்களில்(அற்றம்) இருந்து காக்கும் கருவி; பகைவரும்(செருவாரும்) அழிக்கவல்லா அரண் உடையது.


நாம் அனைவரும் இந்த வால் அறிவை உணர்ந்தாலே பயன் கிட்டும். வீட்டுக்கு விருந்தினர் ஒருவர் வருகிறார் என்றால் வீட்டை ஒப்புரவு செய்து, நல்ல உணைவை சமைப்போம். அந்த விருந்தினரும் மகிழ்ச்சியுடன் திரும்பி வரவே ஆசைப்படுவார் அல்லவா? அதுபோல் வால் அறிவை வரவேற்று, உபசரித்தால் நமக்கு உதவிட எப்போதும் தயார். ஆபத்திலிருந்து நம்மை காக்கும். புதுமையான தீர்வுகளுக்கு வழிவகுக்கும். இன்னும் பல நல்லதும் செய்யும். அவை....


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்