Wednesday, April 19, 2006

வானோர்க்கு உயர்ந்த உலகம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். [ இல்வாழ்க்கை 5:10]

இல்லறத்தை நல்லறமாக கொள்வார், வானுலகத்தில் உள்ள தெய்வங்களோடு வைக்கப் படுவார். இத்தகைய உலகம் எங்கே உள்ளது?

மனவளக் கலை(www.vethathiri.org) என்ன சொல்கிறது பார்க்கலாம். கண்களை மூடி புருவங்களுக்கு நடுவே கவனம் செலுத்தி தியானம் செய்தால் ஆக்கிணை தவம். அங்கிருந்து எண்ணத்தை மேலே கொண்டு சென்று, மண்டையை வருடுவது போல் வட்டமாக தியானித்தால் துரிய தவம்.

அங்கிருந்து ஒளி(அல்லது தாமரை) மேலே எழும்புவது போல் சுமார் ஒன்றரை அடி மேலே சென்று தியானத்தில் ஈடுபடலாம். இதற்கு துரியாதீத தவம்.

அங்கிருந்து எழும்பி, குளிர்ச்சியான ஒளி வீசும் நிலாவை சுற்றிவந்து, பின்னர் சக்திவாய்ந்த ஒளிவீசும் சூரியனை வலம் வந்து, நமது எண்ணத்தை பரவவிட்டால் நாம் அங்கு பார்ப்பது வானுலகம். அங்கு ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி , பாம்பிரண்டும்(இராகு, கேது) இயங்கிக் கொண்டிருப்பதை உணர்கிறோம். நமது அகக் கண்ணால் பார்க்கிறோம். உயரிய சக்தியை நாம் உணர்கிறோம். இந்த 'இடத்துக்கு' அடையாளத்திற்கு ஒரு பேர் சொல்லவேண்டும் என்றால் 'சக்தி தளம்' என்றழைக்கலாம். இங்கு எண்ணற்ற சக்தி ஒழுங்காக பரவி இருப்பதை பார்க்கலாம். திருவள்ளுவர், 'வான் உறையும் தெய்வம்' என்று சொல்லும் இடம் இந்த 'சக்தி களம்' என்று நான் நினைக்கின்றேன்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். [ இல்வாழ்க்கை 5:10]

சக்தி தளத்தில் தியானித்தபின், மேலே சென்றால் அமைதி உணர்வில் மூழ்கலாம். இங்கு எங்கு பார்த்தாலும் ஒரே அமைதி. வெற்றிடம் போல் தோன்றும் 'சிவ களம்' . இந்த சுத்த வெளியியை கூர்ந்து கவனித்தால் பேரருள் அங்கு பரவியிருப்பதை பார்க்க முடியும். சிவனே என்று 'சும்மா' இருக்கும் இடமும் இதுதான். இவ்விடத்தை சுத்த வெளி, சிவ தளம் என்று மனவளக் கலை கூறுகின்றது. இந்த இடத்தை திருவள்ளுவர் எப்படி அடையமுடியும் என்றும் கூறும் போது,

'யான்', 'எனது' என்னும் செருக்கு அறுப்பான் - வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். [ துறவு 35 : 6 ]

நான், எனது என்னும் தன்முனைப்பு(செருக்கு, ego) இல்லாதவர் இந்த வானோர்க்கு உயர்ந்த உலகத்தை(சிவ தளம், சுத்த வெளி) எளிதாக அடைய முடியும்.

அன்பர்களே முயன்று பாருங்கள்.