Friday, October 28, 2005

ஒப்புரவும் ஈகையும்

தமிழர்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு உலகமெங்கும் சென்று பொருளும் புகழும் சேர்க்கிறார்கள். நமது தேவைக்கு அதிகமான பொருளை சேர்த்தால் என்ன செய்ய வேண்டும் ? திருக்குறள் அதிகாரம் 22 மற்றும் 23 வழிகாட்டுகிறது. ஒப்புரவு – equalizing – equity for justice என்ற பொருளில் வரும்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றும் கொல்லோ உலகு ? ( 22 : 1 )

பிரதிபலன் பாராது தம் செல்வத்தை சமூகத்திற்கு அளித்தலே ஒப்புரவு . இதற்கு உதாரணமாக என்ன சொல்லலாம் ? மாரி(மழை) உலகம் தனக்கு திரும்பி தருமா என்றா பொழிகிறது ? மழை தன்னை உலகத்திற்கு வழங்குவது ஒப்புரவு. உலகும் சும்மா இருப்பதில்லை. தன்னால் இயன்றதை மீண்டும் நீராவியாக மேலே அனுப்புகிறது. இந்த சமச்சீர் தன்மையால் இப்பிரபஞ்சம் இயங்குகிறது என்பதை நாம் உணரல் வேண்டும்.

இந்த சமச்சீர் தன்மையை ஈகையிலும் வலியுறுத்துகிறார் திருவள்ளுவர். “தானமாக தருகிறார்கள், இலவசமாக கிடைக்கிறது “ என்று மற்றோரிடம் சென்று இரத்தல்(வாங்குதல்) தீயது என்று ஒருபாலரிடம் சொல்லுகிறார். ஆனால் செல்வம் உடையார்க்கு சொல்லும்போது “ மேலுலகம் இல்லையென்றாலும் ஈதலே நன்று” என்கிறார்.
நல்லாறு எனினும் கொளல்தீது – மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று (23 : 2 )


மீண்டும் ஒப்புரவிற்கு வருவோம். ஒப்பிரவின் ஊற்றான செல்வத்திற்கு உதாரணம் சொல்ல வேண்டும்.


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு ( 22 : 5 )

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடையான் கண் படின் ( 22 : 6 )

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தடையான் கண் படின் ( 22 : 7 )

இம்மூன்றிலும் உள்ள பொதுமை செல்வம் . இந்த செல்வத்திற்கு உதாரணம் ஊருணி( ஊருக்கு பொதுவான நீர்நிலை) , நன்கு பழுத்த பழங்களை உடைய மரம் , மருத்துவ பயனுடைய மரம் என்று மூன்று உதாரணங்களை சொல்கிறார். இம்மூன்றிலும் உள்ள மையகருத்தில் முழுமையான தயார்நிலையை ( complete readiness ) சுட்ட வேண்டும் . ஒரு குழந்தையை அழைக்கின்றோம். அக்குழந்தையிடம்
“ ஊருக்கு பொதுவாக உள்ள நீர்ச்சுனையினால் என்ன பயன் ? “ என்று கேட்டுபாருங்கள் . “ தாகம் தீர்க்கும் “ என்று யோசிக்காமல் பதில் வரும்.
“ மரத்தில் உள்ள நன்கு பழுத்த பழத்தினால் என்ன பயன் ? “ என்று கேட்டுப் பாருங்கள். “ ஆகா !. சாப்பிடலாம் “ என்று உடனடியாக பதில் வரும்.
“ ஒவ்வொரு பகுதியும் மருந்தாகி விளங்கும் ஒரு மரம் இருக்கிறது . அதனால் என்ன பயன் ?” என்று கேட்டுப் பாருங்கள். “ நோய் தீர்க்கும்” என்று முடிப்பதற்குள் பதில் வரும்.

இதுபோலவே நமது பள்ளி கேள்வி தாள்களும் அமைந்துவிட்டால் அனைவரும் நூற்றுக்கு நூறுதானே ?!

பங்கு சந்தையின் வீழ்ச்சி….
செல்வம் உள்ளவர் முதலீடு செய்வது பங்கு சந்தை. அப்பங்கு சந்தை பலமுறை சரிவதை நாம் பார்க்கிறோம்.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் – தாம் உடைமை
வைத்திழக்கும் வன் கணவர். ( 23 : 8 )

வறியர்களுக்கு ஈந்து உவக்கும் இன்பம்( உவகை – மகிழ்ச்சி ; இன்பம் – மகிழ்ச்சி – இரட்டை மகிழ்ச்சி ) அறியாதவர்களே பங்கு சந்தையில் முதலிட்டு பொருளை இழப்பார்கள் !

இக்குறளை கேட்ட ஒரு பெண்மணி என் ‘கணவருக்கு’ தானே இந்த குறள் புத்தி சொல்கிறது . நான் பங்குகள் வாங்க செல்கிறேன் என்றாரே பார்க்கலாம் !!!