65 72 73
'65 72 73' என்று என் நண்பர் ஒருவரை அழைத்தேன். அவர் டேல் கார்னகி, டோஸ்ட்மாஸ்டர் என்ற பயிற்சிகளையெல்லாம் எடுத்தவர். திருக்குறளை ஆழ்ந்து படித்தவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நன்றாக மேடையில் பேசக்கூடியவர்.
உடனே அவர், " நீங்கள் எப்போது தொழிலை மாற்றினீர்கள்? எண் சோதிடமெல்லாம் சொல்கிறீர்" என்றார்.
" அதெல்லாம் இல்லை. திருக்குறளில் 65, 72, 73 ம் அதிகாரங்கள் என்ன ?" என்றேன் நான்.
" 65 - சொல்வன்மை
72 - அவை அறிதல்
73 - அவை அஞ்சாமை " உடனடியாக பதில் கூறினார்.
" இந்த மூன்றும் அமைந்தால் சிறந்த பேச்சாளர் தானே. அதனால்தான் உங்களை இனிமேல் 65 72 73 என்று அழைக்கலாம் என்று உள்ளேன்." என்றேன் !!
முத்தமிழ் அறிஞர் கி. ஆ.பெ.விசுவநாதன் 50 ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் ஒரு கூட்டத்தில் பேசிய செய்தியாக என் அப்பா சென்ற ஆண்டு என்னிடம் கூறினார். நாம் அன்றாட பேச்சு வழக்கத்தில் திருக்குறள் அதிகார எண்களை கூறி பழக வேண்டும் என்றார். நல்லதோர் கருத்தாக எனக்கு தோன்றியது. வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களைத் தானே 133 அதிகாரங்களாக வள்ளுவம் நமக்கு தருகிறது.
இதன் அடிப்படையில் எனக்கும் என் பெண்ணுக்கும் நடக்கும் சிறு உரையாடலை இங்கே தருகிறேன்.
" 40, 14 எப்படி ? " நான்.
" 60 !!!! தினமும் இதே 42 ? நான் எப்போதாவது உங்களிடம் 68 எப்படி என்று கேட்டிருக்கேனா ? " அவர்.
"38 ! " என்று நான் நினைத்துக் கொண்டேன்.
சிறு குறிப்பு : மேலே உள்ள எண்களை அதிகார தலைப்புகளாக மாற்றினால்...
40 - கல்வி ; 14 - ஒழுக்கம் ; 60 - ஊக்கமுடைமை ; 42 - கேள்வி ; 68 - வினை செயல்வகை(வேலை) ; 38 - ஊழ் ( விதி) .
"
Showing posts with label சொல்வன்மை. Show all posts
Showing posts with label சொல்வன்மை. Show all posts
Monday, April 21, 2008
Subscribe to:
Posts (Atom)