Tuesday, February 26, 2008

இடுக்கண் வருங்கால் நகுக - 2

இயற்கையான துன்பங்களை எப்படி எதிர்கொள்வது என்று முதல் பாகத்தில் எழுதினேன். அடுத்து பிறரால் உண்டாகும் துன்பங்களை பற்றி இங்கு பார்ப்போம்.

பயணி ஒருவர் அவர் செல்லவேண்டிய விமானம் தாமதமானதால், அங்கிருந்த பணியாளரிடம் கோபமாக கத்திக் கொண்டிருந்தார். ஆனால் என்ன வியப்பு ! அந்த பணியாளரோ மிகவும் பணிவாகவும், நிதானமாகவும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அரை மணிநேரம் கழித்து அப்பயணி செல்லவேண்டிய விமானம் வந்தது. அந்த கோபக்கார பயணியும் சென்று விட்டார். ஆகா! இந்த பணியாளர் ஒரு ஞானியாக இருப்பார். பிறரால் வரும் துன்பத்தை எதிர்கொள்வது எப்படி என்று இவரிடம் தான் கேட்க வேண்டும் என்று அவரிடம் சென்று, " அண்ணே, எனக்கு கூட- இருக்கின்ற குடும்பத்தினர் செய்த துன்பங்களையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையே. எப்படி தெரியாத இது போன்றவர்கள் தரும் துன்பங்களை பொறுத்துக் கொள்கிறீர்கள் ?" என்றேன். அதற்கு அவர், " அப்படியெல்லாம் ஒன்றில்லை. அந்த பயணி ஐரோப்பாவிற்கு போகிறார். ஆனால் அவருடைய பைகளோ சிங்கப்பூருக்கு போகிறது !" என்றாரே பார்க்கலாம்.

பிறரால் வரும் துன்பங்களை கையாள இரண்டு வழிமுறைகளை திருவள்ளுவர் கூறியுள்ளார்.

(1) இலக்கம் உடம்பிடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
[ இடுக்கண் அழியாமை 63 : 6 ]
[துன்பத்தின் இலக்கு உடம்புதான் அன்றி வேறெதுமில்லை என்று நினைப்பவர்கள் கலக்கத்தை ஒழுக்கநெறியாக கருதி வருந்தார்' ]

தன் நாட்டு மக்களின் விடுதலைக்காக பாடுபட்ட காந்தி, மேண்டெலா, அன்வர் சாதத்(எகிப்தின் முன்னால் தலைவர்) போன்றோர் சிறைத் துன்பங்களை எதிர்கொண்டதெல்லாம் இவ்வழியில் தானே.


(2) திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று [ பொறையுடைமை 16 : 7 ]
[தகுதியில்லாததை ஒருவர் செய்யினும், நொந்துபோய் அறன் அல்லாத செயல்களை செய்யாமல் இருப்பது நன்று]

பழிக்குப் பழி என்று நினைத்து அறன் அல்லாத செயல்களில் ஈடுபட்டதால் உலகத்தில் போர்களும், குடும்பத்தில் அமைதியற்ற சூழல்களும் உண்டாகிறது.
பொதுவாக ஒருவர் நமக்கு கொடுக்கும் துன்பத்திற்கு நம்முடைய பதில்
(அ) ஒறுத்தல்(தண்டித்தல்)
(ஆ) பொறுத்தல்
(இ) மறத்தல்
ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கும்.

கணவன் - மனைவியிடையே ஒரு பிரச்சனை வருகிறது. அப்போது மனைவி ஏதாவது கோபமாக ஏதாவது சொல்லிவிடுகிறார், அடுத்து பாத்திரம் பறக்கிறது ! அப்போது கணவரும் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்டால் என்னாகும் ? மாறாக பொறுத்து செயல்பட்டால் அந்த உறவு பலப்படும் அல்லவா ? மேலும் சில ஆண்டுகள் கழித்தும், கணவர் அந்த நிகழ்ச்சியை மறக்காமல், தருணம் வரும்போது பழைய தவறுகளைச் சொல்லிக் கொண்டிருந்தால் துன்பம் என்ற உளைச்சலில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான்.


அமைதியான குடும்பம் , வளமான உறவுகளை விரும்புவோர் கடைபிடிக்க வேண்டிய இரண்டு திருக்குறள்கள் இவை. பிறர் தரும் துன்பங்களை இன்பங்களாக மாற்ற விழைவோர் நினைவில் கொள்ள வேண்டிய நெறிமுறைகள் இவை.

அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்