Sunday, May 27, 2007

யாரை நினைத்துக் கொள்ள வேண்டும்?



ஆனந்தனை பற்றி உங்களிடம் சொல்லியாக வேண்டும். கல்லூரியில் என்னுடன் ஒன்றாக படித்தவன். வசதியான குடும்பத்து பையன். கோவை பக்கத்தில் உள்ள பொறியியல் நிறுவனம் சொந்தம் அவன் குடும்பத்துக்கு. ஆனாலும் எங்களிடம் இயல்பாக பழகியவன்.

கல்லூரி முடித்து சுமார் 15 ஆண்டுகள் கழித்து, கோவையில் ஆனந்தனை அவனின் நிறுவன தலைமையகத்தில் சந்தித்தேன். 'மேலாண்மை இயக்குநர்' என்று கூறியது நுழைவாயில். பலவற்றை நினைவு கூர்ந்தபின், அந்த அறையில் மாட்டியிருந்த 4 தலைமுறை(முன்னோர்) புகைப்படங்களை பற்றி கேட்டேன். அவன் புன்முறுவலுடன், " என் அப்பா இந்த பொறுப்பை என்னிடம் கொடுக்கும்போது ஆனந்தா, மூன்று தலைமுறைகளுக்கு முன் நாம் நிறைய நூற்பாலைகள், விவசாயத் தோட்டங்கள் என்று செல்வ செழிப்புடன் இருந்தோம். ஆனால் என் தாத்தாவும், அப்பாவும் குடிப் பழக்கத்தாலும், சூதாட்டத்தாலும் பெரும்பான்மையான சொத்துக்களை இழந்தனர். இன்று நம்மிடம் விஞ்சியிருப்பது இந்த தொழிற்சாலை மட்டும். அளவற்ற புற-மகிழ்ச்சியை மனம் நாடும் போது அவ்வாறு கெட்டவர்களை நினைத்துக் கொள் என்றார்.

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக - தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. [ பொச்சாவாமை 54 : 9 ]
( உள்ளுக - நினைக்க ; மைந்து - விருப்பம் )

உண்மைதானே.செல்வமும் புகழும் வந்தாலே உடனே புற-மகிழ்ச்சியில் ஈடுபட தோன்றும். அப்போது நம்முடைய கடமைகளை மறப்போம். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் எத்துணை எத்துணை சான்றுகளை பார்க்கலாம்!



அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்