Friday, January 27, 2006

சான்றோர் - ஐந்தாம் பகுதி

சான்றோர் என்று மற்றோரால் அங்கீகரிக்கப்படும் போது 'நமக்கு எல்லாம் தெரியும்' என்ற எண்ணம் வரும். அப்போது பொது மேடைகளிலோ அல்லது தனியாக பேசும்போதோ, சான்றோர் பயனில்லாதவற்றை பேசுவதுண்டு.


ஆடலரசன் சொல்லாற்றலும், அறிவாற்றலும் நிறைந்த அரசியல்வாதி. பொதுமக்களுக்கு இடைவிடாது தொண்டாற்றி வருபவர். நல்லவர். கட்சி தலைமையிடமும் நல்ல பெயரும் இருந்ததால் பாரளுமன்ற தேர்தலில் எளிதாக வெற்றிபெற்று டெல்லி சென்றார். பொதுவாக நேரம் வரம்பு இல்லையென்றால் திறம்பட பேசும் வல்லமையுள்ளவர் அவர். பாராளுமன்றத்தில் தனக்கு கொடுக்க பட்ட குறைவான நேரத்தில் பேசுவதற்கு பழக்கப்படாததால் அவரின் பேச்சுக்கள் பயனில்லாத பேச்சுக்களாகவே அமைந்தது. இதை கவனித்த அக்கட்சியின் தலைவர் ஆடலரசனை தனியாக அழைத்தார்.

" ஆடலரசா, உன்னைப் போன்ற அரசியலார்க்கு நயம் உடைய இனிய சொற்களை பேசும் ஆர்வம் மேலோங்கி இருக்கும். அது அவசியம். ஆனால் நயமில்லாத கசக்கும் சொற்களை பேசினாலும் , எக்காரணத்தை கொண்டும் பயன் இல்லாத சொற்களை பேசாதே ! நயம் உடைய சொல் கேட்பவருக்கு அப்போதுமட்டும் இனிக்கும். ஆனால் பயன் உடைய சொல் கேட்டவருக்கு, பின்னர் கூட அது இனிக்கும். இதை புரிந்துகொண்டால் பாராளுமன்றத்தில் நீ தடம் பதிப்பாய். " என்று வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

நயனில சொல்லினும் சொல்லுக ! சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. [ பயனில சொல்லாமை 20 : 7 ]

சான்றோர் நயமில்லாத சொற்களை சொன்னாலும் சொல்லலாம். ஆனால் பயனில்லாத சொற்களை அவர்கள் சொல்லாமல் இருப்பது நலன்.

Tuesday, January 24, 2006

சான்றோர்- 4

சான்றோரின் அணிகலனையும், வழிகாட்டும் விளக்கையும் பார்த்தோம். சான்றோரின் ஒழுக்கம் எப்படி இருக்க வேண்டும் ?


சாமிநாதன் கல்வியும் புகழும் பெற்றவர் . இவரை போல் அல்லவா நாம் வாழ வேண்டும் என்றும் சொல்லும் அளவிற்கு சான்றோன் என்று அனைவராலும் புகழப்பட்டவர். வயது சுமார் 45 இருக்கும். ஒருமுறை அவருடைய மனைவியும் குழந்தைகளும் ஊருக்கு சென்றிருந்த நேரம். அவர் வீட்டில் வேலை செய்யும் பத்மா, என்றும் போல் அன்று வீட்டை துடைத்துக் கொண்டிருந்தார். பத்மா திருமணமான பெண். தன் வீட்டின் பொருளாதார தேவைகளுக்காக சில வீடுகளில் வேலை செய்து வருபவர். அழகிய பெண் கூட. தனிமையான அந்த சூழலில் பத்மாவை பார்த்த சாமிநாதனின் மனம் தடுமாற பார்த்தது. அடுத்த கணம் சற்றே கண்களை மூடி, தன் மனைவியையும் குழந்தைகளையும் நினைத்து பார்த்தார். ஆசைக்கு அடிமைப்பட்டு இன்னொருவர் மனைவியை அடைய நினைப்பது எவ்வளவு கேவலம் என்று எண்ணியவாறு வீட்டுக்கு வெளியே செல்லலானார். பேராண்மைக்கு இலக்கணம் அல்லவா அது ?

பிறன்மனை நோக்காத பேராண்மை; சான்றோர்க்கு
அறன் ஒன்றோ? ஆன்ற ஒழுக்கு. [ பிறனில் விழையாமை 15 : 8 ]

சான்றோர்க்கு பிறன்மனைவியை பார்க்காத பண்பை போன்று சிறந்த அறமும் ஒழுக்கமும் இல்லை.

Monday, January 23, 2006

சான்றோர் - 3

சான்றோர்க்கு அணி என்ன என்பதை பார்த்தோம். அவருக்கு வழிகாட்டும் விளக்கு ஒன்று உள்ளது. அதை இங்கே பார்ப்போம்..

வாழ்க்கை என்பது ஒரு அழகிய பயணம். அப்பாதையில் ஒளி, இருள் என்று இரண்டும் உண்டு. அதிலும் இருட்டில் நடக்கவேண்டுமானால் நல்ல விளக்கு ஒன்று இருந்தால் நல்ல துணையாக இருக்குமல்லவா ? சான்றோருக்கு அப்படித்தான். நல்ல வழிகாட்டும் விளக்காக அமைவது அவரின் வாய்மை மட்டுமே ஆகும். மற்றவை(எ-கா: நண்பர்கள், புத்தகங்கள் ... ) வழிகாட்டும் விளக்குகள் போன்று தோன்றினாலும் பொய்யாமையே உண்மையான விளக்காகும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல - சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு. [ வாய்மை 30 : 9 ]


வாய்மையை உண்மை, மெய் என்றும் அழைக்கலாம். " உள்ளத்தில் இருந்து வருவது உண்மை . வாயினால் சொல்வது வாய்மை. உடலில்(மெய்) ஒன்றர கலந்திருப்பது மெய் " என்று அழகிய பொருளை திருக்குறள் மரபுரையில் தேவநேய பாவாணர் குறிப்பிட்டுள்ளார்.