Friday, May 19, 2006

ஆசை.. அறம்... பழி


அமுதா நாம் அன்றாடம் சந்தித்திருக்கும் பக்கத்து வீட்டுப் பெண். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அவளுக்கு 3 தோழிகள்- நெருங்கிய நண்பர்கள். முதலாமவர் பிரியா. பெயருக்கு ஏற்றார் போல் சினிமா, ஓட்டல், கடை, கேளிக்கை என்று அந்த நகரத்தில் அனைத்தும் அத்துபடி. அமுதாவிற்கும் ஆசைக்காட்டி அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்வாள். "அனுபவிக்க வேண்டும்" என்ற கொள்கை பிரியாவிற்கு.

அமுதாவின் இரண்டாம் தோழி இனியா. அறமே உருவான அழகி அவர். அமுதா எப்போதெல்லாம் ஊர்சுற்ற கிளம்பினாலும், " அமுதா, கல்வி கற்பதே நமது கடமை. மற்றும் கல்லூரியில் நடக்கும் கலை, இலக்கிய கூட்டங்களிலும் பங்கேற்பது நல்லதொரு பொழுதுபோக்கு. பிரியாவுடன் சேர்ந்து உன்னை பாழாக்கி கொள்ளாதே" என்று எச்சரிப்பாள். நல்ல நட்பிற்கு இலக்கணமாக கடிந்துரைப்பாள். பிரியாவுடன் ஊர் சுற்றினாலும், இனியாவிற்கு பயந்து அமுதா, ஒழுக்கமாகவும், தேர்வில் ஓரளவு தேர்ச்சிப் பெற்று வருகிறாள்.

அமுதாவின் அப்பா குறைவான மதிப்பெண்களை பார்க்கும் போதெல்லாம் காரணம் என்னவென்று கேட்டால், அமுதா கைக்காட்டுவது தாமரையை ! தாமரை அமுதாவின் அம்மா. ஆம், அமுதாவின் மூன்றாம் தோழி அவள் அம்மாதான். "அம்மா, என்னை படிக்க விடுவதே இல்லை. எதாவது ஒரு வேலை கொடுத்துக் கொண்டே இருப்பார்". கடைசியில் பழி அம்மாவிடம்.


நம் ஒவ்வொருவரிடமும் அமுதா இருக்கிறார். நம்முடன் இருக்கும் மூவர் யார்? ஐந்து புலன்களின் மயக்கத்தில், ஆசையுட்பட்டு, துன்பப் படுகிறோம்(பிரியா). அதே நேரத்தில் நம்முடைய அறத் தொடர்பு(இனியா) ஆசை-துன்பத்தை கண்டு அஞ்ச வைக்கிறது. அதனால் நல்ல செயல்களை செய்ய வைக்கிறது. அப்படி நல்ல செயல்களை செய்யாத போது பழி வந்து சேர்கிறது.

அஞ்சுவது ஓரும் அறனே - ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. [ அவா அறுத்தல் 37 : 6 ]
( ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை. அதே நேரம் ஆசையை கண்டு அஞ்சச் செய்வது அறன் )

செயற்பாலது ஓரும் அறனே - ஒருவர்க்கு
உயற்பாலது ஓரும் பழி. [ அறன் 4 : 10]
( செய்யவேண்டிய அறன் ஒன்றே. அப்படி செய்யாமல் விட்டால் வருவது பழி)




அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்