Thursday, July 10, 2008

வீரப் பெண்ணின் கதை

போர் துயரமானது. பல ஆண்டுகளாக விடுதலை போராட்டம் நடந்து வரும் மண். அந்த மண்ணின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் தாயின் கதை இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த போரில் அவளின் தந்தை தனது முகாமை நோக்கி வந்த பீரங்கிகளை அழித்து தானும் அழிந்து போனான்.
சென்ற ஆண்டில் அவளின் கணவன் எதிரிகள் வந்த கப்பலை தாக்கி வீர மரணம் எய்தினான்.

அவளின் ஒரே மகன் - திருமணமாகி சில ஆண்டுகளே ஆகிய வீரத் திருமகன். விடுதலை கிடைத்து அமைதி மலராதா என்ற ஏக்கத்தில் தாய் !அமைதியை விரும்பாத எதிரிகள் சூழ்ச்சியும் அடக்குமுறையும் தொடர்ந்து வந்த நிலையில் தன் ஒரே மகனை அழைத்து கையில் வேலை ஒத்த துப்பாக்கியை கொடுத்து தூய ஆடை அணிவித்து, தன் கையாள் உணவு ஊட்டி, தலைக்கு எண்ணெய் தடவி வாரிவிட்டு, " போர்க்களம் நோக்கி செல்" என்று சொல்கிறாள் அந்த தாய் !

கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;
மூதில் மகளிராதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை(தந்தை)
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே;

நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே;

இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று , மயங்கி,
வேல் கைக்கொடுத்து, வெளிது விரித்து உடீஇ
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒரு மகன் அல்லது இல்லோள்.
'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே !
{ நெருநல் - நேற்று , செரு- போர் }
[ புறநானூறு 279 ; வாகை திணை ; ஒக்கூர் மாசாத்தியார் என்ற பெண் புலவர் பாடியது]

போரின் போது கைப்பற்ற படுபவர்கள் ஒன்று சிறை போவார்கள். அது பெருமை. ஆனால் எதிரியின் வஞ்சனைக்கு ஆட்பட்டு அவர்களுக்கு துணை போவது , அறை போதல் ஆகும். இது சிறுமையிலும் சிறுமை. அப்படி அறை போகாது, வழி வழியாக வந்த வீர மரபில் வலிமையுற்று திகழ்வர் சிறந்த வீரர்.

அழிவின்று அறை போகாதாகி வழிவந்த
வன்கண் அதுவே படை.
[ படைமாட்சி 77 : 4 ]
{வழிவந்த - பரம்பரையாக ; வன்கண் - வலிமை }

ஜூலை 4 - அமெரிக்க சுதந்திர தினம். பிரிட்டனிடம் இருந்து அமெரிக்க விடுதலைக்கு போராடி இன்னுயிர் நீத்த வீரர்கள் நினைவாக எழுதிய கட்டுரை இது. இன்றும் இன விடுதலைக்காக உலகெங்கும் போராடும் வீரர்களை நினைவு கூர்வோம்.