Monday, July 31, 2006

தம்பிக்கு எந்த ஊர்?

கடந்த 3 வாரங்களாக எழுதாமைக்கு காரணம் – நான் தமிழகம் சென்று வந்ததால் ஏற்பட்ட இடைவெளி. 5-6 மாதங்களுக்கு ஒருமுறை சென்று வருகிறேன். பெற்றோரை பார்க்கவேண்டும், மற்றும் அங்குள்ள தொழிலை கவனிக்க வேண்டும் என்பவை பயணத்தின் நோக்கமாக இருந்தாலும், இதுமாதிரி பயணங்களால் நல்லது என்னவென்றால் நான் பிறந்த ஊருக்கு சென்றால் யாரும் ‘தம்பிக்கு எந்த ஊர்’ என்று கேட்பதில்லை. அனைவருக்கும் நம்மை தெரியும்!

இந்த பயணத்தின் மூலம் நெஞ்சில் நீங்கா இரண்டு சந்திப்புக்கள். திருச்சி அருகில் (அல்லூர்- திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில்- காவிரி கரையில் அமைந்துள்ள அழகிய ஊர்) ‘திருவள்ளுவர் தவச்சாலை’ தமிழ் அறிஞர் திரு.இளங்குமரனார் அவர்களையும் , சென்னையில் இசைக்கலைஞர் டி.கே.எஸ்.கலைவாணன் அவர்களையும் சந்தித்தது.

ஜூலை 18ம் தேதி காலையிலேயே நாம் தங்கியிருக்கும் திருவானைக்காவலில் இருந்து அல்லூருக்கு 20 நிமிடங்களிலேயே சென்றடைந்தோம். இளங்குமரனார் திருவள்ளுவர் கோவிலையும், பாவாணர் நூலகத்தையும் காட்டி விளக்கினார். இவர் 65க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். திருக்குறள் ஓதி திருமணங்களையும் நடத்தி வருகிறார். அவரிடம் பேசும்போது நிறைய திருக்குறள்களில் வரும் ‘ஆறு’(நல்லாறு, அறத்தாறு, ஆற்றின் ஒழுக்கி… ) இதன் பொருள் கேட்டேன். அழகான விளக்கம் கொடுத்தார். “ மண்ணை அறுத்து கொண்டு போவதால் ஆறு. ஆற்றை ஒட்டியே மனித நாகரிகங்கள் தோன்றியுள்ளன. ஆதலால் செல்வது – வாழ்வது என்ற பொருள்களை ‘ஆறு’ குறிக்கும்” என்றார். ‘ஆற்றுப்படை’ என்ற சொல்லும் ஆறு என்ற வேர்ச்சொல்லை கொண்டது என்று விளக்கினார். பழனியில் திருமுருகனை காண நான் செல்ல வேண்டும். எனக்கு வழி தெரியாது. கூகுள், மேப்கொஸ்ட் போன்ற சேவைகளும் கிடையாது. எதிரே வரும் பெரியவர் ஒருவரை கேட்கிறேன். பழனிக்கு போவதற்கு வழியை(ஆறு) சொல்கிறார். பயணக்களைப்பு இல்லாமல் இருக்கவும், பயமின்றி செல்லவும் பாடல்களை நமக்கு பாதுகாப்பிற்கு(படை) அனுப்புகிறார். திருமுருகாற்றுப்படை என்ன சூழலில் பாடப்பெற்றது என்பதையும் அறிய முடிந்தது.

ஜூலை 20ம் தேதி மதியம் சென்னையில் கலைமாமணி திரு டி.கே.எஸ் கலைவாணன் அவர்களை என் குடும்பத்தினருடன் சென்று சந்தித்தோம். இவர் இன்றைய தமிழ் நாடகங்களின் முன்னோடி திரு. டி.கே.சண்முகத்தின் தவப்புதல்வர். 2002ஆம் ஆண்டில் சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க மாநாட்டில் திருக்குறள் கடவுள் வாழ்த்து பாடிய இனிய குரலால் தெரியும். பின்னர் நண்பர் அட்லாண்டா சந்திரசேகரன் இவர் பாடிய 13 திருக்குறள் குறுந்தகடு கொடுத்தபின் , எம் குடும்பத்தினர் அனைவருக்கும் இவர் அறிமுகமானார். சந்தித்தபோது, இவர் பாடிய திருக்குறள் குறுந்தகடுகளை(25 பிரதிகள்) வாங்கி வந்தோம். 4 கு.த(சீடி) இல் 1330 பாடல்களையும் அழகாக பாடியுள்ளார். என் குடும்பத்தினரின் திருக்குறள் மனப்பாட முயற்சிக்கு வெகுவாக உதவிடும்.

எனது தம்பிக்கும், தங்கைக்கும் இந்த இசைத் தொகுப்பை கொடுக்கும்போது, இவை 1 கோடி ரூபாய்க்கு சமம் என்று சொல்லிக் கொடுத்தேன். உண்மையாக.

1 comment:

Anonymous said...

அன்புள்ள மலர்ச்செல்வன்:
கட்டுரையும் இளங்குமரனார் சந்திப்பு செய்தியும் நன்றாக அமைந்துள்ளது.

இன்று மதியம் இனிமையான சந்திப்பு. மகிழ்ச்சி.
கலைவாணரின் திருக்குறள் குருந்தகடு சென்னையில் எங்கு கிடைக்கிறது.
இமெயிலில் தெரிவிக்கவும்.
நலம் நிறைக.
அன்புடன்
ரா. ராதாகிருஷ்ணன்