சொர்க்கத்தின் கதவுகள் - 2
இல்வாழ்க்கை அதிகாரத்திலேயே, நாம் ஏற்கனவே சொன்ன கருத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். வீடுபேறு அடைய 'தனியாக' எந்த முயற்சியும் தேவையில்லை.
கோதண்டம் எளியவர். ஏழை. அவர் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் இடையே உள்ள பெரிய ஆற்றில் படகு ஓட்டி பிழைப்பு நடத்துபவர். விவசாயம் வேறு தனியாக உண்டு. ஒரு நாள் அவரின் படகில் வேதங்களை கற்ற ஒரு வேதியர் ஏறினார். படகு நகர்ந்தது.
வேதியர் கோதண்டத்தை பார்த்து "படகு ஓட்டுபவரே, தினமும் மந்திரங்கள் ஓதும் பழக்கம் உண்டா" என்றார்.
"இல்லை சாமி" என்றார் படகு ஓட்டி.
" அப்படியா!. உன் வாழ்க்கையின் கால்பகுதியை வீணாக்கி விட்டாயே. கோவிலுக்காவது தினமும் போகும் பழக்கம் உண்டா ? கேட்டார் வேதியர்.
" இல்லை சாமி. எப்போதாவது கோவில் விசேசம் என்றால் போவேன்" படகு ஓட்டி பதில் சொன்னார்.
" அடடா, வாழ்க்கையின் பாதியை வீணாக்கிவிட்டாயே" என்று கவலை கொண்டார் வேதியர்.
படகு பாதி ஆற்றை கடந்தது. காற்றும் பலமாக வீச, படகு வேகமாக
அசைந்து நீரில் மூழ்க ஆரம்பித்தது. பதற்றத்துடன் படகு ஓட்டி, வேதியரை பார்த்து, " சாமி, உங்களுக்கு நீந்த தெரியுமா ? " என்றார் . " இல்லை" என்று வந்தது பதில்.
" அப்படியா சாமி, வாழ்க்கையை முழுவதும் வீணாக்கிவிட்டீர்களே " என்றார் படகு ஓட்டி கோதண்டம் அப்பாவியாக . இருப்பினும் படகு ஓட்டி மனமிறங்கி ஒருவழியாக வேதியரை காப்பாற்றி கரையேற்றினார்.
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் - புறத்து ஆற்றில்
போய் பெறுவது எவன் ? [ இல்வாழ்க்கை 5 : 6 ]
அறம் கலந்த இல்வாழ்க்கையை ஒருவர் மேற்கொண்டால் , பிரம்மசாரியம் முதலான புற முயற்சிகளால் என்ன பயன் ?
அறம் கலந்த இல்வாழ்க்கை மேற்கொள்பவர்கள் மோட்சம் அடைய முடியுமா? முடியும். அந்த நம்பிக்கையை- உறுதியை இல்வாழ்க்கை அதிகாரத்தின் கடைசி குறளில் காணலாம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். [ இல்வாழ்க்கை 5 : 10 ]
இறந்தால் எங்கே செல்வீர்கள் என்று கேட்டால், வானத்தை காட்டி அங்கே செல்வோம் என்று பலர் சொல்வதை பார்க்கிறோம். வான் உறையும் அத்தகைய இடத்துக்கு செல்ல மற்ற பல கதவுகளும் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்....
அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்
Friday, February 03, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment