Friday, June 09, 2006

நான் யார்?

வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில் 'நான் யார்' , ' என் வாழ்க்கையின் பயன் என்ன?' போன்ற கேள்விகள் தோன்றுவது இயல்பு.

மனிதர்கள் ஞானிகளாகவும், மாபெரும் சாதனையாளர்களாகவும் ஆவதும் இக்கேள்விகளால் தான்.

மாணிக்கவாசகர் திருவாசகத்தில்...

நான் யார்? என் உள்ளம் யார்? நானங்கள் யார்? என்னை யார் அறிவார்?
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் ?
[ நானங்கள் - ஐந்து புலன்கள் ]
(இளையராஜா இசையில் இப்பாடலை கேட்கும் போது உள்ளம் உருகும் அன்றோ? )

சமீபத்தில் மறைந்த அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி பயிற்றுவித்த குண்டலினி பயிற்சியில் இத்தகைய ஆராய்தல் செய்வதற்கும் பயிற்சி அளிக்கிறார்கள்.

திருக்குறள் அதிகாரங்கள் நிலையாமை(34), துறவு(35), மெய்யுணர்தல்(36), அவாவறுத்தல்(37 ) இந்த அகத்தாய்விற்கு வெகுவாக உதவுகிறது.

நம் கண்களுக்கு தெரிவது இந்த உடல். இந்த உடல்தான் நானா? உடல் கோடானு கோடி திசுக்களால் ஆனது என்பது நமக்கு தெரியும். ஆனால் இந்த உடலில் உள்ள திசுக்கள் சுமார் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுமையாக புதுப்பித்துக் கொள்கிறது. 2001 ஆண்டில் என் உடம்பில் இருந்த திசுக்கள் அனைத்தும் இப்போது இல்லை என்கிறது விஞ்ஞானம். மேலும் திசுக்களில் எதனால் ஆனது? அணுக்களால். அந்த அணு புரோட்டானும், நியூட்ரானும், எலெக்ட்ரானும் ஆனது என்றும் அறிவியல் கூறுகிறது. அணுவை நுண்ணியத் துகள்களாக பிரித்தாலும், 99.99% 'வெற்றிடமாக' இருக்கிறது என்றும் அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது.
அப்படியென்றால் நம் உடல் என்பது 99.99% 'வெற்றிடம்' என்றும், அப்படி கொஞ்சம் நஞ்சம் மீதி உள்ள துகள்கள் அனைத்தும் தொடர்ந்து அழிவதும், பிறப்பதுமாக இருக்கிறது. 2 ஆண்டுகள் முன் இருந்த உடல் கூட இப்போது என்னிடம் இல்லை! . அப்படியென்றால் நான் இந்த உடல்தான் என்று சொல்வது சிற்றறிவு தானே?
நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
புல்லறிவு ஆண்மை கடை. [ நிலையாமை 34: 1]
[ புல்லறிவு - சிற்றறிவு ; கடை - கடைசி]

'காயமே இது பொய்யடா. காற்றடைத்த பையடா'
என்ற பாடல் புரிய ஆரம்பிக்கிறது.

இந்த ஆராய்ச்சியில் தெளிவாக தெரியும் ஒன்று. 99.99% வெற்றிடமாக உள்ளது உண்மையில் வெற்றிடமா? அல்லது வெட்ட வெளி போல் தோன்றும்
பேரண்டமா(Gallaxy)?


நான் இந்த உடல் இல்லையென்றால், உள்ளமாக(~ மனம்,mind) இருக்க முடியுமா? உள்ளம் என்பது என்ன? நம்மை சிந்திக்க வைத்து, உடலின் அனைத்து பாகங்களை இயக்குவதும், உணர்வுகளின் ஊற்றும் அதுதான். உதாரணமாக 'பசி' என்று உடலுக்கு சொல்வது இந்த மனம்தான். 'நினைவு' (~ memory) என்பது இந்த மனத்திற்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நினைவில்லாமல் பசி தோன்றாது ; நினைவில்லாமல் சூடான இட்டலி, சாம்பாரை பார்த்தவுடன் எச்சில் ஊறவும் செய்யாது. நினைவே மனத்திற்கு ஆதாரம். முதல் முறையாக ஒரு உணவை பார்க்கும்போது எந்த நினைவும் இல்லாமல் சுரப்பிகள் வேலை செய்வது இல்லை. ஆனால் ஒரு முறை சுவைத்துவிட்டால் அந்த 'நினைவு' பதிந்து விடுகிறது. அடுத்த முறை அதை படமாக பார்த்தால் கூட, நினைவு மனத்தின் மூலம் வயிற்றில் சுரக்க வைக்கிறது. ஐந்து புலன்கள்(கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) நினைவுகளை தோற்றுவிக்கும் கருவிகளாக இருக்கிறது. ஆதலால்தான் மனத்தை அடக்க வேண்டும் என்றால் ஐம்புலன்களை காக்க வேண்டும்.
ஒருமையில் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து [ அடக்கமுடைமை 13 : 6 ]

அப்படி ஐம்புலன்களில் தம் கட்டுக்குள் வைத்தவர்கள் பெரியோர் என்கின்றார்.
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றுஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு. [ நீத்தார் பெருமை 3 : 7 ]

நம் மனதின் இன்னொரு வெளிப்பாடு எண்ணம். எண்ணங்கள் பெரும்பான்மையானவை புலன்கள் தயாரிப்பவை. சாலையில் செல்லும்போது பெரிய தாடி வைத்த ஒருவர் என்னைக் கடக்கிறார். உடனே 'தாடி வேலை இல்லாதவராக இருப்பாரோ?', 'இவர் போலவே ஒருவரை போனவாராம் பார்த்தேன். அவர் அழுக்குச் சட்டையுடன், கையில் பை ஒன்று வைத்திருந்தார்' ..... என்று ஒன்றை அடுத்து ஒன்றாக எண்ணங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கும் நினைவு வெகுவாக உதவுகிறது.

மனத்தில் தோன்றும் எண்ணங்கள் உடலுக்கு தெரியாமல் மறைந்திருக்க முடியுமா? வீட்டில் நுழைகிறோம். மேசையில் சிகப்பு நிறம் தோய்ந்த கத்தியை பார்க்கிறோம். புலன் தெரிவிக்கும் இந்த செய்தி, எண்ணமாக('நம் வீட்டில் ஏதோ விபரீதம்') மாறுகிறது. நினைவையும்( 'சினிமாவில் இதுபோன்ற கத்தியை பார்த்திருக்கிறேன்') துணைக்கு அழைக்கிறது. விளைவு : அட்ரினலின் சுரந்து உடலில் மாற்றங்கள் உண்டாகின்றன. உண்மையிலேயே காய்கறி வெட்டும் கத்தியில் குங்குமப் பொட்டு சிதறி சிகப்பாகி உள்ளது.

நினைவு மனத்திற்கு ஆதாரம் என்றால், எண்ணம் ? எண்ணமே மனம். மனத்தை உடைத்து உடைத்து பகுத்தாய்ந்தால் நாம் சென்றடைவது 'எண்ணம்'. அதிலும் தொடர்ந்து எண்ணங்களையா நம் கொடுக்கிறது. ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கண்களை மூடுங்கள் . முதல் எண்ணம்: ' நாளை விடுமுறை' , அடுத்த எண்ணம் ' இரவு என்ன சாப்பிடலாம்' ... என்று இரயில் வண்டிபோல் வந்துகொண்டிருக்கும். ஆனால் கூர்ந்து கவனித்தால் ஒரு எண்ணத்திற்கும் இன்னொரு எண்ணத்திற்கும் இடையே ஒரு 'வெட்டவெளியை' காணலாம். இந்த வெட்ட வெளியில் தங்கியிருந்தால் ஒருவித அமைதி தெரிகிறது. ஆனால் அதிகநேரம் இந்த எண்ண இடைவெளியில் அமர்ந்திருக்க முடியவில்லை. ...

மனம் எண்ணங்கள், நினைவுகள் ஆனது என்று பார்த்தோம். அந்த எண்ணங்களும், நினைவுகளுமே மாறிக் கொண்டே செல்வதையும் பார்த்தோம். ஆதலால் 'நான்' மனமும் அல்ல என்பதை உணர முடிகிறது.

உடலை ஆய்ந்துப் பார்த்தால் அங்கும் 'வெட்ட வெளி' யால் நிரம்பி இருப்பதை அறிகிறோம். மனத்தை ஆராய்ந்து பார்த்தால், எண்ணங்களுக்கு இடையே 'வெட்ட வெளி' நிறைந்திருப்பதை பார்க்கிறோம்.

மேலும் 'நான்' உடலும் உல்லை; மனமும் இல்லை என்பதை காண முடிகிறது.

அப்படியென்றால் 'நான்' உயிராக இருக்க முடியுமா?

[ தொடரும்]


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

3 comments:

Anonymous said...

This is great introspection. A discovery that is never ending. Great article.

Anonymous said...

There cannot be any better explanation of who we are - what we are made up of - what is our real understanding of self.
Great article indeed. Venkat Rajan

Anonymous said...

thodarungal ayya!...

poimmaiyae perukki pozhuthinai churukkum puzhuthalai pulaiyanaen thanakku chemmaiyae aaya siva patham alitha selvamaey sivaperumaanaey!...=thiruvaasagam...