Tuesday, May 02, 2006

வேண்டியது கிடைக்க... துறக்க வேண்டும்

விவசாயி அறவாழிக்கு அந்த வட்டாரத்திலேயே நல்ல பெயர். வறட்சியானாலும், வெள்ளமாக இருந்தாலும் அவர் நிலத்தில் மட்டும் ஆண்டு தோறும் நல்ல விளைச்சல் என்றால் அவர் புகழுக்கு வேறு காரணமா வேண்டும். ஒருநாள் அந்த ஊரின் பள்ளி ஆண்டுவிழாவில் அறவாழியை பேச அழைத்திருந்தனர்.

" மாணவர்களே, உங்களுக்கெல்லாம் என் அனுபவத்தில் இருந்து ஒரு இரகசியம் சொல்லப் போகிறேன். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று உங்களில் பலருக்கு ஆசை இருக்கும். அவர்களுக்கு இந்த இரகசியம்" என்றார். அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்து அவரின் பேச்சை கூர்ந்து கேட்க ஆரம்பித்தனர்.

" விதை எவ்வளவு சிறியதாக இருக்கிறது. ஆனால் அந்த விதைக்குள் அனைத்தும் அடங்கியுள்ளது. நாம் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. என்ன வியப்பாக உள்ளதா? " என்று புரியாத புதிராக பேச ஆரம்பித்தார்.

ஒரு சிலர் வித்திடும் போதே , நிறைய சந்தேகங்கள்!
* இது முளைக்குமா?
* களை, மற்றும் பூச்சிகளில் இருந்து எப்படி காப்பது?
* சரியான நீர் கிடைக்குமா?
* நல்ல தானியங்களையும், காய்களையும், பழங்களையும் தருமா?
அதன் விளைவாக அச்சம்/கவலை வருவதும், கடைசியில் பயந்தபடியே விளைச்சல் பொய்த்து போவதும் பார்க்கிறோம். இத்தகைய மக்கள் பெரும்பாலும் தோல்வி அடைவதை பார்க்கிறோம்."

அதற்கு மாறாக சிலர், விதைக்கும் போதே வண்ணக் கனவுகளுடன், எதிர்காலத்தில் விளைச்சலில் பயன் குறித்து கற்பனைகளிலும் இருப்பதை பார்க்கிறோம். விரிவான திட்டங்கள் வகுப்பதையும் பார்க்கிறோம். இவர்கள் ஓரளவு வெற்றி பெறுவதையும் பார்க்கிறோம்." என்று அறவாழி பேசலானார்.

கூட்டத்திலிருந்த ஒரு மாணவன் எழுந்து, " ஐயா, அப்படியானால் நீங்கள் இரண்டாம் வகைதானே? நல்ல கனவுகள், திட்டங்கள் இவைகளுடன் உங்கள் உழைப்பு சேர்ந்திருப்பதால் தானே வெற்றி பெருகிறீர்கள்?" என்றான்.

அறவாழி புன்னகையுடன், "நான் இரண்டுமே செய்வதில்லை. ஒவ்வொரு விதையின் உள்ளேயும், அதன் வளர்ச்சியும் அதை சார்ந்த திட்டங்களும் மாபெரும் சக்தியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அந்த இயற்கையை முழுமையாக நம்பி வித்திடுவேன். முழுமையான நம்பிக்கை என்றால் துறவறம் போல். அந்த விதை எப்படி விளைய வேண்டும் என்று திட்டத்திலும் மூழ்க மாட்டேன். மாறாக அவநம்பிக்கையினால் உண்டாகும் செயலற்ற தன்மையும் இல்லை. இதைதான் துறவறம் என்று கூறினேன். அந்த விதை வளரும்போது தன்னுடைய தேவைகளை வெளிப்படுத்தும். அதை கவனித்து பணி செய்வேன். அவ்வளவே!. பிறகென்ன அமோக விளைச்சல்தான்! " என்று கூறினார் அறவாழி.

கடைசியில், " இந்த உண்மை தாவர விதைகளுக்கு மட்டுமா பொருந்தும்? நம் மனதில் இடும் எண்ணங்களுக்கும் இந்த இயற்கை விதி பொருந்து அல்லவா? நம் ஒவ்வொரு எண்ணமும் விதை தானே.
வாழ்க்கையில் ஒன்றை அடைய வேண்டும் என்றால் நாம் என்ன செய்யலாம் ?
(1) எந்த ஒரு கனவையும் தன்னலமற்ற வித்தாக நம் மனதில் விதைத்திட வேண்டும். '2010 ஆண்டில் 5 மில்லியன் டாலர்கள் வங்கிக் கணக்கில் இருக்கவேண்டும்' என்பது தன்னலம் நிறைந்த குறிக்கோள். அதே குறிக்கோளை ' பல மில்லியன்கள் ஈட்டி, 3 கல்வி நிலையங்களையும் ஓர் மருத்துவமனையையும் நிறுவி உதவிட வேண்டும்' என்பது தன்னலமற்ற உன்னத எண்ணமாக வித்திடலாம். தன்னலம் அற்ற எண்ணத்துள் தன்னைத் தானே வெளிப்படுத்தும் அளவற்ற பேராற்றல் நிறைந்திருக்கும்.
(2) விதை எப்படி செடி, பூ, மகரந்தம், காய், கனி, சுவையான கனிக்குள்ளே விதை என்று தன்னை அழகாக வெளிப்படுத்துகிறதோ அதுபோல தன்னலமற்ற எண்ணம் அழகிய சூழலாக உருவாகி, தேவையான வளங்களை ஈர்த்து, திறன் மிகுந்த செயல்களாக வெளிப்படுத்தும். ஆனால் இவையெல்லாம் நடக்க வேண்டுமென்றால் எண்ணமென்ற விதையின் இயற்கை சக்தியின் மீது முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். பற்று அற்ற துறவு வேண்டும்.

வேண்டின், உண்டாகத் துறக்க - துறந்தபின்
ஈண்டின் இயற்பால பல. [ துறவு 35 : 2]

நாம் ஒன்றை விரும்பினால், அதன் எண்ண நிலையிலேயே(வித்திலேயே) அதனை துறக்க வேண்டும். அப்படி துறந்தபின் எண்ணமெனும் வித்து பற்பல நன்மைகளை இயற்கையாகவே விளைவிக்கும்.

அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்