Friday, June 30, 2006

நான் யார் - 2

தன்னை அறியும் சிந்தனையில் அறிவழகன் ஆற்றோரமாக நடந்து செல்கிறார். நான் 'உடலும் இல்லை' ; 'மனமும் இல்லை' என்றால் உயிராக இருக்க முடியுமா? இந்த சிந்தனையில் நடந்து செல்லும்போது ஆற்றங்கரையில் இருந்த ஓர் வீட்டில் குழந்தையின் சத்தம் கேட்கிறது. இப்பிறப்புதானே உயிரின் வித்தாக அமைகிறது. அப்பிறப்பின் காரணம் என்ன?

பொருள் அல்லவற்றைப் பொருள் என்றுணரும்
மருள்ஆனாம் மாணாப் பிறப்பு.
[ மெய்யுணர்தல் 36:1]
( மருள் - மயக்கம்)


அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஆ பிறப்பீனும் வித்து .
[ அவா அறுத்தல் 37 : 1 ]
(அவா - ஆசை ; தவா - தவறாது )

இந்த இரண்டு குறள்களும் பிறப்பின் மூலத்தை எப்படி படம்பிடித்துள்ளது என்று சிந்திக்கலானார் அறிவழகன்.

மயக்கம் x ஆசை --> பிறப்பு ---> உயிர்

ஆணும் பெண்ணும் கூடுவதால் பிறப்பு என்று மேலோட்டமாக பார்க்கும்போது புலப்படுகிறது. ஆனால் உண்மையில் மயக்கமும் ஆசையும் கூடியே பிறப்பு உண்டாகிறது என்று தெளிவு பிறக்கிறது.

இந்த உயிர், பிறந்த சுமார் 2 ஆண்டுகள் வரை உடலை மட்டுமே இயக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது. ஆனால் வளர வளர, நம் ஐந்து புலன்கள் மூலம் உணர தொடங்கும்போது, உயிரே மனமாக படர்கிறது. எப்படி? ஒரு வயது குழந்தை பாம்பின் படத்தை (அல்லது) உண்மையான பாம்பினை பார்க்கிறது. எந்தவொரு எண்ணமும் அக்குழந்தையின் மனதில் இருக்குமா? ஆனால் வளர்ந்தவுடன் பாம்பை பார்த்தால் பயமோ அல்லது கருணையோ தோன்றுவது இயற்கைதானே? இது எப்படி நடக்கிறது? புலன் மூலம் பாம்பை பற்றிய முதல் அனுபவம் அல்லது அறிவு 'நினைவாக' நம்மில் பதிந்துவிடுகிறது. அடுத்த முறை படத்தில் பாம்பைப் பார்த்தால் கூட, நம்மில் பதிந்துள்ள நினைவு மனமாக(எண்ணமாக) படர்கிறது. ஆக நாம் வளர வளர உயிர் உடலை மட்டும் இயக்காமல், மனத்தையும் இயக்கும் சக்தியாக அமைகிறது.

இந்த உயிரை பார்க்க முடியுமா? முடியாது. உணரத்தான் முடியும். ஓரளவு விவரிக்கவும் முடியும். நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம். நிலம், நீர், நெருப்பு, காற்று, வான். இவற்றிலும் 99.99% நம் உடல் வானாக(ஆகாயமாக) அமைந்துள்ளது என்று அறிவியலார் சொல்கிறார்கள். இங்குதான் வான் துகள்கள் அதிவேகத்தில் சுழன்று(பிரபஞ்ச கோள்கள் போல்) ஒரு வித காந்தசக்தியை(bio-magnetism) உருவாக்கிறது. மின்சார கம்பியில் பாயும் எலெக்ரான்கள் போல், இந்த காந்த சக்தியும் நம் உடல் முழுக்கப் பாய்ந்து சுற்றி வருகிறது. இதைத் தான் நாம் உடலின் இயக்கங்களாகவும், மனத்தின் எண்ணங்களாகவும் உணர்கிறோம்.

உடலையும், மனத்தையும் இயக்குவதால் உயிர் நிலையானதா? என்ற எண்ணத்துடன் அறிவழகன் ஆற்றைக் கடக்கும்போது இறந்துபோன ஒருவரை தூக்கிச் செல்வதை பார்க்கிறார்.

நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு. [ நிலையாமை 34:6]
('நேற்று நன்றாக இருந்தார். இன்றில்லை' என்னும் பெருமை உடையது இவ்வுலகு)

மேலும் உயிரின் நிலையாமையை திருவள்ளுவர் கூறும்போது,

நாள்என ஒன்றுபோல் காட்டி - உயிர் ஈரும்
வாள் அது உணர்வார்ப் பெறின் [ நிலையாமை 34: 4 ]
( வாழ்நாள் நிலையானது போன்ற தோற்றத்தை காட்டினாலும், ஒவ்வொரு நாளும் கீழே இறங்கும் வாள் போன்றது)

குடம்பை தனித்துஒழிய புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு [ நிலையாமை 34 : 8 ]
( குடம்பு - கூடு ; புள் - பறவை - கூடை விட்டு பறந்துவிடும் பறவையை போன்றது உடம்பை விட்டு பறந்திடும் உயிர் )


உடல், மனம், உயிர் என்று நாம் அறியும் அனைத்தும் நிலையற்றது என்று உணர்ந்தால், 'நான் யார்' என்ற கேள்வி இன்னும் ஆழமாகிறது.


அறிவழகன் இந்த ஆழ்ந்த சிந்தனையுடன் அந்த ஆற்றங்கரையில் உள்ள அழகிய ஆலமரத்தின் கீழே அமர்ந்து, கண்களை மூடி மனதை ஒருமுகப் படுத்துகிறார். அமைதி அவர் உள்ளத்தில் பரவி இருப்பதை உணர்கிறார். நேரம் ஆக ஆக அகக்காட்சியாக தெரிகிறது.
>>>>>> உடலில் 99.99% ஆக இருக்கும் வான்வெளி தெரிகிறது.....
>>>>>> அந்த வான்வெளியில் இருக்கும் வான் துகள்கள் தெரிகின்றது
>>>>>>> அந்த வான் துகள்கள் பிரபஞ்ச வேகத்தில் ஓர் ஒழுங்கு முறையாக சுழல்வது தெரிகிறது...
>>>>>>>>> வான் துகள்களின் சுழற்சியின் ஆற்றல், காந்த சக்தியாக -உயிராக - உடலை இயக்கும் ஆற்றலாக - எண்ணங்களைப் படர செய்யும் படக்கருவியாகவும்(projector) தெரிகிறது.......

>>>>>>>>>>>>> அந்த வான் துகள்களை அகக்கண்ணால் பார்க்க பார்க்க அவை எங்கோ மறைவதாக(blackhole) தோன்றுகிறது.....
>>>>>>> அந்த 'மறைபொருளே' - பேரன்பும் அருட்பேராற்றலும் நிறைந்த இறைவெளியாகவும் உணர முடிகிறது.

நான் யார் என்ற கேள்விக்கான விடை அகக்காட்சியாக தெரிகிறது.


அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்

2 comments:

supersubra said...

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ?


உடல் என்பது வெறும் வெளி தான்
குதம்பைச்சித்தரின் இந்த வரிகள் இப்பொழுது நன்றாக புரிகிறது.

Anonymous said...

excellent,eppati ungalal intha anavukku vilakka mudigirathu.
my name is anbu
greentamilan@gmail.com