Friday, January 06, 2006

சான்றோர் என்பார்...(1)

சான்றோர் என்றால் பெரியோர் என்று பொருள் கொள்ளலாம் எனினும், அதை விட ஆழமான பொருள் உள்ளதாகவே தோன்றுகிறது.

சான்றோர் , நீத்தார் , பெரியோர் என்பவை வெவ்வேறு பொருள் உடையவை என்பது என் கருத்து.

நீத்தார் என்போர் தன்னை உணர்ந்த ஞானி என கொள்ளலாம். அவர் ஒழுக்கத்து நீத்தார்(3: 1), துறந்தார்(3 : 2 ), இருமை வகை தெரிந்தவர் ( 3 : 3 ) ,உரன் எனும் தோட்டியான்(3:4 ), ஐந்து அவித்தான்(3: 5), செயற்கரிய செய்வார்(3: 6), சுவைகளின் வகை தெரிவார்(3 : 7) , நிறைமொழி மாந்தர்(3 : 8 ), குணம் எனும் குன்றேறி நின்றார்(3:9 ), அறவோர்(3: 10) என்று அவரின் வடிவத்தினை 'நீத்தார் பெருமை' அதிகாரத்தில் பார்த்தோம். இந் நிலையை துறவற பண்புகளை பின்பற்றியிருந்தால் அடைய முடியும்.

சான்றோர் என்போர் ஒருவரின் வெற்றிக்கு உலகம் கொடுக்கும் சான்று(அங்கீகாரம்). சான்று - உதாரணம் - benchmark - example. ஒரு குடும்பத்தில் தீய பழக்கம் உடைய ஒரு பையன் இருக்கிறான். அவனை அவர் தந்தையும் தாயும் கண்டிக்கிறார். அவனுக்கு ஒரு சிறப்பாக வாழும் ஒருவரை உதாரணமாகக் கொடுக்க வேண்டும். நினைத்துப் பார்க்கிறார்கள்.
" இங்கே பார். பூங்கோதையை உனக்கு தெரியும். அவர் நமக்கு தூரத்து சொந்தம் கூட. அந்த அக்கா எவ்வளவும் பெயரும், புகழுடன் இருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு கூட அவருக்கு குடியரசு தலைவரின் பரிசு ஒன்று கிடைத்தது தெரியும் உனக்கு. அவரை போல அல்லவா நீ வாழ்க்கையில் உயர வேண்டும்" என்று சொல்கிறார்கள்.

அந்த பையன் நினைத்துப் பார்க்கிறான். அப்பா சொல்லும் பூங்கோதை அக்கா உண்மையிலேயே சிறந்த உதாரணமாக இருந்தால் மட்டும் , அவன் மனதில் அப்பெண் உதாரணமாக அமையப் போகிறார். பூங்கோதை அச்சமூகத்தின் சான்றோர் ஆகிறார். சான்றோர் என்பது சமூக அங்கீகாரம். குடும்ப அளவில் உதாரணமாக காட்டக்கூடிய பண்புகளை கொண்டு வாழ்வது.

மக்கட்பேறு அதிகாரத்திலேயே( # 7 ) தாயின் பூரிப்பில் சான்றோர் என்பதற்கான ஊக்கத்தை அளிப்பதை பார்க்கிறோம்.

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய். [ மக்கட் பேறு 7 : 9 ]

[ குறிப்பு : இங்கு மகன் என்பது பொதுப் பெயர். மகளுக்கும் பொருந்தும் ]

என் இரண்டாம் பெண் பிறக்கும்போது(மார்ச் 28,2002) மகப்பேறு அறையில் இருந்தேன். அந்த காட்சி என் மனதில் பசுமையாக உள்ளது. பிறந்த உடன் செவிலியர் குழந்தையை என் கையில் கொடுக்கின்றர். அப்போது குழந்தையின் கண்கள் இரண்டும் மூடி உள்ளன. என் மனைவி( நானும் தான்), குழந்தையின் கண்கள் மூடியுள்ளதே என்ற அடைந்த பதற்றத்தையும், பின் செவிலியர், குழந்தை இருட்டிலிருந்து மிகவும் பிரகாச வெளிச்சத்திற்கு வருவதால் அப்படி உள்ளது என்று விளக்கியவுடன் என் மனைவி அடைந்த உவகையை நான் அறிவேன். அந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியில் இருந்தாலும், தாயின் பரவச உணர்ச்சிகளையும், பெரும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்காது. அத்தகைய உவகையையும் விட, ஒரு தாய் தன் மகள்/மகன் 'சான்றோர்' என்று மற்றோரால் அழைக்கப்படும்போது அடையும் மகிழ்ச்சியோ பெரிது !



அன்புடன்,

கரு. மலர்ச் செல்வன்

No comments: