Tuesday, September 05, 2006

ஆ !

பயம் - இது நம் அனைவருக்கும் இருப்பது. என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போது இரவு 10, 11 ஆகிவிடும். ஆற்றைக் கடந்து செல்லவேண்டும். அடர்ந்த இருட்டில் நடந்து செல்லும் போது பயம் கவ்விக் கொள்ளும். வேலை, குடும்ப வாழ்க்கை என்று பயம் இல்லாத ஒன்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

குழந்தை பிறந்தவுடன் அழுகிறது. 9+ மாதங்கள் தாயுடன் இணைந்து இருக்கும் போது அவ்வளவு பாதுகாப்பு உணர்வுடன் இருக்கிறது. அதேபோல் இறையில் இருந்து நாம் பிரிந்திருக்கிறோம் என்ற நிலையில் பயம் வருகிறது.

இறை ஒன்றே. அதுவே மெய்ப்பொருள் என்றுணர்ந்தால் பயம் காணாமல் போய்விடும் அன்றோ?

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு [ மெய்யுணர்தல் 36: 4 ]

ஐந்து புலன்களால் எய்திய நிலை நம் பயத்தை போக்காது. மெய்யுணர்வே பயத்தை நீக்கும்.

ஹாலோவின்(Haloween) அக்டோபர் மாதத்தில் பயத்தை மையப்பொருளாக கொண்ட 'விழா'. அறுவடை விழாவாக ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். இன்றும் விவசாயத்தை ஆதாரமாக கொண்ட கான்சாஸ்(Kansas) போன்ற மாநிலங்களில் இன்றும் ஹாலோவினை அறுவடை விழாவாக கொண்டாடுகிறார்கள். இந்த ஹாலோவின் சமயத்தில் வெளிவரும் திரைப்படங்கள், சந்தைப்பொருட்கள் என்று எல்லாமே 'பயம்' என்பதை மையமாக கொண்டிருக்கும். ஆனால் பயத்தை கொண்டாடுவதாலா பயத்தை நீக்க முடியும்??

மெய் உணர்வால் மட்டுமே முடியும்.

பேரன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

No comments: