Saturday, October 21, 2006

விதியை எளிதாக வெல்ல....


குடும்பம், வேலை என்று எங்கும் அழகேசனுக்கு கடினமான நேரம்தான். எதை எடுத்தாலும் பிரச்சனைதான். உதாரணமாக வேலை செய்யும் அலுவலகத்தில் சென்ற வாரம் அழகேசன், அங்குள்ள ஒரு மேலாளருக்கு வணக்கம் செலுத்தினார். நமக்கெல்லாம் நமது மேலாளர்களுக்கு வணக்கம் செலுத்தினால் நல்லதுதானே நடக்கும்? ஆனால் அழகேசனுக்கு அவர் செய்த வணக்கமே அவருக்கு கிடைக்கவேண்டிய தீபாவளி ஊக்கத்தொகை பாதியாக கிடைக்க வழிசெய்தது. வியப்பாக இருக்கிறதா? இதுதான் காரணம். அழகேசன் வணக்கம் சொல்லி அந்த மேலாளரிடம் இனிமையாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தார் இன்னொரு மேலாளர். இரண்டு மேலாளருக்கும் ஏழாம் பொருத்தம். கேட்கவா வேண்டும். அழகேசனின் தீபாவளி ஊக்கத் தொகை பாதியானதின் கதை இதுதான்!. தொடர்கதையாக வீட்டில் துணைவியார் அவரை என்ன பாடுபடுத்தியிருப்பார் என்று நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்!!


சிலர் இதை 'விதி' என்றனர். வேறு சிலர் 'கோள்கள் நிலை' சரியில்லை என்றனர். உறவினர் ஒருவர் அழகேசனை அந்த ஊரில் உள்ள துறவியிடம் அழைத்து சென்றார் - 'பரிகாரம்' ஏதேனும் கிடைக்குமா என்ற ஆவலில்.


அழகேசனின் துன்பங்களை கேட்டறிந்த அந்த துறவி,

" உன் துயரங்கள் அனைத்திற்கும் ஒரு எளிய வழி ஒன்று சொல்கிறேன். நாளையில் இருந்து 21 நாட்களுக்கு, காலை 4 மணிக்கு எழுந்து குளித்து, 20 நிமிடம் ஏதேனும் நல்ல நூல் ஒன்றை படி. 21 நாட்கள் கழித்து வா" என்றார்.

அழகேசனுக்கோ ஒரே குழப்பம். நம்முடைய துன்பங்களுக்கும் இந்த துறவி சொல்லும் தீர்வுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. இருந்தாலும் செய்வதாக சொல்லி விடைபெற்றார் அழகேசன்.


அடுத்த நாள் காலை 4 மணிக்கு ஒலிஎழுப்பி(wakeup alarm) வைத்து தூங்கச் சென்றார். காலை 4 மணி... ஒலி எழுப்புகிறது.. எழுந்திரு என்று மனம் சொல்கிறது...உடல் மறுக்கிறது..... இன்னும் 30 நிமிடம் கழித்து எழுந்திருக்கலாம் என்றொரு சாக்கு சொல்லி மனதை அமைதிப் படுத்தி உடல் உறக்கத்தில் தொடர்கிறது.... அழகேசன் எழுந்திருக்கும் போது காலை 7.30. தினமும் இதே நிலைதான்.


21 நாட்கள் கழித்து துறவியிடம் சென்றார் அழகேசன். பிடுங்கும் வெட்கத்துடன் நடந்ததை கூறினார். துறவி புன்னகைத்து,

துறப்பார்மன் துப்புரவு இல்லார் - உறற்பால
ஊட்டா கழியும் எனின். [ ஊழ் 38 : 8 ]

புலன் இன்பங்களிலிருந்து துறவு என்னும் உறுதி இல்லாதவர்கள், அடைய வேண்டிய துன்பங்களில் இருந்து விதி(ஊழ்) நீங்கிவிடும் என்று நினைப்பது ஏன்?

புலனடக்கம் என்னும் உறுதி இருந்தால் விதியை வெல்லலாம் அன்றோ?


அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்

1 comment:

Anonymous said...

அண்ணே உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறேன்