Wednesday, July 20, 2005

'கடவுள் வாழ்த்து' அதிகாரத்திற்கு அடுத்ததாக 'வான் சிறப்பு' அமைத்திருக்கும் திருவள்ளுவர், இயற்கையின் ஒப்பற்ற பிரதிநிதியாக வான் மழையாக கொள்கிறார் எனலாம்.

இந்த அதிகாரத்துடன் என் கற்பனை இப்படி ஓடுகிறது. வானிலிருந்து மிகப்பெரிய மழைத்துளிகள் 3 பெய்கின்றன. வண்ணத்துடன் ஆரவாரத்துடன் அவை பொழிவதாக கற்பனைக் கொள்ளலாம்.

முதல் துளி.. தனி மனிதனுக்கு பயன் தருகிறது. உயிரினங்களுக்கும் இது பொருந்தும். முதல் 3 குறள்கள் இதை புலப்படுத்துகின்றன. அமிழ்தம் என்றும்(1), மழையே தாகத்தை தீர்க்கவும், உணவாகவும்(2), மழை இல்லையேல், உலகமெங்கும் நீர்நிலையால் அமைந்திருந்தாலும் - பசியை தாங்க முடியாத(3) ஆகிய அடிப்படை தத்துவங்களை தொடராக மனதில் நிறுத்தலாம்.

இரண்டாம் துளி ... உணவுக்கு அடிப்படையான விவசாயத்திற்கு மழை எவ்வளவு இன்றியமையாதது என்பதை அடுத்த 3 பாக்கள் சொல்கின்றன.
பாடி மனனம் செய்யும்போது அநேக குறட்களில் உள்ள எதுகை-மோனை (rhyme ) அமைப்பை உணர்ந்தால் மனனம் இன்னும் எளிதாகிறது !.
உதாரணமாக விசும்பின் என்று முதல் அடியில் வந்தால் அடுத்த அடியில் பசும்புல் என்று அமைந்திருப்பதை பார்க்கிறோம். இது மோனை அமைப்பு.
இத்தோடு இன்னொரு அமைப்பையும் அனைத்து குறட்பாக்களிலும் காணலாம். அதுதான் செப்பலோசை . செப்பல் - பேசுதல்-உரையாடல் . அதாவது இருவருக்கும் நடக்கும் உரையாடல்(dialog) போன்றே அனைத்து குறள்களும் அமைந்திருப்பது ஆராய்ச்சிக்குரியது. விசும்பின் துளிவீழின் அல்லால் ? என்று ஒருவர் கேட்பது போலவும் அதற்கு இன்னொருவர் 'மற்றாங்கே பசும்புல் தலை காண்பது அரிது' என்று பதில் சொல்வது போலவும் அமைந்திருப்பது செப்பலோசை.


மூன்றாம் மழைத் துளி .. வாழ்வின் உயர்ந்த நெறிகளோடு உள்ள மழையின் தொடர்பையும் காட்டுகிறது . நீர் நிலைகளின் சுழற்சியின் முக்கியத்துவத்தையும்(7) , பூசனை, தானம் , தவம், ஒழுக்கம் என்று நாம் முக்கியமாக கருதும் அனைத்தும் மழையை சார்ந்தே உள்ளன(8,9, 10 ) .

இதில் பத்தாவது குறளின் முடிவாக வரும் 'ஒழுக்கு' அடுத்த அதிகாரமான நீத்தார் பெருமையின் முதல் குறளில் ஆரம்பமாகவும் அமைவதை காண்கிறோம் .


நான் பள்ளியில் படிக்கும்போது திருக்குறள் உரையென் பரிமேலழகர், மு.வரதராசனார் ஆகியவற்றை பரவலாக புழங்கியுள்ளோம். ஆனால் சமீபத்தில்தான் தேவநேயப் பாவாணர் எழுதிய உரையை பற்றி கேள்விபட்டு சென்னை சென்றபோது ஹிக்கிம்போதத்தில் 'திருக்குறள் - தமிழ் மரபுரை' வாங்கி வந்தேன்(ஸ்ரீ இந்து பதிப்பகம், 40 உஸ்மான் சாலை, தியாராய நகர், சென்னை - 600 017 ) . இந்த உரையில் தான் அதிகாரங்களின் தொடர்புகளை தெளிவாக எழுதியுள்ளார். உதாரணமாக ஏன் 'நீத்தார் பெருமை' என்ற அதிகாரம் 'வான் சிறப்பு' க்கு பின் திருவள்ளுவர் அமைத்துள்ளார் என்பதை பாவாணர் என்ன சொல்கிறார் என்று கவனிப்போம்..

" இறைவன் திருவருளைப் பெற்றவரும், மழைபெயற்கு ஓரளவு கரணியமாகக் கருதப் பெறுபவரும், பேரரசர்க்கும் பெருந்துணையாகும் அறிவாற்றல் மிக்கவரும், மழைக்கு அடுத்தபடியாக நாட்டு நல்வாழ்விற்கு வேண்டியவருமான, முற்றத்துறந்த முழுமுனிவரின் பெருமை கூறுவதால் "

இப்படி அதிகார தொடர்புகளையும், ஒவ்வொரு அதிகாரத்துள்ளே அமைந்துள்ள இணைப்புகளை கண்டுகொண்டாலே மனன பயிற்சி எளிதாகிறது.. வாழ்க்கையின் உண்மைகளும் தெளிகிறது.







No comments: