சொர்க்கத்தின் கதவுகள் - 4
சொர்க்கத்தில் அன்று தணிக்கை(ஆடிட்) நடந்து கொண்டிருந்தது. ஆதலால் அன்று சொர்க்கத்துக்கு வந்திருந்த 3 நபர்களை தேர்ந்தெடுத்து மறு ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். முதலாமவர் திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றியவர். திருமணத்திற்கு பின் மனம் திருந்தி இல்லறமே நல்லறமாக வாழ்ந்தவர். அவருடைய கோப்பை பார்த்த தணிக்கையாளர் " பெண்ணை காதலித்து ஏமாற்றிய பாவத்திற்காக ஓராண்டு நரகத்தில் இருப்பார். பின்னர் இவரை சொர்க்கத்தில் அனுமதிக்கலாம். " என்று குறிப்பு எழுதினார். இரண்டாமவர் தனது பெரும்செல்வத்தை யாருக்கும் கொடுத்து உதவாமல் நேர்மையாக வாழ்ந்தவர். அவருடைய கோப்பில் " 5 ஆண்டுகள் நரகம். பிறகு சொர்க்கம்" என்று எழுதப்பட்டது. மூன்றாமவர் தனது வாழ்நாளில் கருணையே யாரிடமும் காட்டாதவர். வேலை செய்த இடத்தில் 'கொடுங்கோலன்' என்றும், சுற்றத்தாரால் 'கல்நெஞ்சன்' என்றும் அழைக்கப்பெற்றவர். கரும வினையோ அல்லது வேறோ, சொர்க்கத்துக்கு வந்துவிட்டார் அவர். இவரின் கோப்பை பார்த்த தணிக்கையாளர் " உடனடியாக இவனை பூமியில் கொடுங்கோலாட்சி நடக்கும் நாட்டிற்கு அடிமையாக அனுப்புங்கள் ". சொர்க்கத்தின் பக்கமே வராதபடி தடை உத்தரவே போட்டார் தணிக்கையாளர்.
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. [ அருளுடைமை 25 : 7 ]
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகில் நலமிக்க வாழ்வில்லை; அருள்(கருணை) இல்லாதவர்க்கு சொர்க்கத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை!
Thursday, February 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment