Friday, January 27, 2006

சான்றோர் - ஐந்தாம் பகுதி

சான்றோர் என்று மற்றோரால் அங்கீகரிக்கப்படும் போது 'நமக்கு எல்லாம் தெரியும்' என்ற எண்ணம் வரும். அப்போது பொது மேடைகளிலோ அல்லது தனியாக பேசும்போதோ, சான்றோர் பயனில்லாதவற்றை பேசுவதுண்டு.


ஆடலரசன் சொல்லாற்றலும், அறிவாற்றலும் நிறைந்த அரசியல்வாதி. பொதுமக்களுக்கு இடைவிடாது தொண்டாற்றி வருபவர். நல்லவர். கட்சி தலைமையிடமும் நல்ல பெயரும் இருந்ததால் பாரளுமன்ற தேர்தலில் எளிதாக வெற்றிபெற்று டெல்லி சென்றார். பொதுவாக நேரம் வரம்பு இல்லையென்றால் திறம்பட பேசும் வல்லமையுள்ளவர் அவர். பாராளுமன்றத்தில் தனக்கு கொடுக்க பட்ட குறைவான நேரத்தில் பேசுவதற்கு பழக்கப்படாததால் அவரின் பேச்சுக்கள் பயனில்லாத பேச்சுக்களாகவே அமைந்தது. இதை கவனித்த அக்கட்சியின் தலைவர் ஆடலரசனை தனியாக அழைத்தார்.

" ஆடலரசா, உன்னைப் போன்ற அரசியலார்க்கு நயம் உடைய இனிய சொற்களை பேசும் ஆர்வம் மேலோங்கி இருக்கும். அது அவசியம். ஆனால் நயமில்லாத கசக்கும் சொற்களை பேசினாலும் , எக்காரணத்தை கொண்டும் பயன் இல்லாத சொற்களை பேசாதே ! நயம் உடைய சொல் கேட்பவருக்கு அப்போதுமட்டும் இனிக்கும். ஆனால் பயன் உடைய சொல் கேட்டவருக்கு, பின்னர் கூட அது இனிக்கும். இதை புரிந்துகொண்டால் பாராளுமன்றத்தில் நீ தடம் பதிப்பாய். " என்று வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

நயனில சொல்லினும் சொல்லுக ! சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. [ பயனில சொல்லாமை 20 : 7 ]

சான்றோர் நயமில்லாத சொற்களை சொன்னாலும் சொல்லலாம். ஆனால் பயனில்லாத சொற்களை அவர்கள் சொல்லாமல் இருப்பது நலன்.

No comments: