Friday, February 10, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 5

சாவடி, சத்திரம் ஆகியவற்றை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதில் வழிபோக்கர்களுக்கு உணவு படைத்தெல்லாம் பார்த்த நினைவில்லை. எங்கள் கிராம வீட்டில் அப்போது(சிறிய வயதில்) திண்ணை இருந்தது. அந்த தெரு வழியாக செல்வோர் அதில் அமர்ந்து இளைப்பாறிச் செல்வதை பார்த்திருக்கிறேன் . பிறகு எனது பெற்றோர் வீட்டை மாற்றி அமைக்கும்போது, திண்ணை காணாமல் போனது ! விருந்தோம்பலுடன் மிகவும் தொடர்புடையது திண்ணை. முன்பின் தெரியாதவர்கள் கூட திண்ணையில் இளைப்பாறுவதுடன் அந்த வீட்டில் உணவும் உண்டு தங்குவார்கள். அவசர உலகில் நாம் தொலைத்த ஒன்று விருந்தோம்பல். பெற்றோர்களே சுமைகளாக தெரியும்போது விருந்து எம்மாத்திரம் ?

இக்காலக் கட்டத்திலும் நம்மால் செய்யக் கூடியது:
(1) வரும் விருந்தினர்களை குடும்பமாக உபசரித்து, மீண்டும் வாருங்கள் என்று வழி அனுப்பி வைப்பது.
(2) நமது குழந்தைகளை வரும் விருந்தினர்களிடம் அன்பாக பழக செய்தல். நாம் விருந்தினர்களை உபசரிக்கும்போது நம் குழந்தைகளையும் ஈடுபடுத்தல்.
(3) நம் வீட்டிற்கு விருந்தினர் வருகின்றார் என்றால், அவரை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கல்.
(4) முன்பின் தெரியாதவர்களை வீட்டிற்கு வரவேற்று, விருந்தோம்பல். புலம் பெயர்ந்தவர்களுக்கு இது மிகவும் முக்கியம்.

விருந்தோம்பலை நம் வாழ்க்கை நெறியாக கொண்டிருந்தால், இவ்வுலகை விட்டு செல்லும் போது, நமக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும். அந்த சொர்க்கத்தில் உள்ள வானத்தவர்க்கு(தேவர்களுக்கு) நாம் விருந்தாக அமைவோம்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
[ விருந்தோம்பல் 9 : 6 ]

Thursday, February 09, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 4


சொர்க்கத்தில் அன்று தணிக்கை(ஆடிட்) நடந்து கொண்டிருந்தது. ஆதலால் அன்று சொர்க்கத்துக்கு வந்திருந்த 3 நபர்களை தேர்ந்தெடுத்து மறு ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். முதலாமவர் திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றியவர். திருமணத்திற்கு பின் மனம் திருந்தி இல்லறமே நல்லறமாக வாழ்ந்தவர். அவருடைய கோப்பை பார்த்த தணிக்கையாளர் " பெண்ணை காதலித்து ஏமாற்றிய பாவத்திற்காக ஓராண்டு நரகத்தில் இருப்பார். பின்னர் இவரை சொர்க்கத்தில் அனுமதிக்கலாம். " என்று குறிப்பு எழுதினார். இரண்டாமவர் தனது பெரும்செல்வத்தை யாருக்கும் கொடுத்து உதவாமல் நேர்மையாக வாழ்ந்தவர். அவருடைய கோப்பில் " 5 ஆண்டுகள் நரகம். பிறகு சொர்க்கம்" என்று எழுதப்பட்டது. மூன்றாமவர் தனது வாழ்நாளில் கருணையே யாரிடமும் காட்டாதவர். வேலை செய்த இடத்தில் 'கொடுங்கோலன்' என்றும், சுற்றத்தாரால் 'கல்நெஞ்சன்' என்றும் அழைக்கப்பெற்றவர். கரும வினையோ அல்லது வேறோ, சொர்க்கத்துக்கு வந்துவிட்டார் அவர். இவரின் கோப்பை பார்த்த தணிக்கையாளர் " உடனடியாக இவனை பூமியில் கொடுங்கோலாட்சி நடக்கும் நாட்டிற்கு அடிமையாக அனுப்புங்கள் ". சொர்க்கத்தின் பக்கமே வராதபடி தடை உத்தரவே போட்டார் தணிக்கையாளர்.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. [ அருளுடைமை 25 : 7 ]


பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகில் நலமிக்க வாழ்வில்லை; அருள்(கருணை) இல்லாதவர்க்கு சொர்க்கத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை!

Monday, February 06, 2006


சொர்க்கத்தின் கதவுகள் - 3

பெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
[ வாழ்க்கைத் துணைநலம் 6 : 8 ]

தன்னை அடைந்த கணவர் மகிழ்ச்சி பெற்றால், அத்தகைய மனைவியார் தேவர்கள் வாழும் உலகத்திலும் பெருஞ்சிறப்பு பெறுவார்.

நவீன உலகில் இக்கருத்து பொருந்துமா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டதுண்டு. மேலோட்டமாக பார்க்கும் அனைவருக்கும் அப்படிதான் இருக்கும். மனைமாட்சி(குறள் 6 : 2 ) என்றும் , மாண்பு(6 : 3 ) என்றும் மனையாளை குறிப்பிட்டுவிட்டு, இங்கே எப்படி சொல்லலாமா ?

மனைவியான பெண் தன்னை மட்டும் நிலைநிறுத்தி வாழ்ந்தால் அத்தகைய குடும்பங்கள் என்ன ஆகும் என்பதை பார்க்கிறோம். அதேபோல் கணவனும் சுயநலத்துடன் செயல்பட்டால் அதே விளைவுதான். ஆனால் மனைவியை ஆதாரமாக கொண்டு தன் வாழ்க்கையை அமைக்கும் கணவன் தொட்டதெல்லாம் பொன்னாகும். வாழ்க்கை நிறைவு பெறும். அத்தகைய மனையாள் தேவர்கள் வாழும் ( புத்தேள் ) உலகத்திலும் பெருஞ்சிறப்பு பெறுவது உறுதி. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது இந்த உண்மை புரியும். காந்தி திரைப்படத்தை பலமுறை பார்த்திருந்தாலும், சமீபத்தில் டிவிடி வாங்கி குடும்பத்துடன் பார்த்தேன். அன்னை கஸ்தூரிபாவின் துணையும் ஆதாரமும் இல்லாமல், காந்தி உலகம் வியக்கும் பணிகளை செய்திருக்க முடியுமா ? ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் காந்தி நிகழ்த்திய போராட்டங்களிலும், சமுதாய பணிகளிலும் அன்னை கஸ்தூரிபா காந்தி உற்றதுணையாக நின்றதை பார்க்கிறோம். வியக்கிறோம்.

அகத்தில்(வீட்டில்) வெற்றி பெறாதவன், புறத்தில்(உலகில்) வெற்றி பெற முடியாது அல்லவா ?