Friday, January 20, 2006

சான்றோர் - 2

சான்றோர் எவ்வளவு பொருள் பொதிந்த சொல் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அத்தகைய சான்றோரின் பண்புகளை வள்ளுவர் பல அதிகாரங்களில் சொல்வதை பார்க்கிறோம்.

ஒருவர் செல்வந்தராக இருக்கும்போது மற்றோருக்கு கொடுப்பது கடினம் அல்ல. நாம் சாதாரண பொருளாதர நிலையில் இருக்கும்போது கொடுப்பது அரிது.

ஒருவன் நல்ல மனைவி, குழந்தைகள் பெற்று இல்லறம் நடத்துவது கடினமன்று. ஆனால் பிறன் மனைவியை அடைய மனதாலும் நினைக்காமல் இருப்பது அரிது.

இன்னும் நடைமுறை வாழ்க்கையில் சொல்வதானால் , ஆச்சாரமான சூழ்நிலையில் ஒருவன் குடிக்கும் பழக்கம் இல்லாமல் இருப்பது கடினமன்று. ஆனால் மதுபான கடையில் வேலை செய்யும் ஒருவன் குடிக்காமல் இருப்பது சிறப்பு. அரிது.

சான்றோருக்கான இலக்கணமும் அப்படிதான். இதோ அப்படி ஒன்று பார்ப்போம்....

வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் நிலையானது அல்ல. ஆனால் அத்தகைய உயர்விலும், தாழ்விலும் மனம் மாறாதிருப்பது சான்றோர்க்கு அணியாகும். சின்னசாமி கிராமத்தில் சாதாரண நிலையில் இருந்தபோது அவருக்கு ஆசைத்தம்பி என்ற ஒரு நண்பர் இருந்தார். சின்னசாமிக்கு ஒரு மகன். ஆசைத்தம்பிக்கு ஒரு அழகிய மகள். பள்ளிப்பருவத்திலேயே அவர்கள் நட்புடன் பழகி வந்தார்கள். ஒரு பொங்கல் பண்டிகையின் போது இருவரின் குடும்பத்தினரும் இருக்கும்போது, சின்னசாமி தனது மகனை ஆசைத்தம்பியின் பெண்ணுக்கே மணமுடிப்பதாக வாக்கு கொடுத்தார். சின்னசாமி தனது கடுமையான உழைப்பாலும் மதி நுட்பத்தாலும் தொழில் தொடங்கி கோடீஸ்வரானார். புலம் பெயர்ந்து வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். அவர் மகனும் கல்வியும் ஒழுக்கமும் நிறைந்து திருமண வயதை எய்தினார். ஆசைத்தம்பியின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் இல்லை. ஆண்டுகள் பல ஓடினாலும் சின்னசாமி தன் நண்பர் ஆசைத்தம்பிக்கு கொடுத்த வாக்கை மறக்கவில்லை. சின்னசாமி தனது குடும்பத்தினருடன் ஆசைத்தம்பியின் வீட்டுற்கு சென்றார். மங்கல பொருட்கள் நிறைந்த தாம்பூல தட்டை கொடுத்து தன் மகனுக்கு பெண் கேட்டார் சின்னசாமி. அங்கிருந்த பெரியோர்களுக்கு ஆச்சரியம். செல்வ செழிப்புடன் வாழும் சின்னசாமி எங்கே ? ஏழை ஆசைத்தம்பி எங்கே ? இருப்பினும் சொன்ன சொல்லை காப்பாற்றி, இளம் உள்ளங்களை இணைத்து வைத்த சின்னசாமியை அனைவரும் வாழ்த்தினர்.

கேடும் பெருக்கமும் இல் அல்ல ; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.


[ திருக்குறள் – நடுவு நிலைமை 12 : 5 ]
[இல் – இருப்பது ; கோடாமை – மாறாமை ]