Monday, March 06, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 8

ஓர் ஊர் வழியே மூன்று துறவிகள் நடந்து சென்றார்கள். மூவரும் ஒரே மடத்தை சேர்ந்தவர்கள்.  அந்த மூவரையும் அந்த ஊரின் பெரியவர்கள் சந்தித்து வணங்கினார்கள். மாலையிட வேண்டும். யாருக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும் என்ற கேள்வி வந்தது. முதல் துறவி  “மடத்தின் தலைவன் நான். செல்வந்தர்களும், பெரிய மனிதர்களும் மணிக்கணக்காக காத்திருந்தே என்னை பார்க்க முடியும். நான் நினைத்தால்  முடியாதது இல்லை!” இவ்வாறு தன் பெருமைகளை சொல்ல ஆரம்பித்தார்.
இரண்டாம் துறவி நிறைய நூல்களை கற்றவர். அம்மடத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர்.  அவர் “ இந்த மடத்தின் சொத்துக்கள், நிறுவனங்கள் அனைத்தும் என்னால் உண்டானதே . கடந்த 10 ஆண்டுகளில் மடத்தின் புகழை வளர்க்க என்னவெல்லாம் செய்துள்ளேன்” என்றார். யார் பெரியவர் என்ற விவாதம் பெரிதானது.

வந்த ஊர் பெரியவர்களுக்கு என்ன செய்வதென்று ஒரே குழப்பம். மூன்றாம் துறவியை எங்கே காணோம் என்று பார்த்தபோது,  சிவனே என்று மரத்தடியில் ஆனந்த உறக்கத்தில் இருந்தார்.

யான், எனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.  [ துறவு 35: 6]
[செறுக்கு – ஆணவம் ]

யான், எனது என்கின்ற ஆணவத்தை ஒழித்தவர்கள், வானோர்க்கும் கிட்டாத புகழுலத்திற்கு உரியவர்கள்.

No comments: