Monday, June 23, 2008

கிழமை ( Date)

வள்ளி அமெரிக்காவில் வாழும் இரண்டாம் தலைமுறை இளம்பெண். அழகானவர். படிப்பிலும் சுட்டி. கலிபோர்னியாவில் உள்ள அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படிப்பவர். வள்ளியின் பெற்றோர்கள் 1990 களில் வேலைக்காக கலிபோர்னியாவிற்கு வந்தவர்கள். தனது பெண்ணை சுதந்திர உணர்வோடு ஒழுக்கத்தையும் ஊட்டி வளர்த்தார்கள்.

அழகும் அறிவும் ஒன்றே இருந்தால் அவள் மீது அவள் கூட படிக்கும் விடலைப் பையன்களுக்கு என்றும் தனிக் கவனம்தான் ! அதுவும் பாட்ரிக்கு சொல்லவே வேண்டாம். வள்ளி எந்த திட்டத்தில் சிறப்பு பெற்றாலும் சென்று மனம் திறந்து பாராட்டுவான். சென்ற ஆண்டு 'தேசிய அறிவியல் கழகம்' நடத்திய போட்டியில் வள்ளி இரண்டாம் பரிசைப் பெற்றபோது தானே அலங்கரித்த மலர்க் கொத்துடன் வள்ளியின் வீட்டுக்கு சென்று கொடுத்தான்.

ஒருநாள் மாலை பாட்ரிக் வள்ளியிடம் சென்று , " இந்த வாரம் வெள்ளிக் கிழமை என்ன செய்கிறாய்? நாம் இருவரும் ஒன்றாக வேளியே செல்லலாமா? திறந்த வெளி அரங்கில் ஒரு பெரிய இசைநிகழ்ச்சி நடக்கிறது. அங்கு கூட செல்லலாம். உனக்கு விருப்பம் இருந்தால்....." என்றான்.

வள்ளிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நெஞ்சு படபடத்தது. சில முறைகள் நண்பர்கள் குழுவுடன் திரைப்படம், மலையேற்றம் என்று சென்றிருக்கிறாள். ஆனால் தனியாக ஓர் ஆண் நண்பனுடன் சென்றதில்லையே. அம்மா, அப்பா இதை அனுமதிப்பார்களா? என்றெல்லாம் குழம்பினாள்.

" நான் ஒன்றும் தவறாக கேட்கவில்லையே ? வேண்டுமானால் யோசித்து நாளை பதில் சொல், வள்ளி" பேட்ரிக் சொல்லிக் கொண்டே தனது கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி வர, " சரி வள்ளி , நான் அவசரமாக கிளம்ப வேண்டும். இன்றைய கூடைப் பந்து பயிற்சியை பற்றி மறந்தே போனேன். உன்னுடன் பேசும் சுவாரசியத்தில்.. நாளை சந்திப்போம்" என்று பறந்தே போனான் அவனது சறுக்குப் பலகையில்(skate board) .

சற்று யோசித்ததில் வள்ளிக்கும் அந்த இசை நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்று ஆசை. அதுவும் பேட்ரிக் நல்ல பையன். அவனை பற்றி தவறாக மற்றவர்கள் பேசி அவள் கேட்டதில்லை. பள்ளிக் கூடத்தில் என்னென்ன கூத்து நடக்கின்றது. சே ! சென்ற வாரம் கூட 11ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி பள்ளிக் காவலிடம் புகார் செய்ய வேண்டிய நிலை. அந்த பெண்ணை கிழத்தியவன்(dating) வன்புணர்ந்து விட்டானாம். என்ன கொடுமை ! என்று நினைத்தவாறு தன் மிதிவண்டியில் வீடு வந்து சேர்ந்தாள் வள்ளி. அப்பா இன்னும் வேலையில் இருந்து வரவில்லை. தம்பி தன் அறையில் டி.எஸ் விளையாடிக் கொண்டிருந்தான். அம்மா இணையத்தில் அந்த வார தமிழ்ப் பத்திரிக்கை ஒன்றை படித்துக் கொண்டிருந்தாள். " வாடா கண்ணா. முகம் கழுவி வா. உனக்கு பிடித்த டீ போட்டு வைக்கிறேன்" என்றவாரே அந்த இணைய இதழை மூடினார் அம்மா.


" அம்மா, உன்னிடம் ஒன்று கேட்பேன். இந்த வெள்ளிக் கிழமை பேட்ரிக்குடன் இசை நிகழ்ச்சிக்கு செல்லவா? மாலை 6 மணிக்குத்தான். அதற்குள் படிப்பு வேலையெல்லாம் நிச்சயமாக முடித்து விடுவேன்." என்றாள்.

அம்மா வள்ளியின் கண்களைப் பார்த்தாள். பிறகு " சரி சென்று வா. இரவு 11 மணிக்கெல்லாம் வந்து விட வேண்டும். அப்பாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்" என்றாள். வள்ளிக்கு ஒரே மகிழ்ச்சி. அம்மா அப்பாவிடம் கேட்டால் அவர் இல்லையென்றா சொல்லப் போகிறார் என்று நினைத்துக் கொண்டால் வள்ளி !

வெள்ளிக் கிழமை வந்து சேர ஏதோ மூன்று மாதம் ஆவது போல் இருந்தது வள்ளிக்கு. என்ன சட்டை.. எந்த வாசனை திரவியம்... நகை, செருப்பு என்ற அனைத்தையும் மனதினில் தீட்டி வைக்க ஆரம்பித்தாள்.


வெள்ளிக் கிழமை வள்ளியும் பேட்ரிக்கும் வீட்டருகில் உள்ள சிடார்பக்ஸில்(Starbucks) சந்தித்தனர். இருவருக்கும் பிடித்த மோக்கா வாங்கிக் கொண்டு பொதுப் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் வள்ளியை அவள் அப்பா அந்த அரங்கத்திலேயே வந்து அழைத்துக் கொள்வதாக திட்டம்.

ஆயிரக் கணக்கான இளைஞர்கள் அந்த அரங்கில் கூடியிருந்தனர். பள்ளிக் கூடம், கூடைப் பந்து என்று பல பேச்சுக்களினிடையே, " ஒபாமா வெற்றி பெருவாரா" என்று கேட்டாள் வள்ளி. பேட்ரிக்கு அரசியலில் அவ்வளவு ஆர்வம் இல்லை. அவனுக்கு பிடித்ததெல்லாம் விளையாட்டுதான். அதிலும் மலையேற்றம், கூடைபந்து, சறுக்கு என்றால் அவனுக்கு உயிர். மேடையில் உச்சத்தில் பாடிக் கொண்டிருந்தால் அந்த பாடகி. கூட்டம் ஆர்பரித்து அந்த பாடல்களை இரசித்துக் கொண்டிருந்தது. அப்போது பேட்ரிக் நெருங்கி வந்து வள்ளியின் கரங்களை பற்றிக் கொண்டான். வள்ளி இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை. தனது கைகளை விலக்கிக் கொண்டாள். சில நிமிடங்கள் கழித்து இன்னும் நெருக்கமாக பேட்ரிக் வந்தபோது, " பாட்ரிக், நீ எனது நல்ல நண்பன். பேசலாம். பழகலாம். நெருக்கத்தை தவிர்க்கலாமே. " என்றால் வள்ளி. இதைக் கேட்ட பேட்ரிக்கிற்கு சுருக்கென்று இருந்தது.

புணர்ச்சி பழகுதல் வேண்டா ; உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும் [ நட்பு 79 : 5]
{ தொட்டுப் பழகுதல் என்பது வேண்டும் என்றில்லை. ஒத்த எண்ணத்தால் பழகுவதே சிறந்த நட்பு ஆகும்}


அமெரிக்காவில் பள்ளிக்கூட மாணவர்கள் குறித்த தகவல் இது. 8வது, 9வது படிக்கும் மாணவர்களில் சுமார் 72 % டேட்டிங்( கிழமைத்தல், அல்லது கிழத்தல் என்று தமிழில் சொல்லலாம்) ஈடுபடுகிறார்கள். இதில் 54% பேர் ஏதோ ஒரு வன்முறைக்கும் ஆளாகிறார்கள். இப்படி வன்முறைக்கு உட்படும் மாணவியர்களில் 80% பேர் தொடர்ந்து அதே நண்பர்களுடன் நட்பை தொடர்கிறார்கள். என்ன கொடுமை !