Friday, August 05, 2005

திருக்குறளும் தியானமும்...

கடந்த பத்து ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளில்(குறிப்பாக அமெரிக்காவில்) தியானம் புகழ் பெற்றுவருகிறது என்பதை நாம் அறிவோம். சமீபத்தில் நான் படித்து/கேட்டு புத்தகம்/குறுந்தட்டு - Wayne W. Dyer எழுதிய 'Getting in the Gap: Making Conscious Contact with God Through Meditation'. இங்கே இடைவெளி என்பது நாம் பேசும், படிக்கும், பாடும் சொற்களுக்கு நடுவே உள்ள இடைவெளியை குறிக்கிறது.

சொற்களின் பொருள் சொற்களில் இல்லை - அதன் இடைவெளிகளில் இருக்கிறது. இதை நாம் திருக்குறளுக்கு கொண்டு வருவோம். உதாரணமாக

அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு. [ வெஃகாமை 18 : 9 ]

எடுத்துக் கொள்வோம். ' அறன் அறிந்து' என்ற சொல்லுக்கும் 'வெஃகா' என்ற சொல்லுக்கும் உள்ள இடைவெளியை நாம் பாடும்போது கவனிப்பது இல்லை. சொற்களில் கவனம் செலுத்துவோம். அல்லவா ?

அப்படியில்லாமால் கீழ்கண்ட முறையை முயற்சி செய்து பார்ப்போம்...

அமைதியான இடத்தில் அமர்ந்து, கண்களை மூடி மூச்சை(மூக்கால் மட்டும்) சில முறை நன்றாக உள்ளே இழுத்து விடவும். அடிவயிறு மூச்சால் சுருங்கி விரிந்தால் நீங்கள் நன்றாக மூச்சு விடுகிறீர்கள் என்று பொருள் ! சில நிமிடங்களுக்கு பிறகு மன அமைதி அடையும் போது 'அறன் அறிந்து' என்று நிதானமாக சொல்லவும்.... பிறகு சில மணித்துளிகளில் 'வெஃகா...' என்று சொல்லவும் ... இப்படி சொல்லும் போது நெடில் எழுத்துக்கள் வரும்போதெல்லாம் அதன் உயிர்ப் பகுதியை நன்றாக நீட்டவும். வெஃகா... என்று உச்சரிக்கும்போது கா... ஆ..ஆ.. என்று நீட்டிப் பாருங்கள். மனம் ஒன்றுபடுவதை நாம் கவனிக்க முடியும். ஆ.. ஈ.. ஊ.. ஏ.. ஓ ஆகிய நெடில் உச்சரிப்புக்கள் தனியாகவோ அல்லது உயிர்மெய்யாகவோ ( உதாரணம் : கா.. மா.. போ...) மனதை ஒருமைபடுத்தி நமக்கு உயிரூட்டும் தன்மை உடையவை.
மீண்டும் நாம் ஆரம்ப்பித்த திருக்குறளுக்கு வருவோம்...

வெஃகா... என்று உச்சரித்தபின் மெதுவாக பின் நோக்கி நகர்ந்து 'அறன் அறிந்து' என்ற சொல்லுக்கு அடுத்துள்ள இடைவெளியில் கவனம் செல்லுத்துவோம். சில நொடிகள்தான் நம்மால் அந்த இடைவெளியில் கவனம் செலுத்த முடியும் என்றாலும் கூட அந்த இடைவெளியில் கவனம் செலுத்துங்கள் - உங்களால் முடிந்த வரை.

அதேபோல வெஃகா என்று உச்சரித்து அடுத்து அறிவுடையா...ர் என்று உச்சரித்து மெதுவாக பின் நோக்கி நகர்ந்து அந்த இடைவெளியில் கவனம் செலுத்தவும். அதேபோல தொடரவும்...
அறன்அறிந்து வெஃகா
வெஃகா அறிவுடையார்
அறிவுடையார்ச் சேரும்
சேரும் திறன்அறிந்து
திறன்அறிந்து ஆங்கே
ஆங்கே திரு

ஆரம்பத்தில் இடைவெளியில் தங்கி எண்ணங்கள் அற்று 'சும்மா' இருப்பது கடினமானாலும் பழக பழக நம் உணர்வுகளும் மேம்படுவதை பார்க்க முடியும்.

முயற்சி செய்வோம்...




Monday, August 01, 2005

குறள் நடை

பேச்சாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஒரு நடை இருக்கும். அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் இளையோருக்கும் நடையென்று ஒன்று இருக்கும். எனக்கு? நான் வேலைக்கு சென்றுவர சுமார் 1.5 மைல் நடக்கின்றேன். மேலும் பெரும்பான்மையான மதிய இடைவேளைகளில் வேலை செய்யும் இடத்தருகே ஒரு அழகிய பூங்கா உள்ளது. அதை உத்தேசமாக ஒரு நாளைக்கு 4 முறை சுற்றினால் 1 மைல் நடக்கின்றேன். இப்படி 2.5 மைல் நடக்கும்போது ஏதோ ஒரு சிந்தனையில் மனதை அலையவிடுவதை விட கடந்த ஒரு மாதமாக நான் மனப்பாடம் செய்துள்ள குறட்பாக்களை பாடிக்கொண்டே நடக்கின்றேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில்.. ஒரு நாள் 3-7 அதிகாரங்களில் உள்ள ஒற்றை எண்களாக .. இன்னொரு நாள் இரட்டை எண்களாக .. ஒரு நாள் 140 - 111 கீழிருந்து மேலாக...

நமது குறள் நடை எப்படி இருக்கிறது ?