Monday, January 30, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 1

அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால்களை விளக்கும் திருக்குறளில், நான்காவதான 'வீடுபேறு' விடுப்பட்டு போய்விட்டது ஏன் என்று சிலர் கேட்பர். வீடுபேறை தனியான தொகுதியாக வைக்காவிடினும் , நிறைய அதிகாரங்களில் அத்தகைய வீடுபேற்றை எப்படி பெறுவது என்று அழகாக சொல்லுகிறார் வள்ளுவர்.

ஒரு $20 பில்லியன் நிறுவனம் உள்ளது. அதில் பலதுறைகள் உள்ளன. மார்க்கெட்டிங், மனித ஆற்றல், நிதி... திருமுருகன் எம்.பி.ஏ படித்து இந்த நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்கிறார். முதலில் அவருக்கு நிதித் துறையில் வேலைத் தருகிறார்கள். அங்கு 2 வருடங்கள் வேலை செய்து நிதி நிர்வாகத்தின் நுட்பங்களை திறமையாக கற்றுக்கொள்கிறார் . பிறகு மார்க்கெட்டிங்கில் 3 ஆண்டு.. அதிலும் சிறப்பான பணி. பிறகு மனித ஆற்றல் துறையில் 2 ஆண்டு. இப்படி அனைத்து நிறுவனப் பணிகளையும் அவர் திறம்பட செய்வதை பார்த்த அந்நிறுவன தலைவர் திருமுருகனை தனது நிர்வாக உதவியாளராக(executive asst) நியமிக்கிறார். இந்நிலையில் திருமுருகன் நிறுவனத்தின் வெற்றிகளை தீர்மானம் செய்யும் வீயூகங்கள் வகுப்பதில் பங்குபெறுகிறார். இந்த நிலையில் 6 ஆண்டுகள் பணியாற்றியபின், நிறுவனத்தின் 12 துணைத் தலைவர்களில் ஒருவராக அவரை நியமனம் செய்கிறார்கள். நிறுவனத் தலைவர் ஓய்வு பெரும் காலம் வந்த போது அவரின் வாரிசாக கடும்போட்டிக்கு இடையே திருமுருகனை தலைவராக, அந்நிறுவனத்தின் போர்டு தேர்ந்தெடுத்ததில் நமக்கெல்லாம் வியப்பு இல்லைதானே ?

வீடுபேறும் அப்படித்தான். அதற்கென்று படிப்பு ஒன்று இல்லை. அதற்கு நேரடியாக அனுபவம் இல்லாமல் விண்ணப்பிக்க முடியாது. ஆனால் அறம், பொருள் என்ற நிலைகளில் சிறந்து பணியாற்றினால் அத்தகுதியே வீடுபேறை நமக்கு தரும். வள்ளுவம் சொல்லும் செய்தியும் இதுவே.

நான் இதுவரை ஆழமாக படித்து மனப்பாடம் செய்துள்ள 31 அதிகாரங்களில் மீண்டும் மீண்டும் எழு பிறப்பு என்றும், புத்தேள் என்றும், மறுமை என்றும் கூறுவதை பார்க்கின்றேன். அறம், பொருள் அதிகாரங்களில் வீடுபேறு நிலைக்கு ' உள்ளே செல்ல' நிறைய கதவுகளை வைத்துள்ளதை பார்க்கிறோம்.
அவற்றை பற்றி எழுதுகிறேன்...


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

No comments: