Tuesday, April 15, 2008

வரி = நேர்த்தி கடன் ?

சித்திரை பிறந்தால் வரி செலுத்தும் தருணம். அமெரிக்காவில் ஏப்ரல் 15ம் தேதி வரி செலுத்த கடைசி தேதி. ஆனாலும் இந்த தேதியில் அனுப்ப முடியவில்லை என்றால் முறையாக நீட்டித்தும் கொள்ளலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக இத்தேதிக்குள் அனுப்பி வந்தவன், இந்த ஆண்டு நீட்டித்து விண்ணப்பித்தேன். தோராய பணத்தை(advance tax) அனுப்பி வைத்தேன். நிறுவன கணக்குகளை இன்னும் முடிக்கவில்லை. இன்னும் 15 நாட்களுக்குள் முடித்துவிடுவதாக கணக்கர் உறுதி அளித்துள்ளார். அடுத்த ஆண்டிலிருந்து இவற்றையெல்லாம் உரிய காலத்தில் முடிக்க முயல வேண்டும்.


பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி - இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. [ நாடு 74 : 3 ]

{ பொறை - சுமை ; ஒருங்கு - ஒன்று, முழுமை ; நேர்வது - செலுத்துவது }
பொருள் : எவ்வளவு சுமை இருந்தாலும், வரியை ஒழுங்காக செலுத்துவது நாட்டு மக்களின் கடமை !



(1) வரியை முறையாக செலுத்தாமல், அரசிடம் இருந்து தரமான சேவையை எதிர்பார்ப்பது முறையன்று.
(2) வரியை குறைக்க முறையான வழிகள் உண்டு. ஓய்வு கால சேமிப்பு(401K, IRA) ஓர் உதாரணம். நல்ல சான்றுபெற்ற பொதுக் கணக்கரை(Certified Public Accountant) அணுகினால் ஆலோசனைகள் வழங்குவர்.

இதை படித்தவுடன் வரி செலுத்துவது மட்டும்தான் நம் கடமையா? வரியை எப்படி பயன்படுத்துவது(செலவிடுவது) என்று இறைக்கு(நாட்டின் தலைமைக்கு) வள்ளுவம் என்ன சொல்கிறது என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.


நாட்டின் தலைமை(வரியை வைத்து ) என்ன செய்ய வேண்டும்?

நாட்டின் தலைமை பொதுவாக மூன்று வகையான பொருட்களை(Revenue) ஈட்டுகின்றது. விளை பொருள்(Produce), வரி பொருள்(Tax), தண்டப் பொருள்(Penalty,fine).

உறுபொருளும் உலகு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
[ பொருள் செயல்வகை 76 : 6 ]
{ உறுபொருள்- விளைபொருள் ; உலகுபொருள் - வரி ; ஒன்னார் தெறுபொருள் - தண்டனை பொருள் }



இந்த பொருளை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும்?

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு. [ இறை மாட்சி 39 : 5 ]

{ இயற்றல் - வரிக்கு மட்டுமல்லாமல் அனைத்து முறைகளையும் உருவாக்குதல்(Design of Processes,Systems) ; ஈட்டல் - வரியை பெருதல்(Collection) ; காத்தல் - பெற்ற வரியை வீணாகாது காத்தல்(Preservation) ; வகுத்தல் - காத்துவரும் வரியை நாட்டிற்கு பகுத்தளித்தல்(Proper distribution }

வரி முதலான மூன்று பொருள்களுக்கும் இது பொருந்தும். இப்படி முறையாக நிர்வாகம் செய்யாத அரசை என்ன செய்யலாம்? ' ஓட்டு' உள்ளது. ஏனைய சனநாயக முறைகளும் உள்ளன !


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்