Friday, October 07, 2005

அறன் எனப்பட்டது(3)

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறம்(4 : 4)என்பதில் அறத்திற்கான இலக்கணம் காண்கிறோம். இதில் மாசு என்றால் என்ன ?

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் எனநான்குமே மாசு என்று அடுத்த குறளில்(4:5) கூறுகிறார். அழுக்காறு - பொறாமை. அவா - பிறன் பொருளின்மீது ஆசை . வெகுளி - கடும்கோபம் . இன்னாச்சொல் - இனிமையற்ற சொல். இந்த நான்கு கறைகளையும் நமது மனதில் ஏற்படுவதற்கு மூலகாரணம் என்ன ? 'தான் என்ற கருவம்' . கருவத்தின் வெளிப்பாடே பிறன் பொருள் மீதும் ஆசையும், பொறாமையும். நாம் பொறாமைக்கும் ஆசைக்கும் தடைகள் வரும்போது கோபம் வருகிறது. கோபத்தின் வெளிப்பாடு கடுஞ்சொற்கள். விவாகரத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று வாழ்க்கையின் பல அவலங்களுக்கு காரணம் மேலே சொன்ன தொடர் என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

நாம் ஒவ்வொருவர்க்கும் ஒரு இயற்கை உண்டு. நம் படைப்பிற்கும் காரணம் உண்டு. எல்லோரும் மருத்துவராகவோ, பொறியாளாராகவோ, தொழில் அதிபராகவோ, விஞ்ஞானியாகவோ பணிபுரிய முடியுமா ? வண்டி ஓட்டுநர், ஓவியர், பேச்சாளர், ஆசிரியர், செவிலியர், சுத்தம் செய்பவர் என்று எந்த வேலையாக இருந்தாலும் பிறர்க்கு பயன் அளிக்கும் வண்ணம் நம் வாழ்க்கை அமைந்தால் எவ்வளவு இன்பம் !. அலுவலக கழிவறைகளை சுத்தம் செய்யும் ஒரு அன்பரை நான் அறிவேன். காலை, மாலை எப்போது பார்த்தாலும் சுத்தமாக மடிப்பு கலையாத(உலர்-சலவை செய்த) ஆடைகளை உடுத்தியிருப்பார். அவர் வேலை செய்வதையும் கவனித்திருக்கிறேன். அவ்வளவு நேர்த்தி.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல். (4: 3)

ஒல்லும் வகை அறவினை - இயன்ற வரையில் அறச்செயல்கள்
செல்லும் வாயெல்லாம் செயல் - நாம் செய்யும் எந்த செயலிலும் சிறப்பாக செயலாக அமைய வேண்டும் .