Thursday, December 22, 2005

தவமும் வெற்றியும்

ஆண்டு இறுதியில்(நவம்பர்-திசம்பர்) உலகம் முழுவதும் நோன்பை கடைபிடிக்கும் மரபை பார்க்கிறோம். முகமதியர்கள் இரமதானும், இந்துக்கள் மார்கழி நோன்பும் கடைபிடிப்பதை பார்க்கிறோம். கிருத்துவர்களின் கிருத்துமஸ் கூட ஒருவகை நோன்புதான். எனக்கு கல்லூரி பருவத்தில் இரமதான் நோன்பு இருந்த அனுபவமும் உண்டு. ஐயப்பனை காண நோன்பிருந்து கல்லும் முல்லும் கடந்த அனுபவமும் உண்டு.

இந்த நோன்பின் தத்துவமே துன்பத்தை பொறுத்தல். துன்பத்தை பொறுத்தலும், எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமலுமே தவம் என்று வள்ளுவம் சொல்லுவதை (27: 1) பார்த்தோம். ஆனால் இத்தகைய தவத்தை எல்லோராலும் செய்யமுடியுமா ? நீரிழிவு நோய் உள்ள ஒருவர் மருத்துவரிடம் சென்றார். “அய்யா, சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்வதை குறைக்க வேண்டும். எப்படி என்று ஆலோசனை கூறுங்கள்” என்றார். அதற்கு மருத்துவர் “ இன்னும் 3 வாரம் கழித்து வா” என்றார்.
அவரும் 3 வாரம் கழித்து வந்தவுடன் மருத்துவர் உணவில் சக்கரையை குறைத்துக் கொள்வது எப்படி என்று விளக்கி கூறினார். விடைபெறும் போது, வந்தவர் மருத்துவரிடம், “ இந்த ஆலோசனையை அன்றே சொல்லாமல், மூன்று வாரம் கழித்து சொல்கிறீர்களே. ஏன்? “ என்றார். அதற்கு மருத்துவர் சிரித்துக்கொண்டே “ சர்க்கரையை குறைப்பது எப்படி என்று முதலில் கேட்டபோது, என் மனதில் தோன்றிய ஆலோசனையை என்னால் உறுதியுடன் பின்பற்ற முடிகிறதா என்று மூன்று வாரம் முயற்சித்தேன். முடிந்தது. இப்போது உங்களை பின்பற்ற சொல்லுகின்றேன் “ என்றார். மனித பழக்கவழக்கங்களை ஆராய்ந்தவர்கள் எந்த ஒரு புது பழக்கமும் 21 நாள் சவாலை( 21 day challenge) வெல்லுகிறதா என்று பார்க்க சொல்லுகிறார்கள். ஆதலால் தான் தவம் ‘கடினம்’. காலையில் 4.30 மணிக்கு எழுந்து உடல்பயிற்சி செய்யவேண்டும் என்று அலாரம் வைப்பேன். ஆனால் 4.30 மணிக்கு எழுந்து அலாரத்தை அமுக்கிவிட்டு திரும்பித் தூங்கி விடுவேன் !!!.

தவமும் தவமுடையாருக்கு ஆகும் - அவம் அதனை
அஃதிலார் மேற் கொள்வது. [ தவம் 27 : 2 ]

தவத்தின் எதிரி அவம். அவையங்களின் ( ஐந்து புலன்களின்) விருப்பபடி நடப்பது அவம். அப்படி நடக்காமல் உறுதியுடன் தவமிருத்தல் , கொடுப்பினையும் உறுதியும் இருந்தால் மட்டுமே முடியும்.

இலர் பலராகிய காரணம், நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் [ தவம் 27 : 10 ]

இவ்வுலகத்தில் இல்லை என்போரே பெரும்பாலோர் உள்ளனர். என்ன காரணம் ? நோற்பார்( தவம் செய்வோர், உறுதியுடன் நோன்பு கடைபிடிப்போர் ) சிலராகவும், அவையங்களின் கட்டுப்பாடில் பலராகவும் இருப்பதால் தான். வெற்றிக்கு இதைவிட சிறந்த இரகசியம் உளதா ?



அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

No comments: