Wednesday, February 22, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 7

வெஃகுதல்(அதிகாரம் 18) என்பது பிறன் பொருள் மீது ஆசைப்படுதல். இது தீய எண்ணம். இந்த எண்ணமே முற்றி செயலாக வடிவெடுத்தால் திருட்டுத்தனம். இதை பற்றி கள்ளாமை என்ற அதிகாரத்தில்(29) விரிவாக அறிகிறோம்.

அமுதன் நிறைய கல்வி பெற்று இளம் வயதிலேயே அரசின் உயர் பொறுப்பிற்கு வந்தார். பதவியும் புகழும் தந்த போதை அவருக்கு நியாமற்ற  ஆசைகளை கொடுத்தது.
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றி
குற்றமும் ஆங்கே தரும். [ வெஃகாமை 18 : 1 ]

நியாமற்ற ஆசை ஒரு எண்ணம், விதை.  இலஞ்சம் வாங்க ஆரம்பித்தான் அமுதன். அவனுடைய செயல்களை பார்த்து நண்பர்கள் எச்சரித்தனர்.
வேண்டற்க வெஃகியான் ஆக்கம்- விளைவயின்
மாண்டற்க அரிதாம் பயன்.  [ வெஃகாமை 18 : 7]

எச்சரிக்கைகளை அமுதன் ஏளனத்துடன் ஒதுக்கித் தள்ளினான்.  அவனின் சொத்து 5 -6 ஆண்டுகளிலேயே ரூ 30 கோடிகளை தாண்டியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.  ஒருநாள் அமுதன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி அனைத்து சொத்து ஆவணங்களையும் கைப்பற்றியது.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போல கெடும்.   [ கள்ளாமை 29 : 3 ]
அமுதன் 1 ஆண்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டான்.

கள்ளத்தனம் ஒரு போதை.  ஓராண்டுக்கு பின் வேலைக்கு சேர்ந்த அமுதன், தன்னுடைய பழைய பழக்கத்தை மறக்கவில்லை. முன்பை விட அதிகமாகவும் நவீனமாகவும் தன்னுடைய பொருள் ‘ஈட்டலை’ தொடர்ந்தான்.
களவின்கண் கன்றிய காதல் – விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.  [ கள்ளாமை 29 : 4]

ஆம்! விழுமம்(பழி) அமுதனின் வாழ்க்கையில் சீக்கிரமே வந்தது. நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார். அனைத்து செல்வங்களையும் அரசு எடுத்துக் கொண்டது. செல்வ செழிப்பில் வாழ்ந்து வந்த அவரின் குடும்பம் சில மாதங்களிலேயே கடன் தொல்லையில் தள்ளப்பட்டது. சுற்றம் பழித்தது. அமுதனின் குழந்தைகளே அவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர்.  45 வயதில் அமுதனுக்கு மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அளவுஅல்ல செய்தாங்கு வீவர் – களவு அல்ல
மற்றைய தேற்றா தவர்.  [ கள்ளாமை 29 : 9 ]
ஆம். தனது உழைப்பிற்கு ஏற்ற அளவு என்ன என்று அறிந்தும் களவினால் வீழ்ந்தார் அமுதன். அவர் களவை தவிர வேறு ஏதும் அறியாதவர் அல்லவா ?

மாரடைப்பாலும் மன உளைச்சலாலும் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையானார் அமுதன்.  இன்றோ நாளையோ என்று இருக்கிறார் என்று கேள்வி.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.   [ கள்ளாமை 29 : 10 ]
பிறன் பொருளை திருடுவார்க்கு உயிர் நிலைபெறாது. உடம்பை விட்டு தவறிப்போகும். களவை செய்யாதவர்களுக்கு சொர்க்கத்தில் நிச்சயம் இடம் உண்டு.









Monday, February 20, 2006

விரல் நுனியில் திருக்குறள்

இன்று கதம்பம் சௌந்தர் ஒரு இணைப்பு அனுப்பியிருந்தார்.
http://s92430071.onlinehome.us/suvadik.htm

அற்புதம். அற்புதம். திருக்குறள்களை நினைவில் கொள்ள உதவும் பயனுள்ள செயலி இது. இளங்கோ சம்பந்தம் என்ற அன்பர் வடிவமைத்துள்ளார். வாழ்க வளமுடன்.