Wednesday, July 13, 2005

கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் குறள்களில் உள்ள பொதுவான அமைப்புகளை இங்கே பார்ப்போம்...

ஒவ்வொரு மனிதனும் கடவுள் நிலையை அடைய முடியும் . இறைவன் நம்மில் இருக்கின்றான் , நம் அன்றாட வாழ்வில் அவனை காண முடியும் .

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஆர் எனின்

'கற்றதனால் ஆய பயனென்' என்று நமது 'இயல்பு' நிலையை சொல்லி - இறைவனின் தாளை(திருவடி) வணங்கினால் வால் அறிவனை அடையலாம் என்ற மேன்மை நிலையை சொல்கிறார். வாலறிவன் என்பது infinite intelligence என்று கொள்ளலாம். நாம் கற்பது அளவுடையது. அது நமது இயற்கை. ஆனால் இறையின் பண்பு - வால் அறிவு . அளவுடைய அறிவில் இருந்து வால் அறிவிற்கு நாம் செல்ல அவன் திருவடியை பணிந்தால் போதும்.


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

நன்மை- தீமை , இன்பம்- துன்பம் என்று எதிர்மைகளை கொண்டதே நம் வாழ்க்கை. இறைவனின் பொருள்(மெய்ப்பொருள்) மேன்மையானது. நம்முடைய ஒவ்வொரு செயலும்(புகழ் புரிதல்) மெய்ப்பொருளை சார்ந்து அமைந்தால் வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்திலிருந்து நம்மை பாதிக்காது.
இருள்சேர் இருவினை - நம் வாழ்வின் 'இயல்பு'
இறைவன் பொருள் - மெய்ப்பொருள் - இறையில் பண்பு
இறைவன் பொருள்சேர் புகழ் புரிதல் - நம்மை இவ்வாழ்வின் 'இயல்பிலிருந்து' விடுவித்து இறையில் பண்பை நம்மிடம் வளர்க்கும்.


இதுபோல மற்ற 8 குறள்களையும் பாருங்கள். மூன்று பகுதிகளாக அவற்றையும் பிரித்து பாருங்கள். சிகப்பு பகுதி - நம் இயல்பு நிலை , நீலம் - இறையின் பண்பு , பச்சை - சிகப்பிலிருந்து நீலத்தை அடைய நம் பணி .


இவ்வழியில் கடவுள் வாழ்த்தின் 10 குறட்பாக்களையும் மனனம் செய்யலாம் அல்லவா ? மறந்து விடாதீர்கள் ... ஒலி ஒளி அமைப்பில் படக்கதையாக மனதில் பதிய வைக்கவேண்டும்.


அடுத்தது... வான் சிறப்பு

No comments: