Thursday, June 30, 2005

மனப்பாடம் எவ்வளவு அவசியமோ அதைவிட அவசியம் புரிந்தும், மகிழ்ச்சியுடன் கற்றல். சினிமா பாடல்களை கேட்கும்போது உள்ள துள்ளல் நம் திருக்குறளை பாடும்போது வருமா ? வரும். சுவைத்து இசைக்கும்போது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் டி.கே.எஸ்.கலைவாணர் பாடிய 15 அதிகாரத் தொகுப்பை குருந்தட்டு(சீடி)யில் வாங்கினேன். எவ்வளவு அழகாக பாடியுள்ளார். வாகனத்தில் செல்லும்போது குழந்தைகளுடன் குறட்பாக்களை கூடப்பாடும்போது கிடைக்கும் இன்பமே அலாதி!

குறள் அதிகாரங்களின் பெயர்களையும் அதன் எண்களையும் நினைவில் வைத்துக் கொள்வது முதல் படி என்று ஏற்கனவே பார்த்தோம். 133 அதிகாரங்களில்
* முதல் 38 அதிகாரங்கள் - அறம் ( நன்றும் அதை சார்ந்த குணங்களும் )
* அடுத்த 70 அதிகாரங்கள் - பொருள் ( அறம் விளைவிக்கும் பொருளும், புற நெறிகளும் )
* கடைசி 25 அதிகாரங்கள் - காதல் நெறி, இன்பம்

இவை அகத்திலிருந்து புறத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் பாங்கை பார்க்கிறோம். ஒரு பெரிய பாத்திரம் உள்ளது. கீழேயிருந்து மேலே பல்வேறு வடிவங்களில் அமைந்துள்ளது - குடுவையை போல. அதில் தண்ணீர் ஊற்றினால் கீழே நிரம்பினால் தானே பிறகு மேலே நிரம்பும். அதுபோல் நம் வாழ்க்கை அறப்பண்புகளை நிறைவாக கடைபிடித்தால் தானே புறத்தில்(நிறுவனத்திலும், சமுதாயத்திலும் ) வெற்றிபெற்றிட முடியும். இந்த கருத்தை போன்றே எழுதபெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக விற்பனையாகி கொண்டிருக்கும் ஒரு புத்தகம் Steven Covey - '7 Habits of highly effective people'
http://www.amazon.com/exec/obidos/ASIN/0743272455/102-7999194-0380129

இப்புத்தகத்தில் உட்கருவே inside-out என்பதே !. அதுபோன்று அறம்-பொருள்-இன்பம் குறள் அமைப்பிலும் ஒரு தொடர்ச்சியை காண்பீர்கள் .

சரி... அறத்தின் 38 பாடல்களுக்கும் உள்ள தொடர்ச்சி(pattern ) பார்ப்போம். முதல் 4 அதிகாரங்களில் 3 அதிகாரமான கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார்(பெரியோர்) பெருமை ஆகியவை ஒரு கோர்வையாக வரும் . இயற்கையின் மூன்று அடித்தளங்களாக காணலாம். இவற்றை அடித்தளமாக கொண்டு அமைவது 'அறன் வலியுறுத்தல்' .

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். [ 1 : 10 ]

என்று கடவுள் வாழ்த்து முடிவதின் தொடர்ச்சியாக ..


வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று [ 2 : 1 ]

என்று கடலுக்கும் வானுக்கும் தொடர்ச்சியை ( கற்பனையாக) உருவாக்கலாம்.

அதுபோல் ஒழுக்கு என்று முடியும் வான் சிறப்பு அதிகாரத்தில் இருந்து 3ம் அதிகாரமான 'நீத்தார் பெருமை' க்கு தொடர்பு படுத்த முடியும்.

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு. [ 2: 10]

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பணுவல் துணிவு. [ 3 : 1 ]


மேலும்,
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயுர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். [ 3 : 10]

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு [ 4 : 1]


இந்த தொடர்ச்சிகளை புரிந்துகொண்டால்

1 - கடவுள் வாழ்த்து
2 - வான் சிறப்பு
3 - நீத்தார் பெருமை
4 - அறன் வலியுறுத்தல்

என்று எண்களோடு அதிகாரங்களை நினைவு வைத்துக் கொள்ள முடியுமல்லவா ? இப்போது சென்ற இதழில் சொன்னதுபோல் , ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள குறள்களை ஒலி-ஒளி படமாக மனத்திரையில் பிடிக்க வேண்டும்.

படம் 1 : கடவுள் வாழ்த்து : 1 - 10 காட்சிகள்

படம் 2 : வான் சிறப்பு : 1 - 10 காட்சிகள்

என்று இந்த 4 அதிகாரங்களிலும் உங்கள் நேரத்திற்கு ஏற்ப மனப்பாடம் செய்யலாம். இப்போது ஒவ்வொரு அதிகாரத்தினுள்ளே அமைந்துள்ள கோர்வையை கண்டோமானால் இன்னும் எளிதுதானே !.

'கடவுள் வாழ்த்தில்' நான் அறிந்த கோர்வையை அடுத்த இதழில் சொல்வேன் !..

1 comment:

Agathiyan John Benedict said...

அட நம்ம FetNA பட்டிமன்ற கரு. மலர்ச் செல்வனா இது? கட்டுரை நன்றாக இருக்கிறது. தொடர்பு கொள்ளுங்கள் jpbenedict@gmail.com