Tuesday, June 21, 2005

வணக்கம். திருக்குறள் தமிழ் மறை. பல மொழிகளில் பெயர்த்தாயிற்று. பற்பல உரைகளும் உண்டு.

நாம் பள்ளியில் சுமார் 100 - 150 குறள்கள் படித்திருப்போம். அதில் பலவற்றை மறந்திருப்போம். திருக்குறள் மூலம் எப்படி உங்களை கற்பனைத் திறனையும், நினைவாற்றலையும் வளர்த்துக் கொள்வது என்பதை இத்தொடரில் காண்போமா ? மேலும் எப்படி அனைத்து அதிகாரங்களும் அதன் குறள்களும் எப்படி தொடர்புடையதாய் அமைந்துள்ளது என்பதையும் அடியேன் கூற முயற்சிக்கிறேன்..

வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்களை பார்க்கிறோம். அவர்கள் அனைவரிடத்தும் பொதுவாக உள்ள இரண்டு குணங்கள் உண்டென்றால் அவை நினைவாற்றலும் கற்பனைத் திறனுமாகும். இந்த இரு திறன்களையும் திருக்குறளை மனனம் செய்வதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சியும் வெற்றியும் நிறையும்.

நினைவாற்றலையும் கற்பனைத் திறனையும் வளர்க்க திருக்குறளை தேர்ந்தெடுக்க சில காரணங்கள் இதோ:

(1) 1330 குறள்களும் பத்தின்(10) தொகுப்பாக இருப்பது. மேலும் 133 அதிகாரகங்களும் ஒன்றோடு அன்று தொடர்புடையது.
(2) இரண்டு அடியில் சுருக்கமான அமைப்பு
(3) எல்லா நாட்டினருக்கும், எம்மதத்தினரும் பொதுவானது
(4) அன்றாட வாழ்வின் வழிகாட்டி .

மேலும் இம்முறைய ஆர்வமுள்ள எவரும் ( தமிழ் தெரியாதவர்களும்தான்) கற்றுக் கொள்ளலாம். எப்படி என்று பார்க்கலாமா ?


முதல் அதிகாரத்தில் ஆரம்பித்து கடைசி அதிகாரம் வரை வாரம் ஒன்றாக 10 குறள்களை மனப்பாடம் செய்யலாம். உதாரணமாக 10 வது அதிகாரம்( இனியவை கூறல்) மனப்பாடம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் 10 - இனியவை கூறல் என்ற தொடரை ஒரு உயிரோட்டம் உள்ள படமாக கற்பனை செய்ய வேண்டும். என்னுடைய கற்பனை : காய்களும் கனிகளும் நிறைந்திருக்கும் ஒரு அழகிய மரம் . அம்மரத்தின் கீழ் ஒரு சான்றோர் மக்களிடம் இனிய நகைச்சுவையோடு உரையாற்றுகிறார். இன்னொரு பெரியவர் அந்த கூட்டத்தினரிடையே பொருட்களை வாரி வழங்குகிறார். அக்கூட்டத்தில் இருந்து சற்றுவிலகி மூன்றாமவர் கடுஞ்சொல் சொல்கிறார். இந்த கற்பனை முழுவதும் ஒலி-ஒளி வடிவான குறும்படமாக(திருக்குறள் குறும்படம் 10) அமைந்தால் ஞாபகம் வைத்துக் கொள்வது எளிதல்லவா ?

இப்போது இந்த 10 வது அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு குறளையும் 91 - 100 என்று வரிசைப்படுத்தாமல் , 1 முதல் 10 வரை உள்ள எண்களாக மனப்பாடம் செய்யவேண்டும். உதாரணமாக 3ம் பாடலை மனப்பாடம் செய்ய..

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன் சொலினிதே அறம்.

என்ற குறளை மேலே சொன்ன குறும்படம் 10 இல் வரும் மூன்றாம் காட்சியாக அமைக்க வேண்டும். நான் அமைத்த காட்சி பேசும் அப்பெரியவரின் முகத்தை கவனிக்கிறோம். நிலாவின் குளிர்ச்சியுடன் ஒளிவீசுவதாக( மனோவியலார் 'Presence ' என்று இதை சொல்கிறார்கள் ) அமைந்துள்ளது. பேசும் போது கூட்டத்தின் ஒவ்வொருவரின் கண்களை இனிது நோக்குகிறார். அவர் பேசவில்லை. அவரின் மனம் பேசுகிறது. அவர் பேச்சை நன்று(அறமென) என்று கூட்டம் ஆமோதிக்கிறது.

இந்த 3ம் காட்சிக்கு முன்னாலும் பின்னாலும் உள்ள காட்சிகள் தொடர்புள்ளதாகவும் - நல்ல திரைப்படம் போல அமைய வேண்டும். இப்படி இந்த அதிகாரத்தில் 1 - 10 பாடல்களை அந்தந்த காட்சி மனதில் ஒட 5 முறை பாடினால் போதும் . " பாட்டா ? எனக்கு பாடத் தெரியாதே ! " என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

திருக்குறள் உள்ளிட்ட அனைத்து தமிழ்ப் பாக்களும் பாடும் முறையில்தான் இயற்றியுள்ளார்கள். திருக்குறள் செப்பலோசையில் அமைந்த வெண்பா. தற்போது இராகம் என்றழைக்கப் படும் பண்டைய இசை அமைப்புக்கள் ( பண்கள் ? ) ஒவ்வொரு பாடலுக்கும் உண்டு. அவை என்ன என்பதை நாம் தொலைத்துவிட்டோம் . அவ்வளவே. இயல் வேறு இசை வேறா ???

இப்படி ஒலி - ஒளி அமைப்பில் பொருள் பொதிந்த கற்பனை காட்சியுடன் பாடலாக பாடி பழகினால் ஒரு வாரத்தில் ( நமது பணிகளின் இடையே) எளிதாக ஒரு அதிகாரத்தில் உள்ள 10 பாடல்களை மனனம் செய்யமுடியும் . 2004 ஆண்டு இறுதியில் இருந்து இந்த முறையில் 16 அதிகாரங்களை ( 160 குறள்கள் ) மனப்பாடம் செய்து வந்துள்ளேன்.

136 வது திருக்குறள் என்ன ? என்று நீங்கள் கேட்டால் என் மனம் 14வது குறும்படத்தை தேடும் . 1-2 நொடிகளில் 'ஒழுக்கமுடைமை' என்ற அந்த படம் ஓடத் தயாராகும். அப்படத்தில் 6வது காட்சி என்ன ? 2-3 நொடிகளில்

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து .

என்று பாட முடியும். இப்படி சுமார் 5 நொடிகளில் எண்ணை சொன்னால் அந்த குறளையோ அல்லது குறளை சொன்னால் அந்த எண்ணையோ என்னால் கூறமுடியுமென்றால் உங்களாலும் முடியும் அன்றோ ?

மீண்டும் சந்திப்போம் ...