Friday, July 25, 2008


நட்பின் அளவுகோல்



இது ஒரு பழைய கதை. ஓர் ஊரில் வளவன், கவின் என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள். பள்ளிக்கூடம் செல்ல ஒரு காட்டைக் கடந்துப் போக வேண்டும். அப்படி ஒரு நாள் காட்டைக் கடக்கும்போது, கரடி தூரமாக வருவதை பார்த்து விட்டனர். இவர்களுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. உடனடியாக வளவன் ஓடிப்போய் அருகில் உள்ள உயர்ந்த மரம் ஒன்றில் ஏறிக்கொண்டான். கவினுக்கோ மரம் ஏறத் தெரியாது. என்ன செய்வதென்று தெரியவில்லை ! பிழைத்துக் கொள்ள ஒரு வழி அவனுக்கு தோன்றியது. அந்த மரத்தின் கீழேயே படுத்துக் கொண்டான். கரடி கிட்டே வர வர, அவன் மூச்சை விடாமல் இறந்தவன் போல் படுத்திருந்தான். கரடியும் கிட்டே வந்தது. கவினை முகர்ந்துப் பார்த்தது. பிறகு சென்று விட்டது. கரடிதான் இறந்தவர்களை உண்ணாதே !

கரடி வெகுதூரம் போனபின், மரத்தின் மேலே இருந்த வளவன் கீழே இறங்கி வந்தான். இருவரும் 'அப்பாடா, தப்பித்தோம்' என்று நிம்மதியுடன் பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தனர். அப்போது வளவன், ' கவின், நீ கீழே படுத்திருக்கும் போது கரடி உன் காதருகே ஏதோ சொன்னது போல் இருந்ததே ! என்ன ? " என்று கேட்டான்.

அதற்கு கவின், " கரடி என்னிடம் ஓர் இரகசியம் கூறியது. துன்பத்தில் உன்னை விட்டு போய்விடுபவர்கள் நண்பர்கள் அல்ல. துன்பம் வரும் போது ஒரு நன்மை உறுதியாக கிடைக்கும் - உண்மையான நண்பர்களை கண்டுகொள்ளும் அளவுகோல் ! " . இதை கேட்ட வளவன் வெட்கி, தலைக் குனிந்தான்.

கேட்டினும் உண்டோர் உறுதி ; கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
[ நட்பு ஆராய்தல் 80 : 6]
{ கேடு - துன்பம் ; உறுதி - நன்மை ; கிளைஞர் - நண்பர் ; கோல் - அளவுகோல்}
நண்பரை நீட்டி அளக்கின்ற அளவுகோல், துன்பத்தில் நன்மையாக பெறலாம்.


திருமணம் ஆன மனைவி தன் கணவனிடம் கேட்டாள், " உங்கள் உற்ற தோழர் திருமணத்திற்கு வரவே இல்லையே?"
அவன் கூறினான், " எனக்கு துன்பம் வந்தால், அவன் என்கிட்டே வரவே மாட்டான் !" . இது எப்படி இருக்கிறது ? சென்ற வார விகடனில் படித்தது.