Saturday, November 26, 2005

சொக்க தங்கம்

நகை என்றாலே பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் ஆசைதான். நகைகளில் தங்கம் தவிர வைரம்,ரோடியம்,வெள்ளி என்று பலப்பல ‘மண்பொருட்கள்’ நம்மை அலங்கரிக்கின்றன. உலகச் சந்தையில் புல்லியன்களாக வர்த்தகம் நடைபெறுகிறது என்பதையும் நாம் அறிவோம். ஆனால் பண முதலீடே இல்லாமல் அணிகலன்களை குவிக்க முடியும். எப்படி ?

நல்லதொரு குடும்பம். அக்குடும்பத்தை திறம்பட நடத்திச் செல்லும் மனையாள் அக்குடும்பத்தின் சிறப்பாகவும் புகழாகவும் விளங்குபவர். கணவரோடு அறச்செயல்கள் பற்பல ஆற்றுபவர். அவர்களின் மக்கட்செல்வம் பண்பும் அறிவும் நிறைந்த மக்கள். அம்மக்கள் குடும்பத்தின் அணிகலன்களாக விளங்குபவர்கள்.

மங்கலம் என்ப மனைமாட்சி – மற்றதன்
நன் கலம் நன்மக்கட்  பேறு. [ இல்வாழ்க்கை 5 : 10 ]
[ மங்கலம் – சிறப்பு/புகழ் ; கலம் – அணிகலன்/நகை ]

நாம் சேர்க்க வேண்டிய சிறந்த ஆபரணங்கள் நல்ல குழந்தைகளே !

மேலே சொன்ன திருக்குறளின் அதிகாரத்தையும்(5) குறளையும்(10) மாற்றி பார்ப்போம்… கிடைப்பது 10 : 5 [ இனியவை கூறல் ( 10: 5 ]


பெரும்பான்மையான நிறுவனங்களில் வரவேற்பாளாராக பெண்கள் பணிபுரிவதை பார்க்கிறோம். அவர்களின் பணிவு கலந்த இன்சொல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தருகின்றது.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி ; அல்ல மற்றுபிற. [ இனியவை கூறல் 10 : 5 ]

பணிவும் இன்சொல்லும் உடையோர் வேறு நகைகள் அணியத் தேவையில்லை. அவர்களை சார்ந்த குடும்பத்திற்கும் நிறுவனத்திற்கும் ஒளிவீசும் அணிகலனாகவும் அமைவர். நகைகளில் சிறந்தது புன்னகை.

தொடக்கப் பள்ளி(5ம் வகுப்பு வரை) ஆசிரியர்களாக பெண்கள் நியமிக்கப்படுவதற்கும் இதுதான் காரணம் அன்றோ?.







1 comment:

Useful Shopping Tips said...

மிக நன்று