Tuesday, September 20, 2005

அறன் எனப்பட்டது(2) ...

"அறன் மேலானது. அனைவரும் அறவழியில் நடக்க வேண்டும்" என்று கூவி ஒருவர் சொன்னால் எவ்வளவு பெயர் கேட்பார்கள் ? உலகின் இயல்பு அது. அப்படி இல்லாமல்...

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
(4:1)

என்று சொன்னால் பத்துபேராவது ஆர்வத்துடன் திரும்பி பார்ப்பதை நாம் பார்க்கிறோம். இந்த உத்தியையே 'அறன் வலியுறுத்தல்' அதிகாரத்தில் முதல் குறளிலேயே காண்கிறோம். அதில் சிறப்பு ஈனும் என்று சொன்னால் போதாதென்று செல்வமும் அறன் தரும் என்று வலியுறுத்துகிறார்.

இப்போது மக்களின் கவனத்தை ஈர்த்தாயிற்று. அடுத்து அறன்வழி நடக்கவில்லையென்றால் அதன் விளைவை கூறவேண்டும் அல்லவா ?

அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை உயிர்க்கு. ( 4:2)

நடந்து போகிறோம். அந்த அழகிய வழியில் குப்பை உள்ளது. குனிந்து குப்பையை எடுத்து தொட்டியில் போடுவதில் அறன் உள்ளது. அலுவலகத்தில் தொலைபேசியில் பேசும்போது நமக்கு பக்கத்தில் வேலைசெய்வோர்க்கு தொந்தரவு இல்லாமல் பேசினால் அதுவும் அறனே !. ஊருக்கோ அல்லது வேலைக்கு செல்கிறோம். காரில் சென்றால் வசதி என்று பார்க்காமல் பொது ஊர்தியில் செல்வதும் அறன் தானே ?

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல் ( 4:3)