Tuesday, March 07, 2006

திருமகளும் அவள் அக்காவும்

ஓர் ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். இருவரையும் அவர்களின் தந்தை அழைத்து ஆளுக்கு $10,000 கொடுத்து, ஒரே மாதத்தில் யார் பணத்தை அதிகமாக பெருக்கி வருகிறார்களோ  அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றைக் கொடுப்பதாக கூறினார். இரண்டே இரண்டு நிபந்தனைகள் . 1. சூதாட்டம் கூடாது 2. பங்குச் சந்தையில் முதலிட கூடாது.

பத்தாயிரம் பெற்றுக் கொண்ட அண்ணன், உற்சாகமே இல்லாமல், அவனைவிட நிறைய பணமும் வசதியும் உள்ள அவன் நண்பர்களை நினைத்துக் கொண்டான். பொறாமையின் விளைவால் பேராசை கொண்டான். அவனுக்கு தெரிந்தவன் $10,000 கொடுத்தால் ஒரே மாதத்தில் இரண்டு மடங்கு பணம் கொடுப்பதாக ஆசை காட்டினான்.
ஒரு மாதத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள் அல்லவா? கொடுத்த பணத்தை அண்ணன் தொலைத்து விட்டான்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்  [ அழுக்காறாமை 17 : 7 ]
பொறாமை என்று தீக்கொழுந்தை மனத்தில் கொண்டவனை, செய்யவள்(திருமகள்) தன்னுடைய அக்கா மூதேவிக்கு காட்டி விடுவாள். அழுக்காறு வறுமையில்(மூதேவி – வறுமையின் அடையாளம்) கொண்டு போய் விடும் அன்றோ?

தம்பி தனக்கு கொடுக்கப்பட்ட பத்தாயிரத்தை வைத்து என்ன செய்தான் என்று பார்ப்போம். தம்மிடம் இந்த பணத்தை வைத்து நாலு பேருக்கு நன்மை செய்தால் என்ன என்று யோசித்தான். தன் வீடு தேடி வந்த விருந்தினரின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவி செய்தான். ஒரு விருந்தினருக்கு வியாபாரம் ஆரம்பிக்க $5,000 தேவைப் பட்டது. அவரை உபசரித்து அவருக்கு தேவைப் பட்ட பணத்தை கொடுத்தனுப்பினான். இன்னொரு நாள் வந்த விருந்தினர் தனது பெண்ணின் கல்விச் செலவிற்கு $ 5,000 தேவை என்றார். இன்முகத்துடன் அப்பணத்தை கொடுத்தனுப்பினான். இரண்டு விருந்தினர்களுக்கான  தேவைகளை பூர்த்தி செய்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தான் இளையவன்.

இரு சகோதரர்களும் தன்னுடைய பணத்தை செலவு செய்துவிட்டனர். கையில் பணம் இல்லை. அப்பாவிடம் வந்தனர். நடந்ததை அறிந்த தந்தை இளையவனை அழைத்து, “ நீ விருந்தினருக்கு முகமலர்ச்சியுடன் உதவி செய்துள்ளாய். ஆதலால் அப்பணம் நல்ல விதைகளைப் போன்றது. தொழிலுக்கு கொடுத்த பணம் சில ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி, உன்னிடம் உதவியை பெற்றவருக்கும், அவரை சார்ந்தோர்க்கும் பயன் தரும். ஒரு பெண்ணின் கல்விக்கு கொடுத்த பணம் பிற்காலத்தில் அப்பெண்ணின் குடும்பத்திலும் சமூகத்திலும் செல்வத்தை பற்பல மடங்கு பெருக்கும். ஆதலால் பணத்தை ஒரே மாதத்தில் பன்மடங்கு பெருக்கிய உனக்கே என் சொத்தின் பெரும்பங்கை தரப்போகிறேன்” என்றார்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.   [ விருந்தோம்பல் 9 : 4 ]
முகமலர்ச்சியுடன் விருந்தினரை பார்த்துக் கொள்பவர்களின் வீட்டில், நிரந்தரமாக(உறைதல்) திருமகள்(செல்வத்தின் அடையாளம்) வந்து அமர்ந்துக் கொள்வாள்.

1 comment:

Anonymous said...

FANTASTIC STORY for the YOUNG ONES!!! Please keep it up!!!
vaazththukkaL!