Friday, October 14, 2005

இல்லறமே நல்லறம்...


அறன் அனைத்திலும் இல்லறமே முதன்மை என்பதால் 'இல்வாழ்க்கை' 'அறன்' என்ற அதிகாரத்திற்கு பின் அமைத்துள்ளார் என்று கொள்ளலாம்.

இல்லறம் நம்மை 'அறிவதற்கு' சிறந்த வாய்ப்பு. சிறு வயதில் பொறுப்பில்லாமல் நான் வாழ்ந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். மனப்பக்குவம் திருமணத்திற்கு பின்பும் -குழந்தைகள் வளர்க்கும்போது பெற்று வருகிறேன் என்பதே உண்மை. நம்மை நாம் உணர்ந்து இந்த உலகத்திற்கு எப்படி பயன் தரலாம் என்ற சிந்தனை இல்லறத்தில் நிறைவு கிடைக்கும் போது ஏற்படுகிறது.

இல்லறத்தின் அடிப்படை என்ன ?
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. [ 5:5]

தமிழர்கள் திருமண அழைப்பிதழ்களில் நிறைந்திருக்கும் உயரியக் குறள் இது.

அன்பும் அறனும் எப்படி இல்லறத்தின் பண்பாகவும் பயனாகவும் அமைய முடியும்? வாழ்வில் நாம் காணும் பொருட்களுக்கு பண்பாக அமைவது பயனாக இருக்காது. உதாரணம் தண்ணீரின் பண்பு குளிர்ச்சி. அதன் பயன் உயிர்களுக்கு உணவாகவும், தாகமும் தீர்க்கும்(மற்ற பயன்களும் உள). பயனில் பண்பையும் ஒன்றே காணுதல் அரிது. பண்பின் வெளிப்பாடு பயன் என்றும் கொள்ளலாம். ஆனால் சிறந்த இல்வாழ்க்கைக்கு அன்பும் அறனும் பண்பாகவும்(அகம்) , பயனாகவும்(புறம்) அமைந்திருப்பதை எண்ணி எண்ணி வியக்கின்றேன்.


இல்வாழ்க்கைக்கு அன்பும் அறனும் போல , பின்வரும் துறவறத்திற்கு( துறவு என்பது மனநிலை - இதைப் பற்றி பிறகு பார்க்கலாம்) அருள், தவம் மற்றும் வாய்மை என்று கொள்ளலாம்.

இல்வாழ்க்கை அதிகாரத்தில் ஆறு, ஆற்று என்ற சொற்கள் அடிக்கடி வருகின்றனவே. எதற்காக ?