Thursday, November 08, 2007

இடுக்கண்(துன்பம்) வருங்கால் நகுக - 1

புத்தர் துறவியாக வாழ்ந்த காலத்தில் நடந்த கதை இது. கிசாக்கோதமி என்ற பெண்ணின் ஒரே குழந்தை இறந்துவிட்டார். குழந்தையை இழந்த சோகம் தாயிற்கு. யாராவது தன் குழந்தையின் உயிரை மீட்டுத் தரமுடியுமா என்று பார்த்தோர் இடத்தெல்லாம் வேண்டினார். அனைவரும் கௌதம புத்தரை சென்று சந்திக்குமாறு கூறினர்.

அந்த தாயும் புத்தரிடம் சென்றார். வணங்கினார். "என் குழந்தையின் உயிரை மீட்கும் மருந்தை எனக்கு தரமுடியுமா?" என்றார் அந்த தாய்.

"உயிரை மீட்டுத் தரும் அருமருந்தை செய்து தருகிறேன். ஆனால் அதை செய்ய ஒரு கையளவு கடுகு வேண்டும். மேலும் குழந்தையோ, துணையோ, பெற்றோரோ, அல்லது அவர்கள் வீட்டு வேலையாளோ இறந்திராத குடும்பத்தில் இருந்து கைப்பிடி கடுகை கொண்டு வாருங்கள் " என்றார் புத்தர்.

கிசாக்கோதமியும் அவ்வாறே கொண்டுவருவதாக கூறி சென்றார். அந்த ஊரில் இருந்த வீடு வீடாக சென்று கேட்டார். இறப்பே இல்லாத ஒரு வீட்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இழப்பு என்ற துன்பம் தனக்கு மட்டுமில்லை என்றுணர்ந்த அந்த தாய் புத்தரிடம் மீண்டும் சென்றார்.

புத்தர், " நிலையாமை என்ற உண்மையை உணர்த்துவது இறப்பு-இழப்பு. அதை உணர்ந்தால் துன்பம் இல்லை" என்றார்.


துன்பத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்.
(1) இயற்கை அழிவுகள், முதுமை, இறப்பு போல தவிர்க்க முடியாதது ஒருவகை.
(2) பிறரால் உண்டாக்க படுவது. ஓரளவு தவிர்க்க கூடியது.
(3) நம்மால் உண்டாக்க படுப்பது. பெரும்பாலும் தவிர்க்க கூடியது.


இந்த மூன்று வகை துன்பங்களையும் எப்படி எதிர்கொள்வது என்று திருக்குறள் என்ன சொல்கிறது பார்க்கலாம்.

தவிர்க்க முடியாத இயற்கை துன்பங்களை எதிர்கொள்வது எப்படி ?
இறப்பு, முதுமை போன்ற இயற்கையான துன்பங்கள் நம் அனைவருக்கும் நிகழ்பவை. வாழ்க்கை 'நிலையற்றது' என்பதை நமக்கு உணர்த்துபவை. நிலையாமை(அதிகாரம் 34) இந்த பேருண்மையை நமக்கு விளக்குகிறது.

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். [ நிலையாமை 34: 4 ]

இன்றைய நாள் நேற்றைய போலதான். நாளையும் இன்றுபோல் இருக்கும் என்று நம்மை எண்ண வைப்பது, இயற்கை இழப்புகளை எதிர்கொள்ளும் போது துன்பங்களை உண்டாக்கும். மேற்கத்தய முறைகளில், இறப்பு போன்ற இழப்புகளின் போது மன ஆலோசனைகளை(counselling) வழங்குகிறார்கள். அல்லது ஒருவர் இறக்கப் போகிறார் என்றார் அவருடைய நெருங்கிய உறவினர்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளையும் சொல்கிறார்கள். ஆனால் இது மட்டும் இத்தகைய துன்பங்களை எதிர்கொள்ள உதவுமா?

(அ) வாழ்க்கை(உடல், செல்வம், அழகு, ..) நிலையற்றது என்ற உண்மையை உணர்தல்
(ஆ) வாழ்க்கை நிலையற்றது ஆயினும் நல்ல செயல்களை செய்தல்.
நாச்செற்று விக்குள் மேல்வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். [ நிலையாமை 34 : 5]

நா பேசவராது அடங்கி, சுவை அறிதல் போய், விக்குள் மேலெழுந்து தோன்றுவது போன்ற வாழ்க்கையின் கடைசி கட்ட அறிகுறிகள் தோன்றும் முன் நல்ல செயல்களை மேற்கொள்வோம்.

(இ)செல்வத்தின் பயன் பிறர்க்கு உதவுதல் என்று நினைத்து செயல்படுதல்.
அற்கா இயல்பிற்றுச் செல்வம் - அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். [ நிலையாமை 34 : 3 ]

செல்வம் பெற்றவர்கள் அது நிலை இல்லாதது என்று உணர்ந்து நிலைபெறுகின்ற நல்ல செயல்களை செய்ய வேண்டும்.

வாரன் பஃபட்(Warren Buffett) என்ற உலகின் பெரிய பணக்காரர்களுள் ஒருவராக கருதப்படுபவர் தன்னும் செல்வத்தின் பெரும்பகுதியை (சுமார் 31 பில்லியன் அமெரிக்கன் டாலர்) கொடையாக அளித்துள்ளார் என்பது இவர் நிலையாமையை உணர்ந்து செயல்படுகிறார் என்பதை காட்டுகிறது. வாழ்க வாரன் பஃபட் !

இறப்பு போன்ற இயற்கை அழிவுகளால் வரும் துன்பங்களை எதிர்கொள்ளும் சிறந்த முறையும் இதுதான் !

அடுத்த பதிவில் அடுத்த இரண்டு வகையான துன்பங்களை பற்றியும் பார்ப்போம்.

பேரன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்