Tuesday, July 03, 2007

அறிவா ? அழிவா ?

“அய்யா, குழப்பமாக இருக்கிறதே” என்றான் நகுலன்.

“ நல்லது. குழப்பமே தெளிவிற்கு தொடக்கம். என்ன குழப்பம் ?” என்றார் ஆசிரியர் ஞானம்.

நகுலன் அருகில் உள்ள நகரத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர். வார விடுமுறைகளில் ஆசிரியர் ஞானத்தின் வீட்டிற்கு தவறாக சென்று விடுவான். ஞானம் அவனின் பள்ளிக்கூட ஆசிரியர். அவர் சொல்லும் திருக்குறள் கதைகள் மிகவும் பிரபலம். நடித்து, குரல் ஏற்ற இறக்கத்துடன் கதை சொல்லும் நடையே தனி. ஆசிரியர் ஞானம் நகுலன் அடிக்கடி செல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதை பற்றி பிறகு பேசுவோம்.

“அறிவை பற்றி சற்று விளக்கமாக கூறுங்கள் அய்யா. இதுதான் என் குழப்பத்துக்கு காரணம் ” என்று பேச்சை மெல்லமாக ஆரம்பித்தான்.

“அறிவு நம் பிறப்பில் இருந்து இறக்கும் வரை நம்மை பாதுகாக்கும் கருவி. எவ்வித பகையும் அதை அழிக்க முடியாது” என்னும் புதிருடன் திருவள்ளுவரே அறிவை அறிமுகப்படுத்துகிறார்.

அறிவு அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண்.
[ அறிவுடைமை 43 : 1 ]
[ அற்றம் – துன்பம் ; செறுவார் – பகைவர் ; அரண் – பாதுகாப்பு ]

“அத்தகைய அறிவு அனைவருக்கும் பொது என்றால், அறிவுடையோர் அறிவிலாதவர் என்று கூறுவது சரியில்லைதானே?” என்றான் நகுலன்.

“ஆம். அறிவு அனைவருக்கும் பொதுதான். அது இயற்கை. ஆற்றை ஒட்டிய மணற்கேணி உள்ளது. மேலே பார்க்கும் போது தண்ணீர் குழம்பியோ, அல்லது மாசு படிந்தோ இருக்கும். ஆனால் அந்த மணற்கேணியை தோண்ட தோண்ட தெளிந்த நீர் ஊறுகின்றது. தண்ணீர் சுவையாக உள்ளது. அதுபோல் கல்வி என்னும் பகுத்தாய்வு ஆழம் செல்ல செல்ல அறிவு என்னும் ஊற்று பெருகும்”.
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி – மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
[ கல்வி 40 : 6 ]


இத்தகைய அறிவே அழிவாகவும் ஆவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சிற்றினத்தோடு சேர்தல். இன்னொன்று தொடர்ந்த வறுமை.

நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் – மாந்தர்க்கு
இனத்தியல் பாகும் அறிவு.
[ சிற்றினம் சேராமை 46 : 2 ]
[ திரிந்து – மாறி ; அற்றாகும் – அந்த தன்மையாகும் ]
“தீயனத்தோடு ஒருவர் சேர்ந்தால் , அறிவே மாறி அழிவாகும் !” என்றார் ஞானம்.


பொச்சாப்பு கொல்லும் புகழை – அறிவினை
நிச்ச நிரப்பு கொன்றாங்கு.
[ பொச்சாவாமை 54 : 2 ]
“கடமையை மறத்தல் புகழைக் கொல்லும். தொடர்ந்த பட்டினி(வறுமை) அறிவினை அழிக்கும்.

நகுலனுக்கு அறிவை பற்றி தெளிவு வந்தவுடன், மின்னல் கீற்று ஒன்று அழகிய பெண் வடிவில் வாசலை கடப்பதை பார்த்தான் ! ஆசிரியர் ஞானம் அறிவு மட்டுமல்ல ஓர் அழகும் 'பெற்றவர்' என்பதை அறிந்தான் நகுலன்.



அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்