Wednesday, March 08, 2006

பகுத்துண்டு...

உணவு நம் வாழ்விற்கு அவசியமான ஒன்று. அவசியம் என்பதால் அளவுக்கு அதிகம் உண்பது எவ்வளவு கெடுதல்.  மேலும் மற்ற உயிர்களை கொன்று அதனால் ஆகும் இறைச்சியை உண்பதை நாம் தவிர்க்க வேண்டும்.  பகுத்து உண்டாலே இவ்வுலகத்தின் பட்டினிகளும், வறுமையும் தொலைந்து போகும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.  [ கொல்லாமை 33 : 2 ]

திருக்குறளின் பொதுமை நெறிகளில் எனக்கு பிடித்த ஒன்று இக்குறள்.

Tuesday, March 07, 2006

திருமகளும் அவள் அக்காவும்

ஓர் ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். இருவரையும் அவர்களின் தந்தை அழைத்து ஆளுக்கு $10,000 கொடுத்து, ஒரே மாதத்தில் யார் பணத்தை அதிகமாக பெருக்கி வருகிறார்களோ  அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றைக் கொடுப்பதாக கூறினார். இரண்டே இரண்டு நிபந்தனைகள் . 1. சூதாட்டம் கூடாது 2. பங்குச் சந்தையில் முதலிட கூடாது.

பத்தாயிரம் பெற்றுக் கொண்ட அண்ணன், உற்சாகமே இல்லாமல், அவனைவிட நிறைய பணமும் வசதியும் உள்ள அவன் நண்பர்களை நினைத்துக் கொண்டான். பொறாமையின் விளைவால் பேராசை கொண்டான். அவனுக்கு தெரிந்தவன் $10,000 கொடுத்தால் ஒரே மாதத்தில் இரண்டு மடங்கு பணம் கொடுப்பதாக ஆசை காட்டினான்.
ஒரு மாதத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள் அல்லவா? கொடுத்த பணத்தை அண்ணன் தொலைத்து விட்டான்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்  [ அழுக்காறாமை 17 : 7 ]
பொறாமை என்று தீக்கொழுந்தை மனத்தில் கொண்டவனை, செய்யவள்(திருமகள்) தன்னுடைய அக்கா மூதேவிக்கு காட்டி விடுவாள். அழுக்காறு வறுமையில்(மூதேவி – வறுமையின் அடையாளம்) கொண்டு போய் விடும் அன்றோ?

தம்பி தனக்கு கொடுக்கப்பட்ட பத்தாயிரத்தை வைத்து என்ன செய்தான் என்று பார்ப்போம். தம்மிடம் இந்த பணத்தை வைத்து நாலு பேருக்கு நன்மை செய்தால் என்ன என்று யோசித்தான். தன் வீடு தேடி வந்த விருந்தினரின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவி செய்தான். ஒரு விருந்தினருக்கு வியாபாரம் ஆரம்பிக்க $5,000 தேவைப் பட்டது. அவரை உபசரித்து அவருக்கு தேவைப் பட்ட பணத்தை கொடுத்தனுப்பினான். இன்னொரு நாள் வந்த விருந்தினர் தனது பெண்ணின் கல்விச் செலவிற்கு $ 5,000 தேவை என்றார். இன்முகத்துடன் அப்பணத்தை கொடுத்தனுப்பினான். இரண்டு விருந்தினர்களுக்கான  தேவைகளை பூர்த்தி செய்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தான் இளையவன்.

இரு சகோதரர்களும் தன்னுடைய பணத்தை செலவு செய்துவிட்டனர். கையில் பணம் இல்லை. அப்பாவிடம் வந்தனர். நடந்ததை அறிந்த தந்தை இளையவனை அழைத்து, “ நீ விருந்தினருக்கு முகமலர்ச்சியுடன் உதவி செய்துள்ளாய். ஆதலால் அப்பணம் நல்ல விதைகளைப் போன்றது. தொழிலுக்கு கொடுத்த பணம் சில ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி, உன்னிடம் உதவியை பெற்றவருக்கும், அவரை சார்ந்தோர்க்கும் பயன் தரும். ஒரு பெண்ணின் கல்விக்கு கொடுத்த பணம் பிற்காலத்தில் அப்பெண்ணின் குடும்பத்திலும் சமூகத்திலும் செல்வத்தை பற்பல மடங்கு பெருக்கும். ஆதலால் பணத்தை ஒரே மாதத்தில் பன்மடங்கு பெருக்கிய உனக்கே என் சொத்தின் பெரும்பங்கை தரப்போகிறேன்” என்றார்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.   [ விருந்தோம்பல் 9 : 4 ]
முகமலர்ச்சியுடன் விருந்தினரை பார்த்துக் கொள்பவர்களின் வீட்டில், நிரந்தரமாக(உறைதல்) திருமகள்(செல்வத்தின் அடையாளம்) வந்து அமர்ந்துக் கொள்வாள்.

Monday, March 06, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 8

ஓர் ஊர் வழியே மூன்று துறவிகள் நடந்து சென்றார்கள். மூவரும் ஒரே மடத்தை சேர்ந்தவர்கள்.  அந்த மூவரையும் அந்த ஊரின் பெரியவர்கள் சந்தித்து வணங்கினார்கள். மாலையிட வேண்டும். யாருக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும் என்ற கேள்வி வந்தது. முதல் துறவி  “மடத்தின் தலைவன் நான். செல்வந்தர்களும், பெரிய மனிதர்களும் மணிக்கணக்காக காத்திருந்தே என்னை பார்க்க முடியும். நான் நினைத்தால்  முடியாதது இல்லை!” இவ்வாறு தன் பெருமைகளை சொல்ல ஆரம்பித்தார்.
இரண்டாம் துறவி நிறைய நூல்களை கற்றவர். அம்மடத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர்.  அவர் “ இந்த மடத்தின் சொத்துக்கள், நிறுவனங்கள் அனைத்தும் என்னால் உண்டானதே . கடந்த 10 ஆண்டுகளில் மடத்தின் புகழை வளர்க்க என்னவெல்லாம் செய்துள்ளேன்” என்றார். யார் பெரியவர் என்ற விவாதம் பெரிதானது.

வந்த ஊர் பெரியவர்களுக்கு என்ன செய்வதென்று ஒரே குழப்பம். மூன்றாம் துறவியை எங்கே காணோம் என்று பார்த்தபோது,  சிவனே என்று மரத்தடியில் ஆனந்த உறக்கத்தில் இருந்தார்.

யான், எனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.  [ துறவு 35: 6]
[செறுக்கு – ஆணவம் ]

யான், எனது என்கின்ற ஆணவத்தை ஒழித்தவர்கள், வானோர்க்கும் கிட்டாத புகழுலத்திற்கு உரியவர்கள்.

Wednesday, February 22, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 7

வெஃகுதல்(அதிகாரம் 18) என்பது பிறன் பொருள் மீது ஆசைப்படுதல். இது தீய எண்ணம். இந்த எண்ணமே முற்றி செயலாக வடிவெடுத்தால் திருட்டுத்தனம். இதை பற்றி கள்ளாமை என்ற அதிகாரத்தில்(29) விரிவாக அறிகிறோம்.

அமுதன் நிறைய கல்வி பெற்று இளம் வயதிலேயே அரசின் உயர் பொறுப்பிற்கு வந்தார். பதவியும் புகழும் தந்த போதை அவருக்கு நியாமற்ற  ஆசைகளை கொடுத்தது.
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றி
குற்றமும் ஆங்கே தரும். [ வெஃகாமை 18 : 1 ]

நியாமற்ற ஆசை ஒரு எண்ணம், விதை.  இலஞ்சம் வாங்க ஆரம்பித்தான் அமுதன். அவனுடைய செயல்களை பார்த்து நண்பர்கள் எச்சரித்தனர்.
வேண்டற்க வெஃகியான் ஆக்கம்- விளைவயின்
மாண்டற்க அரிதாம் பயன்.  [ வெஃகாமை 18 : 7]

எச்சரிக்கைகளை அமுதன் ஏளனத்துடன் ஒதுக்கித் தள்ளினான்.  அவனின் சொத்து 5 -6 ஆண்டுகளிலேயே ரூ 30 கோடிகளை தாண்டியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.  ஒருநாள் அமுதன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி அனைத்து சொத்து ஆவணங்களையும் கைப்பற்றியது.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போல கெடும்.   [ கள்ளாமை 29 : 3 ]
அமுதன் 1 ஆண்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டான்.

கள்ளத்தனம் ஒரு போதை.  ஓராண்டுக்கு பின் வேலைக்கு சேர்ந்த அமுதன், தன்னுடைய பழைய பழக்கத்தை மறக்கவில்லை. முன்பை விட அதிகமாகவும் நவீனமாகவும் தன்னுடைய பொருள் ‘ஈட்டலை’ தொடர்ந்தான்.
களவின்கண் கன்றிய காதல் – விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.  [ கள்ளாமை 29 : 4]

ஆம்! விழுமம்(பழி) அமுதனின் வாழ்க்கையில் சீக்கிரமே வந்தது. நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார். அனைத்து செல்வங்களையும் அரசு எடுத்துக் கொண்டது. செல்வ செழிப்பில் வாழ்ந்து வந்த அவரின் குடும்பம் சில மாதங்களிலேயே கடன் தொல்லையில் தள்ளப்பட்டது. சுற்றம் பழித்தது. அமுதனின் குழந்தைகளே அவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர்.  45 வயதில் அமுதனுக்கு மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அளவுஅல்ல செய்தாங்கு வீவர் – களவு அல்ல
மற்றைய தேற்றா தவர்.  [ கள்ளாமை 29 : 9 ]
ஆம். தனது உழைப்பிற்கு ஏற்ற அளவு என்ன என்று அறிந்தும் களவினால் வீழ்ந்தார் அமுதன். அவர் களவை தவிர வேறு ஏதும் அறியாதவர் அல்லவா ?

மாரடைப்பாலும் மன உளைச்சலாலும் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையானார் அமுதன்.  இன்றோ நாளையோ என்று இருக்கிறார் என்று கேள்வி.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.   [ கள்ளாமை 29 : 10 ]
பிறன் பொருளை திருடுவார்க்கு உயிர் நிலைபெறாது. உடம்பை விட்டு தவறிப்போகும். களவை செய்யாதவர்களுக்கு சொர்க்கத்தில் நிச்சயம் இடம் உண்டு.









Monday, February 20, 2006

விரல் நுனியில் திருக்குறள்

இன்று கதம்பம் சௌந்தர் ஒரு இணைப்பு அனுப்பியிருந்தார்.
http://s92430071.onlinehome.us/suvadik.htm

அற்புதம். அற்புதம். திருக்குறள்களை நினைவில் கொள்ள உதவும் பயனுள்ள செயலி இது. இளங்கோ சம்பந்தம் என்ற அன்பர் வடிவமைத்துள்ளார். வாழ்க வளமுடன்.

Tuesday, February 14, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 6

வானுலகில் இருந்து ஒருநாள் தேவர் ஒருவர் பூமிக்கு அனுப்பப் பட்டார். எதற்காக என்றா கேட்கிறீர்கள் ? சிவனே என்று இருக்காமல் கொஞ்சம் வம்பு தும்பு செய்தாராம். மேலும் தன்னை தேவர்களின் தலைவனாக தேர்வு செய்யவில்லை என்ற புலம்பல் வேறு.

அவர் பூமியில் வந்து சேர்ந்த ஊரில் முத்து என்ற அறவழி வாழும் ஓர் செல்வந்தர் இருந்தார். ஊருக்கு பெரியவரும் கூட. அந்த ஊரில் முத்துவுக்கு பேரும் புகழும் இருந்தது. தன்னுடைய உழைப்பால் ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை வறியோர்க்கும், செலவிட்டு வந்தார். இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தார். வழிபோக்கனாக வந்த அந்த (முன்னால்) தேவருக்கும் இருக்க இடம் கொடுத்து, தனது பண்ணையில் வேலையும் கொடுத்தார் முத்து . சென்ற இடத்திலாவது ஒழுங்காக இருக்ககூடாதா அந்த தேவர்? அங்கும் தனது வேலையை காண்பிக்க ஆரம்பித்தார். வேலை செய்யும் மற்ற தொழிலாளர்களை தூண்டிவிட்டு சதிசெய்ததில் முத்து கொலை செய்யப்பட்டார். முத்து வானுலகம் சென்றபோது அங்கு அவருக்காக சிவப்பு கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது. வானுலகம் வந்த முன்னால் தேவர் சிறையில் கலி சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக செய்தி.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் - புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. [ புகழ் 24 : 4 ]
{ புலவர் - தேவர்.}
இவ்வுலகத்தில் சிறந்த புகழ் ஆற்றினால், வானுலகம் அத்தகையோரை போற்றும். தேவர்களை போற்றாது.

Friday, February 10, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 5

சாவடி, சத்திரம் ஆகியவற்றை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதில் வழிபோக்கர்களுக்கு உணவு படைத்தெல்லாம் பார்த்த நினைவில்லை. எங்கள் கிராம வீட்டில் அப்போது(சிறிய வயதில்) திண்ணை இருந்தது. அந்த தெரு வழியாக செல்வோர் அதில் அமர்ந்து இளைப்பாறிச் செல்வதை பார்த்திருக்கிறேன் . பிறகு எனது பெற்றோர் வீட்டை மாற்றி அமைக்கும்போது, திண்ணை காணாமல் போனது ! விருந்தோம்பலுடன் மிகவும் தொடர்புடையது திண்ணை. முன்பின் தெரியாதவர்கள் கூட திண்ணையில் இளைப்பாறுவதுடன் அந்த வீட்டில் உணவும் உண்டு தங்குவார்கள். அவசர உலகில் நாம் தொலைத்த ஒன்று விருந்தோம்பல். பெற்றோர்களே சுமைகளாக தெரியும்போது விருந்து எம்மாத்திரம் ?

இக்காலக் கட்டத்திலும் நம்மால் செய்யக் கூடியது:
(1) வரும் விருந்தினர்களை குடும்பமாக உபசரித்து, மீண்டும் வாருங்கள் என்று வழி அனுப்பி வைப்பது.
(2) நமது குழந்தைகளை வரும் விருந்தினர்களிடம் அன்பாக பழக செய்தல். நாம் விருந்தினர்களை உபசரிக்கும்போது நம் குழந்தைகளையும் ஈடுபடுத்தல்.
(3) நம் வீட்டிற்கு விருந்தினர் வருகின்றார் என்றால், அவரை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கல்.
(4) முன்பின் தெரியாதவர்களை வீட்டிற்கு வரவேற்று, விருந்தோம்பல். புலம் பெயர்ந்தவர்களுக்கு இது மிகவும் முக்கியம்.

விருந்தோம்பலை நம் வாழ்க்கை நெறியாக கொண்டிருந்தால், இவ்வுலகை விட்டு செல்லும் போது, நமக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும். அந்த சொர்க்கத்தில் உள்ள வானத்தவர்க்கு(தேவர்களுக்கு) நாம் விருந்தாக அமைவோம்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
[ விருந்தோம்பல் 9 : 6 ]

Thursday, February 09, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 4


சொர்க்கத்தில் அன்று தணிக்கை(ஆடிட்) நடந்து கொண்டிருந்தது. ஆதலால் அன்று சொர்க்கத்துக்கு வந்திருந்த 3 நபர்களை தேர்ந்தெடுத்து மறு ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். முதலாமவர் திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றியவர். திருமணத்திற்கு பின் மனம் திருந்தி இல்லறமே நல்லறமாக வாழ்ந்தவர். அவருடைய கோப்பை பார்த்த தணிக்கையாளர் " பெண்ணை காதலித்து ஏமாற்றிய பாவத்திற்காக ஓராண்டு நரகத்தில் இருப்பார். பின்னர் இவரை சொர்க்கத்தில் அனுமதிக்கலாம். " என்று குறிப்பு எழுதினார். இரண்டாமவர் தனது பெரும்செல்வத்தை யாருக்கும் கொடுத்து உதவாமல் நேர்மையாக வாழ்ந்தவர். அவருடைய கோப்பில் " 5 ஆண்டுகள் நரகம். பிறகு சொர்க்கம்" என்று எழுதப்பட்டது. மூன்றாமவர் தனது வாழ்நாளில் கருணையே யாரிடமும் காட்டாதவர். வேலை செய்த இடத்தில் 'கொடுங்கோலன்' என்றும், சுற்றத்தாரால் 'கல்நெஞ்சன்' என்றும் அழைக்கப்பெற்றவர். கரும வினையோ அல்லது வேறோ, சொர்க்கத்துக்கு வந்துவிட்டார் அவர். இவரின் கோப்பை பார்த்த தணிக்கையாளர் " உடனடியாக இவனை பூமியில் கொடுங்கோலாட்சி நடக்கும் நாட்டிற்கு அடிமையாக அனுப்புங்கள் ". சொர்க்கத்தின் பக்கமே வராதபடி தடை உத்தரவே போட்டார் தணிக்கையாளர்.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. [ அருளுடைமை 25 : 7 ]


பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகில் நலமிக்க வாழ்வில்லை; அருள்(கருணை) இல்லாதவர்க்கு சொர்க்கத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை!

Monday, February 06, 2006


சொர்க்கத்தின் கதவுகள் - 3

பெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
[ வாழ்க்கைத் துணைநலம் 6 : 8 ]

தன்னை அடைந்த கணவர் மகிழ்ச்சி பெற்றால், அத்தகைய மனைவியார் தேவர்கள் வாழும் உலகத்திலும் பெருஞ்சிறப்பு பெறுவார்.

நவீன உலகில் இக்கருத்து பொருந்துமா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டதுண்டு. மேலோட்டமாக பார்க்கும் அனைவருக்கும் அப்படிதான் இருக்கும். மனைமாட்சி(குறள் 6 : 2 ) என்றும் , மாண்பு(6 : 3 ) என்றும் மனையாளை குறிப்பிட்டுவிட்டு, இங்கே எப்படி சொல்லலாமா ?

மனைவியான பெண் தன்னை மட்டும் நிலைநிறுத்தி வாழ்ந்தால் அத்தகைய குடும்பங்கள் என்ன ஆகும் என்பதை பார்க்கிறோம். அதேபோல் கணவனும் சுயநலத்துடன் செயல்பட்டால் அதே விளைவுதான். ஆனால் மனைவியை ஆதாரமாக கொண்டு தன் வாழ்க்கையை அமைக்கும் கணவன் தொட்டதெல்லாம் பொன்னாகும். வாழ்க்கை நிறைவு பெறும். அத்தகைய மனையாள் தேவர்கள் வாழும் ( புத்தேள் ) உலகத்திலும் பெருஞ்சிறப்பு பெறுவது உறுதி. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது இந்த உண்மை புரியும். காந்தி திரைப்படத்தை பலமுறை பார்த்திருந்தாலும், சமீபத்தில் டிவிடி வாங்கி குடும்பத்துடன் பார்த்தேன். அன்னை கஸ்தூரிபாவின் துணையும் ஆதாரமும் இல்லாமல், காந்தி உலகம் வியக்கும் பணிகளை செய்திருக்க முடியுமா ? ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் காந்தி நிகழ்த்திய போராட்டங்களிலும், சமுதாய பணிகளிலும் அன்னை கஸ்தூரிபா காந்தி உற்றதுணையாக நின்றதை பார்க்கிறோம். வியக்கிறோம்.

அகத்தில்(வீட்டில்) வெற்றி பெறாதவன், புறத்தில்(உலகில்) வெற்றி பெற முடியாது அல்லவா ?

Friday, February 03, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 2

இல்வாழ்க்கை அதிகாரத்திலேயே, நாம் ஏற்கனவே சொன்ன கருத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். வீடுபேறு அடைய 'தனியாக' எந்த முயற்சியும் தேவையில்லை.

கோதண்டம் எளியவர். ஏழை. அவர் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் இடையே உள்ள பெரிய ஆற்றில் படகு ஓட்டி பிழைப்பு நடத்துபவர். விவசாயம் வேறு தனியாக உண்டு. ஒரு நாள் அவரின் படகில் வேதங்களை கற்ற ஒரு வேதியர் ஏறினார். படகு நகர்ந்தது.
வேதியர் கோதண்டத்தை பார்த்து "படகு ஓட்டுபவரே, தினமும் மந்திரங்கள் ஓதும் பழக்கம் உண்டா" என்றார்.
"இல்லை சாமி" என்றார் படகு ஓட்டி.
" அப்படியா!. உன் வாழ்க்கையின் கால்பகுதியை வீணாக்கி விட்டாயே. கோவிலுக்காவது தினமும் போகும் பழக்கம் உண்டா ? கேட்டார் வேதியர்.

" இல்லை சாமி. எப்போதாவது கோவில் விசேசம் என்றால் போவேன்" படகு ஓட்டி பதில் சொன்னார்.

" அடடா, வாழ்க்கையின் பாதியை வீணாக்கிவிட்டாயே" என்று கவலை கொண்டார் வேதியர்.

படகு பாதி ஆற்றை கடந்தது. காற்றும் பலமாக வீச, படகு வேகமாக
அசைந்து நீரில் மூழ்க ஆரம்பித்தது. பதற்றத்துடன் படகு ஓட்டி, வேதியரை பார்த்து, " சாமி, உங்களுக்கு நீந்த தெரியுமா ? " என்றார் . " இல்லை" என்று வந்தது பதில்.

" அப்படியா சாமி, வாழ்க்கையை முழுவதும் வீணாக்கிவிட்டீர்களே " என்றார் படகு ஓட்டி கோதண்டம் அப்பாவியாக . இருப்பினும் படகு ஓட்டி மனமிறங்கி ஒருவழியாக வேதியரை காப்பாற்றி கரையேற்றினார்.

அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் - புறத்து ஆற்றில்
போய் பெறுவது எவன் ? [ இல்வாழ்க்கை 5 : 6 ]


அறம் கலந்த இல்வாழ்க்கையை ஒருவர் மேற்கொண்டால் , பிரம்மசாரியம் முதலான புற முயற்சிகளால் என்ன பயன் ?

அறம் கலந்த இல்வாழ்க்கை மேற்கொள்பவர்கள் மோட்சம் அடைய முடியுமா? முடியும். அந்த நம்பிக்கையை- உறுதியை இல்வாழ்க்கை அதிகாரத்தின் கடைசி குறளில் காணலாம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். [ இல்வாழ்க்கை 5 : 10 ]

இறந்தால் எங்கே செல்வீர்கள் என்று கேட்டால், வானத்தை காட்டி அங்கே செல்வோம் என்று பலர் சொல்வதை பார்க்கிறோம். வான் உறையும் அத்தகைய இடத்துக்கு செல்ல மற்ற பல கதவுகளும் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்....

அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்


Monday, January 30, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 1

அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால்களை விளக்கும் திருக்குறளில், நான்காவதான 'வீடுபேறு' விடுப்பட்டு போய்விட்டது ஏன் என்று சிலர் கேட்பர். வீடுபேறை தனியான தொகுதியாக வைக்காவிடினும் , நிறைய அதிகாரங்களில் அத்தகைய வீடுபேற்றை எப்படி பெறுவது என்று அழகாக சொல்லுகிறார் வள்ளுவர்.

ஒரு $20 பில்லியன் நிறுவனம் உள்ளது. அதில் பலதுறைகள் உள்ளன. மார்க்கெட்டிங், மனித ஆற்றல், நிதி... திருமுருகன் எம்.பி.ஏ படித்து இந்த நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்கிறார். முதலில் அவருக்கு நிதித் துறையில் வேலைத் தருகிறார்கள். அங்கு 2 வருடங்கள் வேலை செய்து நிதி நிர்வாகத்தின் நுட்பங்களை திறமையாக கற்றுக்கொள்கிறார் . பிறகு மார்க்கெட்டிங்கில் 3 ஆண்டு.. அதிலும் சிறப்பான பணி. பிறகு மனித ஆற்றல் துறையில் 2 ஆண்டு. இப்படி அனைத்து நிறுவனப் பணிகளையும் அவர் திறம்பட செய்வதை பார்த்த அந்நிறுவன தலைவர் திருமுருகனை தனது நிர்வாக உதவியாளராக(executive asst) நியமிக்கிறார். இந்நிலையில் திருமுருகன் நிறுவனத்தின் வெற்றிகளை தீர்மானம் செய்யும் வீயூகங்கள் வகுப்பதில் பங்குபெறுகிறார். இந்த நிலையில் 6 ஆண்டுகள் பணியாற்றியபின், நிறுவனத்தின் 12 துணைத் தலைவர்களில் ஒருவராக அவரை நியமனம் செய்கிறார்கள். நிறுவனத் தலைவர் ஓய்வு பெரும் காலம் வந்த போது அவரின் வாரிசாக கடும்போட்டிக்கு இடையே திருமுருகனை தலைவராக, அந்நிறுவனத்தின் போர்டு தேர்ந்தெடுத்ததில் நமக்கெல்லாம் வியப்பு இல்லைதானே ?

வீடுபேறும் அப்படித்தான். அதற்கென்று படிப்பு ஒன்று இல்லை. அதற்கு நேரடியாக அனுபவம் இல்லாமல் விண்ணப்பிக்க முடியாது. ஆனால் அறம், பொருள் என்ற நிலைகளில் சிறந்து பணியாற்றினால் அத்தகுதியே வீடுபேறை நமக்கு தரும். வள்ளுவம் சொல்லும் செய்தியும் இதுவே.

நான் இதுவரை ஆழமாக படித்து மனப்பாடம் செய்துள்ள 31 அதிகாரங்களில் மீண்டும் மீண்டும் எழு பிறப்பு என்றும், புத்தேள் என்றும், மறுமை என்றும் கூறுவதை பார்க்கின்றேன். அறம், பொருள் அதிகாரங்களில் வீடுபேறு நிலைக்கு ' உள்ளே செல்ல' நிறைய கதவுகளை வைத்துள்ளதை பார்க்கிறோம்.
அவற்றை பற்றி எழுதுகிறேன்...


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Friday, January 27, 2006

சான்றோர் - ஐந்தாம் பகுதி

சான்றோர் என்று மற்றோரால் அங்கீகரிக்கப்படும் போது 'நமக்கு எல்லாம் தெரியும்' என்ற எண்ணம் வரும். அப்போது பொது மேடைகளிலோ அல்லது தனியாக பேசும்போதோ, சான்றோர் பயனில்லாதவற்றை பேசுவதுண்டு.


ஆடலரசன் சொல்லாற்றலும், அறிவாற்றலும் நிறைந்த அரசியல்வாதி. பொதுமக்களுக்கு இடைவிடாது தொண்டாற்றி வருபவர். நல்லவர். கட்சி தலைமையிடமும் நல்ல பெயரும் இருந்ததால் பாரளுமன்ற தேர்தலில் எளிதாக வெற்றிபெற்று டெல்லி சென்றார். பொதுவாக நேரம் வரம்பு இல்லையென்றால் திறம்பட பேசும் வல்லமையுள்ளவர் அவர். பாராளுமன்றத்தில் தனக்கு கொடுக்க பட்ட குறைவான நேரத்தில் பேசுவதற்கு பழக்கப்படாததால் அவரின் பேச்சுக்கள் பயனில்லாத பேச்சுக்களாகவே அமைந்தது. இதை கவனித்த அக்கட்சியின் தலைவர் ஆடலரசனை தனியாக அழைத்தார்.

" ஆடலரசா, உன்னைப் போன்ற அரசியலார்க்கு நயம் உடைய இனிய சொற்களை பேசும் ஆர்வம் மேலோங்கி இருக்கும். அது அவசியம். ஆனால் நயமில்லாத கசக்கும் சொற்களை பேசினாலும் , எக்காரணத்தை கொண்டும் பயன் இல்லாத சொற்களை பேசாதே ! நயம் உடைய சொல் கேட்பவருக்கு அப்போதுமட்டும் இனிக்கும். ஆனால் பயன் உடைய சொல் கேட்டவருக்கு, பின்னர் கூட அது இனிக்கும். இதை புரிந்துகொண்டால் பாராளுமன்றத்தில் நீ தடம் பதிப்பாய். " என்று வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

நயனில சொல்லினும் சொல்லுக ! சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. [ பயனில சொல்லாமை 20 : 7 ]

சான்றோர் நயமில்லாத சொற்களை சொன்னாலும் சொல்லலாம். ஆனால் பயனில்லாத சொற்களை அவர்கள் சொல்லாமல் இருப்பது நலன்.

Tuesday, January 24, 2006

சான்றோர்- 4

சான்றோரின் அணிகலனையும், வழிகாட்டும் விளக்கையும் பார்த்தோம். சான்றோரின் ஒழுக்கம் எப்படி இருக்க வேண்டும் ?


சாமிநாதன் கல்வியும் புகழும் பெற்றவர் . இவரை போல் அல்லவா நாம் வாழ வேண்டும் என்றும் சொல்லும் அளவிற்கு சான்றோன் என்று அனைவராலும் புகழப்பட்டவர். வயது சுமார் 45 இருக்கும். ஒருமுறை அவருடைய மனைவியும் குழந்தைகளும் ஊருக்கு சென்றிருந்த நேரம். அவர் வீட்டில் வேலை செய்யும் பத்மா, என்றும் போல் அன்று வீட்டை துடைத்துக் கொண்டிருந்தார். பத்மா திருமணமான பெண். தன் வீட்டின் பொருளாதார தேவைகளுக்காக சில வீடுகளில் வேலை செய்து வருபவர். அழகிய பெண் கூட. தனிமையான அந்த சூழலில் பத்மாவை பார்த்த சாமிநாதனின் மனம் தடுமாற பார்த்தது. அடுத்த கணம் சற்றே கண்களை மூடி, தன் மனைவியையும் குழந்தைகளையும் நினைத்து பார்த்தார். ஆசைக்கு அடிமைப்பட்டு இன்னொருவர் மனைவியை அடைய நினைப்பது எவ்வளவு கேவலம் என்று எண்ணியவாறு வீட்டுக்கு வெளியே செல்லலானார். பேராண்மைக்கு இலக்கணம் அல்லவா அது ?

பிறன்மனை நோக்காத பேராண்மை; சான்றோர்க்கு
அறன் ஒன்றோ? ஆன்ற ஒழுக்கு. [ பிறனில் விழையாமை 15 : 8 ]

சான்றோர்க்கு பிறன்மனைவியை பார்க்காத பண்பை போன்று சிறந்த அறமும் ஒழுக்கமும் இல்லை.

Monday, January 23, 2006

சான்றோர் - 3

சான்றோர்க்கு அணி என்ன என்பதை பார்த்தோம். அவருக்கு வழிகாட்டும் விளக்கு ஒன்று உள்ளது. அதை இங்கே பார்ப்போம்..

வாழ்க்கை என்பது ஒரு அழகிய பயணம். அப்பாதையில் ஒளி, இருள் என்று இரண்டும் உண்டு. அதிலும் இருட்டில் நடக்கவேண்டுமானால் நல்ல விளக்கு ஒன்று இருந்தால் நல்ல துணையாக இருக்குமல்லவா ? சான்றோருக்கு அப்படித்தான். நல்ல வழிகாட்டும் விளக்காக அமைவது அவரின் வாய்மை மட்டுமே ஆகும். மற்றவை(எ-கா: நண்பர்கள், புத்தகங்கள் ... ) வழிகாட்டும் விளக்குகள் போன்று தோன்றினாலும் பொய்யாமையே உண்மையான விளக்காகும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல - சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு. [ வாய்மை 30 : 9 ]


வாய்மையை உண்மை, மெய் என்றும் அழைக்கலாம். " உள்ளத்தில் இருந்து வருவது உண்மை . வாயினால் சொல்வது வாய்மை. உடலில்(மெய்) ஒன்றர கலந்திருப்பது மெய் " என்று அழகிய பொருளை திருக்குறள் மரபுரையில் தேவநேய பாவாணர் குறிப்பிட்டுள்ளார்.

Friday, January 20, 2006

சான்றோர் - 2

சான்றோர் எவ்வளவு பொருள் பொதிந்த சொல் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அத்தகைய சான்றோரின் பண்புகளை வள்ளுவர் பல அதிகாரங்களில் சொல்வதை பார்க்கிறோம்.

ஒருவர் செல்வந்தராக இருக்கும்போது மற்றோருக்கு கொடுப்பது கடினம் அல்ல. நாம் சாதாரண பொருளாதர நிலையில் இருக்கும்போது கொடுப்பது அரிது.

ஒருவன் நல்ல மனைவி, குழந்தைகள் பெற்று இல்லறம் நடத்துவது கடினமன்று. ஆனால் பிறன் மனைவியை அடைய மனதாலும் நினைக்காமல் இருப்பது அரிது.

இன்னும் நடைமுறை வாழ்க்கையில் சொல்வதானால் , ஆச்சாரமான சூழ்நிலையில் ஒருவன் குடிக்கும் பழக்கம் இல்லாமல் இருப்பது கடினமன்று. ஆனால் மதுபான கடையில் வேலை செய்யும் ஒருவன் குடிக்காமல் இருப்பது சிறப்பு. அரிது.

சான்றோருக்கான இலக்கணமும் அப்படிதான். இதோ அப்படி ஒன்று பார்ப்போம்....

வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் நிலையானது அல்ல. ஆனால் அத்தகைய உயர்விலும், தாழ்விலும் மனம் மாறாதிருப்பது சான்றோர்க்கு அணியாகும். சின்னசாமி கிராமத்தில் சாதாரண நிலையில் இருந்தபோது அவருக்கு ஆசைத்தம்பி என்ற ஒரு நண்பர் இருந்தார். சின்னசாமிக்கு ஒரு மகன். ஆசைத்தம்பிக்கு ஒரு அழகிய மகள். பள்ளிப்பருவத்திலேயே அவர்கள் நட்புடன் பழகி வந்தார்கள். ஒரு பொங்கல் பண்டிகையின் போது இருவரின் குடும்பத்தினரும் இருக்கும்போது, சின்னசாமி தனது மகனை ஆசைத்தம்பியின் பெண்ணுக்கே மணமுடிப்பதாக வாக்கு கொடுத்தார். சின்னசாமி தனது கடுமையான உழைப்பாலும் மதி நுட்பத்தாலும் தொழில் தொடங்கி கோடீஸ்வரானார். புலம் பெயர்ந்து வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். அவர் மகனும் கல்வியும் ஒழுக்கமும் நிறைந்து திருமண வயதை எய்தினார். ஆசைத்தம்பியின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் இல்லை. ஆண்டுகள் பல ஓடினாலும் சின்னசாமி தன் நண்பர் ஆசைத்தம்பிக்கு கொடுத்த வாக்கை மறக்கவில்லை. சின்னசாமி தனது குடும்பத்தினருடன் ஆசைத்தம்பியின் வீட்டுற்கு சென்றார். மங்கல பொருட்கள் நிறைந்த தாம்பூல தட்டை கொடுத்து தன் மகனுக்கு பெண் கேட்டார் சின்னசாமி. அங்கிருந்த பெரியோர்களுக்கு ஆச்சரியம். செல்வ செழிப்புடன் வாழும் சின்னசாமி எங்கே ? ஏழை ஆசைத்தம்பி எங்கே ? இருப்பினும் சொன்ன சொல்லை காப்பாற்றி, இளம் உள்ளங்களை இணைத்து வைத்த சின்னசாமியை அனைவரும் வாழ்த்தினர்.

கேடும் பெருக்கமும் இல் அல்ல ; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.


[ திருக்குறள் – நடுவு நிலைமை 12 : 5 ]
[இல் – இருப்பது ; கோடாமை – மாறாமை ]

Tuesday, January 10, 2006

நாம் அஞ்சும் இரண்டு..

நம்மில் பலருக்கு உள்ள பயங்களில் தலையானது மரணம். அடுத்தது 'இப்போது உள்ள நிலையில் இருந்து கெட்டுவிட கூடாது' என்ற அச்சம். செல்வந்தாராக உள்ளவர் தான் ஏழையாகிட கூடாதே என்ற பயம். அதிகாரம் உள்ளவர்களுக்கு அது போய்விடுமோ என்று பயம்.

ஆனால் இவ்வுலகில் வறியோர்க்கு கொடுத்து கொடுத்து, அறவாழ்க்கை வாழும் மக்களுக்கு இந்த இரண்டு அச்சங்களும் இருக்காது.

நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது. [ புகழ் 24 : 5 ]

வாழ்க்கையில் கேடு வரும்போது அதை தாங்கிட ஒரு மெத்தை உண்டென்று கற்பனை செய்துபாருங்கள். மேலும் 'என்றும் வாழ்கிறோம்' என்ற எண்ணம் இருந்தால் மரண பயமும் போகும் அல்லவா ? இவ்விரண்டும் புகழ்புரிந்த வித்தகர்க்கு மட்டுமே முடியும்.

வித்தகர் - ஈகை செயற்களால் புகழுக்கு வித்திட்டவர் .
நத்தம் - நத்தை போன்ற மெத்தை - குஷன்
சாக்காடு - இறப்பு.


அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்

Friday, January 06, 2006

சான்றோர் என்பார்...(1)

சான்றோர் என்றால் பெரியோர் என்று பொருள் கொள்ளலாம் எனினும், அதை விட ஆழமான பொருள் உள்ளதாகவே தோன்றுகிறது.

சான்றோர் , நீத்தார் , பெரியோர் என்பவை வெவ்வேறு பொருள் உடையவை என்பது என் கருத்து.

நீத்தார் என்போர் தன்னை உணர்ந்த ஞானி என கொள்ளலாம். அவர் ஒழுக்கத்து நீத்தார்(3: 1), துறந்தார்(3 : 2 ), இருமை வகை தெரிந்தவர் ( 3 : 3 ) ,உரன் எனும் தோட்டியான்(3:4 ), ஐந்து அவித்தான்(3: 5), செயற்கரிய செய்வார்(3: 6), சுவைகளின் வகை தெரிவார்(3 : 7) , நிறைமொழி மாந்தர்(3 : 8 ), குணம் எனும் குன்றேறி நின்றார்(3:9 ), அறவோர்(3: 10) என்று அவரின் வடிவத்தினை 'நீத்தார் பெருமை' அதிகாரத்தில் பார்த்தோம். இந் நிலையை துறவற பண்புகளை பின்பற்றியிருந்தால் அடைய முடியும்.

சான்றோர் என்போர் ஒருவரின் வெற்றிக்கு உலகம் கொடுக்கும் சான்று(அங்கீகாரம்). சான்று - உதாரணம் - benchmark - example. ஒரு குடும்பத்தில் தீய பழக்கம் உடைய ஒரு பையன் இருக்கிறான். அவனை அவர் தந்தையும் தாயும் கண்டிக்கிறார். அவனுக்கு ஒரு சிறப்பாக வாழும் ஒருவரை உதாரணமாகக் கொடுக்க வேண்டும். நினைத்துப் பார்க்கிறார்கள்.
" இங்கே பார். பூங்கோதையை உனக்கு தெரியும். அவர் நமக்கு தூரத்து சொந்தம் கூட. அந்த அக்கா எவ்வளவும் பெயரும், புகழுடன் இருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு கூட அவருக்கு குடியரசு தலைவரின் பரிசு ஒன்று கிடைத்தது தெரியும் உனக்கு. அவரை போல அல்லவா நீ வாழ்க்கையில் உயர வேண்டும்" என்று சொல்கிறார்கள்.

அந்த பையன் நினைத்துப் பார்க்கிறான். அப்பா சொல்லும் பூங்கோதை அக்கா உண்மையிலேயே சிறந்த உதாரணமாக இருந்தால் மட்டும் , அவன் மனதில் அப்பெண் உதாரணமாக அமையப் போகிறார். பூங்கோதை அச்சமூகத்தின் சான்றோர் ஆகிறார். சான்றோர் என்பது சமூக அங்கீகாரம். குடும்ப அளவில் உதாரணமாக காட்டக்கூடிய பண்புகளை கொண்டு வாழ்வது.

மக்கட்பேறு அதிகாரத்திலேயே( # 7 ) தாயின் பூரிப்பில் சான்றோர் என்பதற்கான ஊக்கத்தை அளிப்பதை பார்க்கிறோம்.

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய். [ மக்கட் பேறு 7 : 9 ]

[ குறிப்பு : இங்கு மகன் என்பது பொதுப் பெயர். மகளுக்கும் பொருந்தும் ]

என் இரண்டாம் பெண் பிறக்கும்போது(மார்ச் 28,2002) மகப்பேறு அறையில் இருந்தேன். அந்த காட்சி என் மனதில் பசுமையாக உள்ளது. பிறந்த உடன் செவிலியர் குழந்தையை என் கையில் கொடுக்கின்றர். அப்போது குழந்தையின் கண்கள் இரண்டும் மூடி உள்ளன. என் மனைவி( நானும் தான்), குழந்தையின் கண்கள் மூடியுள்ளதே என்ற அடைந்த பதற்றத்தையும், பின் செவிலியர், குழந்தை இருட்டிலிருந்து மிகவும் பிரகாச வெளிச்சத்திற்கு வருவதால் அப்படி உள்ளது என்று விளக்கியவுடன் என் மனைவி அடைந்த உவகையை நான் அறிவேன். அந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியில் இருந்தாலும், தாயின் பரவச உணர்ச்சிகளையும், பெரும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்காது. அத்தகைய உவகையையும் விட, ஒரு தாய் தன் மகள்/மகன் 'சான்றோர்' என்று மற்றோரால் அழைக்கப்படும்போது அடையும் மகிழ்ச்சியோ பெரிது !



அன்புடன்,

கரு. மலர்ச் செல்வன்

Wednesday, January 04, 2006

பிறன் மனைவியை அடைவான் என்ன ஆவான் ?

கற்பு நெறி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. மனைத்தக்க மாண்புடையாளாகவும், கற்பு என்னும் உறுதி கொண்டாள், கொழுநன் தொழுதெழுவாள் என்று மனைவிக்கு நெறிகளை காட்டிய(அதிகாரம் 6 - வாழ்க்கைத் துணைநலன் ) திருவள்ளுவர், ஆணுக்கும் அத்தகைய நெறிகளை 'பிறனில் விழையாமை' அதிகாரத்தில் கூறுவதை பார்க்கிறோம்.

கணவன் வெளியூருக்கோ வெளிநாடுக்கோ வேலை செய்யும் நிலையில் பெண்கள் தனியாக வீட்டில் ( அல்லது குழந்தைகளுடன்) வசிப்பதை பார்க்கிறோம். அல்லது ஒன்றாக வாழ்ந்தாலும் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். இத்தகைய மனநிலையில் மனைவிக்கு ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய ஏக்கம் வரலாம். இது கற்பு நெறி அல்ல. அத்தகைய நிலையில் வேறோருவன் அப்பெண்ணின் வாழ்க்கையில் புகுவது எளிதாகினும், அப்படி செய்பவனுக்கு எக்காலத்திலும் அழியாத பழி வந்து சேரும்.

எளிதென இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. [ பிறனில் விழையாமை 15 : 5 ]

அப்படி பிறன் மனைவியை அடைந்தவனுக்கு, பழி தனியாகவா வந்து சேரும் ? இல்லை. பகை, பாவம், அச்சம் ஆகிய மூன்றும் கூடவே வரும்.

பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண். [ பிறனில் விழையாமை 15 : 6 ]

இதை வலியுறுத்தும் கதைகளை நான் படித்திருந்தாலும், சமீபமாக டிவிடியில் 'மெட்டி ஒலி' என்ற திரைதொடரின் ஒருபகுதியில் பார்த்தது....

மாணிக்கம் கடுமையாக உழைக்கும் மனிதர். அதே ஊரில் சரளா என்ற குடும்பப் பெண், கணவர் வெளிநாட்டில் வேலைசெய்ய, தனியாக வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பார். மாணிக்கதிற்கும் சரளாவிற்கும் கள்ள காதல் . பின்னர் மாணிக்கத்தின் திருமணத்திற்கு பின் , அத்தொடர்பு இல்லாமல் போனாலும் , பழி நிலைத்து மாணிக்கத்திற்கு வேலை போய்விடுகிறது. பின்னர் அவன் வாழ்க்கையில் நடக்கும் சிரமங்களுக்கு அப்பழியோடு வந்த பகை, பாவம், அச்சம் காரணமாகிறது.

அதனால் தான் நம்முன்னோர்கள், ஐம்பெரும் பாதக செயல்களில் ஒன்றாக பிறன் மனைவியை நாடும் குற்றத்தை வைத்துள்ளார்கள்.



அன்புடன்,
கரு. மலர்ச் செல்வன்

Thursday, December 29, 2005


பொன்போன்ற மேனி...

எவ்வித அலங்காரமோ அல்லது அணிகலனோ இல்லாமல் சிலர் பொன்போல் ஒளிவிட்டு திகழ்வதை பார்க்கிறோம். உதாரணத்திற்கு இங்குள்ள சில ஞானிகளை பாருங்கள்.
யோகி இராம்சுரத்குமார். அருள்வடிவானவர்.


மனித தொண்டே மகேசன் தொண்டாக கொண்டு வாழ்ந்த அன்னை தெரசா.


பாமர மக்களுக்கும் பயன்படும் வகையில் எளிய வாழ்வியல், இறை உணர்வு ஊட்டி வரும் வேதத்திரி மகரிஷி அவர்கள்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் - துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவருக்கு. [ தவம் 27 : 7 ]

பொன்னை சுட்டால் வரும் சுடர்போல், துன்பத்தை நோற்பவர்கள்(தவமிருப்பர்கள்) ஒளிவீசும் தன்மை பெறுவார்கள்.

இத்தகைய நிலையை அடைந்தவர்களை உலகத்தின் உயிர்கள் அனைத்தும் தொழும்.

தன்னுயிர் தான் அறப் பெற்றானை- ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும் [ தவம் 27 : 8 ]

நாம் அனைவரும் உயிர் பெற்றுள்ளோம். ஆனால் அவ்வுயிரை 'முழுமையாக' பெற்றுள்ளோமா என்பது சிந்திக்க வேண்டியது. உயிர் என்றால் என்ன ? அவ்வுயிரை நாம் முழுமையாக பெற சில பயிற்சிகளை மனவளக் கலை மன்றத்தினர் தொகுத்துள்ளனர். அதில் உயிரை நாம் முழுமையாக பெறுவதற்கு உதவுவது காய கல்ப பயிற்சி. ஆர்வமுள்ளோர்

www.vethathiri.org

உலகம் முழுவதும் இம்மன்றத்தின் ஆசிரியர்கள் உள்ளனர்.

அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்



Tuesday, December 27, 2005

கரும வினையை போக்கும் தவம்

கருமம் என்பது பொருள் பொதிந்த அழகியத் தமிழ்ச் சொல். கருவில் இருக்கும் போதே நம் பாதை(விதி) நிர்ணயிக்கப் படுவதால் கருமம் எனப்பட்டது. அதுவே கர்மா(karma) என்று வடமொழி பேசுபவர்களால் மருவி வழங்கப்படுகிறது. வங்கிக் கணக்கு போல இது. நமது முன்பிறவியில்(முன் பிறவியில் நம்பிக்கை இல்லாதோர் முன்னோர்களின் செயல் என்று எடுத்துக் கொள்ளலாம்) செய்த செயல்களை விளைவே, இப்பிறவியின் ஆரம்ப கணக்கு(opening balance) எனக் கொள்ளலாம். இப்பிறவியில் நாம் செய்யும் செயல்கள்(அறம்) ஆரம்பக் கணக்கை கூட்டுகிறதா(credit) அல்லது குறைக்கிறதா(debit) என்பது அச்செயல்களின் தண்மையை பொருத்தது. புண்ணியம், பாவம் என்பதெல்லாம் இதற்கு நாம் புழங்குகின்ற சொற்கள்.

நம்மின் பழைய தீயவினைகளின் விளைவுகளை குறைத்து, நல் வினைகளின் பாதையில் நம்மை செலுத்த முடியுமா ? விதியின் பாதையை மாற்ற முடியுமா ?

முடியும் !

தவம்செய்வார் தம்கருமம் செய்வார் - மற்றல்லார்
அவம் செய்வார் ஆசை உட்பட்டு. [ தவம் 27 : 6 ]

தவம் செய்வதால்(துன்பம் பொறுத்தல்; உயிர்களுக்கு தீங்கு செய்யாமை - தவம் 27:1) நம் கருமவினைகளை நீக்க முடியும். அப்படி அல்லாமல், புலன்களின் ஆசைக்கு உட்பட்டவர்கள் அவம் செய்பவர்கள்.


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்