Monday, May 19, 2008

இவர் இப்படித்தான் !

அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் இன்னொரு ஊர் செல்வதற்காக ஓர் பெண் காத்திருந்தார். அவர் செல்லும் விமானம் கிளம்ப இன்னும் இரண்டு மணிநேரங்கள் இருந்தன. என்ன செய்வது ? அருகில் உள்ள புத்தக கடைக்கு சென்று இரண்டு புத்தகங்களும், ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கினார். வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு அருகில் ஓர் ஆள் அமர்ந்திருந்தார். வாட்ட சாட்டமாக இருந்தார். பார்ப்பதற்கு முரடனாகவும் இருந்தார். கறுப்பர் வேறு.

அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கும் அந்த ஆண் அமர்ந்திருந்த இருக்கைக்கும் சற்று இடைவெளி. அந்த இடைவெளியில் பிஸ்கெட் உள்ள பையை வைத்தார். பை திறந்திருந்தது. பெண் தான் வாங்கிய புத்தகம் ஒன்றை திறந்து ஈடுபாட்டுடன் படிக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் பார்த்தால்… பக்கத்தில் இருந்த பையின் அருகே, திறந்த நிலையில் பிஸ்கட் பாக்கெட் ! அந்த ஆள் ஒன்று.. இரண்டு என்று பிஸ்கெட்டுகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். 'என்ன இந்த மனிதன் ! கருப்பு இன மனிதர்களே இப்படிதான். பண்பே இல்லாமல் , மற்றவர் பிஸ்கட்டுகளை சாப்பிடுவதை என்ன சொல்வது' ' என்று மனதில் நினைத்தவாறு இந்த பெண்ணும் அந்த பிஸ்கட்டுகளை சாப்பிட ஆரம்பித்தார். நாகரிகம் கருதி அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அந்த ஆணும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். இந்த பெண்ணும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். இந்த பெண்ணுக்கோ மனதுக்குள் கோபம். எரிச்சல். தான் வாங்கி வந்த உணவுப் பொருளை தன் அனுமதி இல்லாமல் தெரியாத ஒருவன் சாப்பிடுவதா? முன்னை விட சற்று வேகமாக பிஸ்கட்டுகளை சாப்பிட்டார் அந்த பெண்.

கடைசியில் அந்த பாக்கெட்டில் ஒரே ஒரு பிஸ்கட் மட்டும் இருந்தது.
'சரி, இந்த அற்ப மனிதன் என்ன செய்கின்றான் என்று பார்ப்போம்' என்று நினைத்த அந்த பெண் அமைதியாக இருந்தார். அந்த ஆண் அந்த கடைசி பிஸ்கெட்டை கையில் எடுத்து இரண்டாக உடைத்து ஒன்றை சாப்பிட ஆரம்பித்தார். பொறுமை இழந்த அந்த பெண், வெடுக்கென்று அவன் கையிலிருந்த இன்னொரு பாதியை பிடுங்கி சாப்பிட்டார். 'என்ன அநாகரிகமான மனிதன் இவன் !' என்று கரித்துக் கொண்டார்.

சற்று நேரத்திற்கு பிறகு விமானம் கிளம்பும் நேரம் வந்ததும், இந்த பெண் விமானத்தில் சென்று அமர்ந்தார். நல்ல வேளை அந்த ஆள் வேறோரு விமானம் போல! இப்படி முன்பின் தெரியாத ஒரு ஆளிடம் இருந்து தப்பித்து வந்தோமே என்று நிம்மதி பெருமூச்சு விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். தன் புத்தகத்தை படிக்கலாமே என்று எண்ணி அவர் பையை திறந்த போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ! அவர் வாங்கிய பிஸ்கெட் பாக்கெட் பிரிக்கப்படாமல் அப்படியே அவர் பையில் இருந்தது ! ‘நாம் புத்தகம் படிக்கின்ற ஆர்வத்தில், அந்த மனிதரை எவ்வளவு தவறாக நினைத்தோம்? தோற்றங்களை வைத்து எவ்வளவு தவறாக மதிப்பீடு செய்து விட்டோம். அவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டோம். ஆனால் அவருக்கு எவ்வளவு பெரிய மனம்.’ என்ற எண்ணங்களோடு, அடடா! அவரிடம் மன்னிப்பும் கேட்க முடியாதே என்று தன் செயல் கண்டு அந்த பெண் வருந்தும்போது விமானம் வானத்தை நோக்கி சீறிக் கொண்டி கிளம்பியது.


இந்த கதையை கி.வீரமணி எழுதிய 'வாழ்வியல் சிந்தனைகள்' என்ற புத்தகத்தில் படித்தது. நாம் மனிதர்களை அவர்கள் இனம், நிறம், நாடு, சாதி, மதம், பால், தோற்றம் போன்றவற்றால் ஒருவரை பார்த்தவுடன்
* உயர்ந்தவர் -தாழ்ந்தவர்
* சரியானவர் - தவறானவர்

* அறிவுடையோர் - அறிவிலார்
..... ......
..... ......
முடிவுகளை(Judgement) நம் மனதில் எடுத்துவிடுகிறோம் என்பதை நினைக்கும்போது வியப்பாக உள்ளது.


ஒரு வில்லின் அம்பை பார்க்கிறோம். 'நேராக இருக்கிறதே' என்று வியந்து போற்றினால் நமக்கு கேடாகி விடும். ஆனால் யாழ் கருவியை பார்க்கிறோம்(இன்று இது புழக்கத்தில் இல்லாவிட்டாலும் ஹார்ப் இசைக்கருவி http://etc.usf.edu/clipart/6100/6110/egypt_harp_1_lg.gif போன்று இருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளலாம்) இது வளைந்துள்ளது. ஆதலால் யாழ்க் கருவி மோசம் ! என்று முடிவு செய்வது எவ்வளவு தவறு !

கணைகொடிது ; யாழ்கோடு செவ்விது ; ஆங்கன்ன
வினைபடு பாலால் கொளல். [ கூடா ஒழுக்கம் 28 : 9 ]


ஒருவரை 'சிறந்தவர், சிறப்பில்லாதவர்' என்று அவசரமாக முடிவெடுத்தால், அது அவரை அமர்த்தும் பணிக்கும் கேடாக அமையும் அல்லவா?

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான்என்று ஏவற்பாட்டு அன்று. [ தெரிந்து வினையாடல் 52 : 5]

ஒருவரை அறிந்து , அவர் ஆற்றும் செயலை ஆய்ந்து, அதன் முடிவுகளை வைத்து 'இவன் வினையின் சிறந்தார்' என்று முடிவு செய்தல் எவ்வளவு பயனுள்ளதாக அமையும்.