Wednesday, January 04, 2006

பிறன் மனைவியை அடைவான் என்ன ஆவான் ?

கற்பு நெறி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. மனைத்தக்க மாண்புடையாளாகவும், கற்பு என்னும் உறுதி கொண்டாள், கொழுநன் தொழுதெழுவாள் என்று மனைவிக்கு நெறிகளை காட்டிய(அதிகாரம் 6 - வாழ்க்கைத் துணைநலன் ) திருவள்ளுவர், ஆணுக்கும் அத்தகைய நெறிகளை 'பிறனில் விழையாமை' அதிகாரத்தில் கூறுவதை பார்க்கிறோம்.

கணவன் வெளியூருக்கோ வெளிநாடுக்கோ வேலை செய்யும் நிலையில் பெண்கள் தனியாக வீட்டில் ( அல்லது குழந்தைகளுடன்) வசிப்பதை பார்க்கிறோம். அல்லது ஒன்றாக வாழ்ந்தாலும் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். இத்தகைய மனநிலையில் மனைவிக்கு ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய ஏக்கம் வரலாம். இது கற்பு நெறி அல்ல. அத்தகைய நிலையில் வேறோருவன் அப்பெண்ணின் வாழ்க்கையில் புகுவது எளிதாகினும், அப்படி செய்பவனுக்கு எக்காலத்திலும் அழியாத பழி வந்து சேரும்.

எளிதென இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. [ பிறனில் விழையாமை 15 : 5 ]

அப்படி பிறன் மனைவியை அடைந்தவனுக்கு, பழி தனியாகவா வந்து சேரும் ? இல்லை. பகை, பாவம், அச்சம் ஆகிய மூன்றும் கூடவே வரும்.

பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண். [ பிறனில் விழையாமை 15 : 6 ]

இதை வலியுறுத்தும் கதைகளை நான் படித்திருந்தாலும், சமீபமாக டிவிடியில் 'மெட்டி ஒலி' என்ற திரைதொடரின் ஒருபகுதியில் பார்த்தது....

மாணிக்கம் கடுமையாக உழைக்கும் மனிதர். அதே ஊரில் சரளா என்ற குடும்பப் பெண், கணவர் வெளிநாட்டில் வேலைசெய்ய, தனியாக வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பார். மாணிக்கதிற்கும் சரளாவிற்கும் கள்ள காதல் . பின்னர் மாணிக்கத்தின் திருமணத்திற்கு பின் , அத்தொடர்பு இல்லாமல் போனாலும் , பழி நிலைத்து மாணிக்கத்திற்கு வேலை போய்விடுகிறது. பின்னர் அவன் வாழ்க்கையில் நடக்கும் சிரமங்களுக்கு அப்பழியோடு வந்த பகை, பாவம், அச்சம் காரணமாகிறது.

அதனால் தான் நம்முன்னோர்கள், ஐம்பெரும் பாதக செயல்களில் ஒன்றாக பிறன் மனைவியை நாடும் குற்றத்தை வைத்துள்ளார்கள்.



அன்புடன்,
கரு. மலர்ச் செல்வன்

No comments: