Thursday, March 16, 2006

நிலையாமை-2

தேநீர் குடித்துக் கொண்டே நண்பரிடம், “ பொருட்செல்வமாவது பரவாயில்லை. நடுவு நிலையுடனவாக இருந்தால்(செப்பம் உடையவர்) அவர்களின் செல்வம் சிதைவின்றி அவரின் சந்ததிகளுக்கு போய் சேரும்[நடுவு நிலைமை 12: 2]. ஆனால் உயிர் அப்படியா? “ என்றேன்.

உலகத்தில் பெரிய பயம், மரண பயம் அல்லவா? ஆனால் நாம் அன்றாடம் என்ன நினைக்கிறோம்? ‘நேற்று போல் இன்று இருக்கும் ; இன்றுபோல் நாளை இருக்கும்’ என்ற மாயை நமக்கு ‘நாள்’ என்பதை ஒன்று போல் காட்டுகிறது. சமீப காலம் வரை காலம் நிலையானது(Time is absolute) என்றுதானே அறிவியல் நம்பி வந்தது?  காலம் கற்பனையான ஒன்று என்பதை காலத்தின் வரலாறு பற்றி ஹாக்கிங் எழுதிய புத்தகத்தை படித்துப் பார்த்தால் தெரியும்.
http://www.amazon.com/gp/product/0553109537/sr=8-7/qid=1142437229/ref=pd_bbs_7/104-2864453-1548752?%5Fencoding=UTF8
தமிழிலும் இப்புத்தகம் வந்துள்ளது. காலம் ஒரு வரலாற்று சரித்திரம் - A Tamil translation of an English original '''' A Brief History of Time'''' authored by Stephen Hawking -  மொழிபெயர்ப்பு : நலங்கிள்ளி, தியாகு . [www.kural.org – உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை இதை வெளியிட்டுள்ளது.]

வள்ளுவர் நேர மாயத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கேட்கலாம்.
நாள் என்று ஒன்றுபோல் காட்டி – உயிர் ஈறும்
வாள்அது உணர்வார்ப் பெறின் [ நிலையாமை 34 : 4]

நண்பர், “ நாள் ஒரு மாயை என்று புரிகிறது. ஆனால் அது எப்படி உயிரை ஈர்க்கும் வாள் ஆகும்? மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் அல்லவா இருக்கிறது!“ என்றார் குழப்பமாக.

“ நம் உடலில் உள்ள உயிர் மேலிருந்து கீழே விழும் பந்துபோல். நாம் பிறக்கும் போது மேலே எறிந்தது, ஒவ்வொரு நாளும் கீழே விழுந்துக் கொண்டிருக்கிறது. நன்றாக  உடலை பாதுகாப்பதாலும், தியானத்தாலும் , காயகல்பம் போன்ற பயிற்சிகளாலும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாலும் கீழே விழும் பந்தை மெல்லமாக விழ வைக்கலாம். ஆனால் காலம் என்ற சக்கரமும் , உயிர் வீழ்வதும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை”

நண்பர், “ கேட்பதற்கே பயமாக இருக்கிறதே. மரணத்தை நெருங்கும் போது நமக்கு எப்படி இருக்கும்?” என்றார் அச்சத்துடன்.

“மரணம் நெருங்கும் போது எப்படி இருக்குமா? புலன்கள் முதலில் ஒன்று ஒன்றாக செயலிழக்கும். கடைசியாக நாக்கு செத்துப் போகும். விக்குள்(hiccups) எடுத்தால் அது மேலே கூட வராது!” என்று ஏதோ பார்த்தது போல நான் பேசினேன்.

நண்பர் இதை கேட்டவுடன், வியர்த்து விறுவிறுத்து ஏதோ பேய்ப் படத்தை பார்த்தவர் போல் ஆனார்.  
நாச்செற்று விக்குள் மேல்வாராமுன் நல்வினை
மேல்சென்று செய்யப் படும்.  [ நிலையாமை 34: 5 ]
(நாக்கு செத்து, விக்குள் மேலே வாரா முன் , நல்ல செயல்களை நாமே சென்று செய்து முடிக்க வேண்டும்.)

அந்நேரம் பார்த்து எனது துணைவியார் செல்லில் அழைத்தார்.
“ என்னங்க, மாலை ஆறு மணிக்கே வருகிறேன் என்று சொன்னீர்கள். இப்பொழுது மணி என்ன தெரியுமா? 8.30.”  என் மனைவியின் குரலை கேட்டவுடன் மரண பயத்தை விட பெரிய பயம் வந்தவனாய் நண்பரிடம் விடைப் பெற்று, விட்டேன் ஓர் ஓட்டம்!
                         ( தொடரும்..)



No comments: