Saturday, August 13, 2005

யார் பெரியோர் ?

வயதானாலே ஒருவர் பெரியவரா ? அல்லது நிறைய கற்றதனால் ஒருவர் பெரியவர் ஆகிவிடுகிறாரா ? இல்லை. 'நீத்தார் பெருமை' என்ற அதிகாரத்தில் பெரியவரை எப்படி அடையாளம் காணலாம் என்று விரிவாக வள்ளுவர் கூறுகிறார். நீத்தார் - நீத்தல் - பிரிதல், துறத்தல் என்று கழகத் தமிழ் அகராதி கூறுகிறது.

துறந்தார் இறைவனை அடையும் பாதையில்(God-in-making) இருப்பதாலும், வான்மழைக்கு காரணமாக இருப்பதாலும் 'நீத்தார் பெருமை' அதிகாரம் அவைக்கு பின்னால் வைக்கப்பட்டுள்ளது. நமது மரபில் நாட்டில் நல்லவர்கள் உள்ளதால் மழை பெய்கிறது என்ற நம்பிக்கை 'வான் சிறப்பு' -->' நீத்தார் பெருமை' தொடர்ச்சியின் காரணத்தை காட்டுகிறது.

இந்த அதிகாரம் நூல்,துறவு,அறம்,ஐம்புலம், செயல் என்ற கருப்பொருட்களை கொண்டுள்ளதை காண்கிறோம். விரிவாக பார்ப்போம்.
* ஒழுக்கத்து நீத்தார் (1) ,
* துறந்தார்(2),
*அறம் பூண்டார்(3) ,
* ஐந்து காப்பான்(4),
* ஐந்து அவித்தான்(5),
* செயற்கரிய செய்வார்(6)
* ஐந்தின் வகை தெரிவான்(7)
* நிறைமொழி மாந்தர்(8)
* குணமென்னும் குன்றேறி நின்றார்(9)
* அறவோர்(10)
என்று பத்து குறட்பாக்களிலும் பெரியோரின் பண்புகள் பட்டியலாக உள்ளதை காண்கிறோம். ஐந்து என்பது நமது ஐந்து புலன்களையும் அதன் உணர்வுகளையும் குறிக்கும்.

ஒழுக்கத்தின் உயர்ந்த நெறிகளை உடைய பெரியோரின் சிறப்பு(விழுப்பம்) அவரின் எழுத்தின் (பனுவல்- நூல்) துணிவை வைத்து சொல்லலாம். பேசுவதை விட எழுதும் போது நிறைய துணிவு வேண்டும். எழுதினால் வரலாற்று பதிவாகிவிடுகிறதே !. [ குறள் 3 : 1 ]

தொடர்ந்து நிறைமொழி மாந்தர் பெருமை உலகத்தில் அவரால் படைக்கப்படும் மறைமொழி(நூல்) காட்டி விடும் [ குறள் 3 : 8 ].

ஐந்து புலன்களை காத்து, அவித்து(ஒடுக்கி),வகை தெரிந்து வாழ்வோர் பற்றி முறையே குறட்பாக்கள் 4,5,7 கூறுவதை பார்க்கிறோம்.

மறைமொழிந்தவர் குணமென்னும் குன்றேறி நின்றாலும், அவருக்கு சினம் உண்டானால் கண(நொடி) நேரமாயினும் காத்தல் அரிதாகும்(குறள் 3:9). முனிவர்களின் சாபத்தை இக்குறள் நினைவூட்டும். இதன் தொடர்ச்சியாக சினம்கொள்ளும் பெரியோருக்கு அறிவுரையை பார்ப்போம். 'எல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோரே அந்தணர்' (குறள் 3:10) என்று எடுத்துரைப்பதில் சினத்தை குளிர்விக்கும் மருந்து இருப்பதை பார்க்கிறோம்.

இப்படி அறம் பூண்ட துறவோரின் பண்புகளையும் அவரின் செயல்களையும் 'நீத்தார் பெருமை' யின் 10 குறட்பாக்கள் சொல்லும் அழகை பார்க்கிறோம். கோலத்தின் புள்ளிகளை இணைப்பது போல் இக்குறட்பாக்களை சேர்த்தால் மனனம் செய்வது எளிதாவதோடு வாழ்வின் உண்மைகளை அறிகிறோம்.