Friday, March 31, 2006

தேநீர் குடிக்கலாம் வாங்க...

ஓட்டல் கடை வைத்திருந்த ஓர் செல்வந்தர் நீண்ட நாட்களாக நல்லதோர் குரு தமக்கு அமைய வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் எங்கும் தேடி அலைய நேரமும் இல்லை. நல்ல வியாபாரம் வேறு. ஓட்டலுக்கு வருவோரை ஒவ்வொருவராக கவனிக்கலானார். திடீர் என்று ஒருநாள் தனது ஓட்டலுக்கு வந்த ஒரு பெரியவரின் காலில் விழுந்து,
"ஐயா, நான் நீண்டநாட்களாக தேடிக் கொண்டிருந்த குரு நீங்கள்தான். என்னை தங்கள் மாணவனாக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார் பணிவுடன்.

ஓட்டலில் வேலை செய்வபர்களுக்கு ஆச்சரியம். தன்னுடைய முதலாளியிடம் சென்று, " முதலாளி, எப்படி அவர்தான் நல்ல குரு என்று கண்டுபிடித்தீர்கள்? " கேட்டார்கள்.

அதற்கு அந்த ஓட்டல் அதிபர், " ஓட்டலுக்கு நிறையபேர் வருகிறார்கள். அவர் தேநீர் அருந்தும் விதத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். தேநீர் அருந்திக் கொண்டே செல்போனில் பேசுவதும், அங்கும் இங்கும் பார்ப்பதும் அல்லது பத்திரிக்கை படிப்பதுமாக இருந்ததைதான் இதுவரை கண்டு வந்தேன். ஆனால் இவரோ தேநீரை நிதானித்து இரசித்து குடித்துக் கொண்டிருந்தார். இவரே என் குரு என்று முடிவு செய்தேன்" என்றார்.

ஒரு நாளில் சுமார் 60,000 - 80,000 எண்ணங்கள் நம் மனதில் தோன்றுவதாக கூறுகிறார்கள். சுமாராக ஒரு நொடிக்கு ஓர் எண்ணம் என்று கணக்கு வருகிறது. இப்படி அலைபாயும் மனத்தை கட்டுக்குள் கொண்டுவந்து 'இங்கே, இப்போது வாழ்' என்பதைத்தான் ஞானிகள் சொல்லி வந்துள்ளார்கள்.

அப்படி வாழாதவர்களை திருவள்ளுவர்...

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. [ நிலையாமை 34 : 7]

வள்ளுவனுக்கு என்ன கிண்டல் பாருங்கள்!. ஒரு பொழுதில் வாழத் தெரியாமல் அலைபாயும் நம்மிடம் கோடி(ஒன்றல்ல, பல) எண்ணங்கள் என்கிறார்.

1 comment:

Anonymous said...

In our fast life, so many people forget that we need to live in the 'Present'. U have reminded everyone to live in the 'Present' with help of Thiruvalluvar.
REally Great.